அகன்ற நெற்றியா... நீங்கள்தான் அதிர்ஷ்டசாலி! சாமுத்ரிகா லட்சணம் சொல்லும் அபூர்வ த...
கொடுத்த வாக்கைக் காப்பாற்றிய முதல்வர்... விவசாயிகளுக்கு நிம்மதி தந்த இரட்டை அறிவிப்புகள்!
அனைவருக்கும் பசுமை வணக்கம்!
“தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்தால் நெல் கொள்முதலில் நடைபெறும் ஊழல் ஒழிக்கப்படும். கூட்டுறவு வங்கிகளில் குறு, சிறு விவசாயிகள் வாங்கிய கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும். நெல்லுக்கு ஒரு குவிண்டாலுக்கு 3,500 ரூபாயும், கரும்பு ஒரு டன்னுக்கு 4,500 ரூபாயும் வழங்கப்படும்” எனத் தேர்தல் வாக்குறுதிகள் அளித்து விவசாயிகளின் இதயத்தில் இடம்பிடித்தார் விஜய்.
நெகிழ்ந்து போன விவசாயிகள், த.வெ.க-வுக்கு ஏகோபித்த வாக்குகள் அளித்து, அவரை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தி அழகு பார்த்தார்கள். ஆனால், மிகுந்த ஏமாற்றத்துக்கும் ஆற்றாமைக்கும் ஆளாக நேரிட்டது. நெல் கொள்முதலில் நடைபெறும் லஞ்ச லாவண்யம், விவசாயக் கடன் தள்ளுபடி, நெல் மற்றும் கரும்பு விலை உயர்வு ஆகியவற்றில் கொடுத்த வாக்குறுதிகளை முதல்வர் விஜய் நிறைவேற்றாததால் விவசாயிகள் கடும் அதிருப்தியில் இருந்தனர்.
இந்த நிலையில்தான் கொஞ்சமும் எதிர்பாராதவிதமாக விவசாயிகளுக்கு நிம்மதியும் ஆறுதலும் அளிக்கும் விதமாக இரு அறிவிப்புகளை வெளியிட்டு... அவர்களின் கோபத்தைச் சற்று தணித்துள்ளார், முதல்வர் விஜய். ஒன்று, பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் திட்டம் ரத்து. மற்றோர் அறிவிப்பு, விவசாயிகள்மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் ரத்து. இந்த இரண்டு அறிவிப்புக்காகவும் முதலமைச்சர் விஜய்யை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும்.
அரசியல் கட்சிகள் ஆட்சியில் அமரும் வரை விவசாயிகளுக்கு ஆதரவாகப் பேசுவதும், ஆட்சியில் அமர்ந்துவிட்டால், `நாட்டின் தொழில் வளர்ச்சிதான் முக்கியம்’ என விவசாயிகளின் வாழ்வாதாரங்களைச் சூறையாடுவதும் வழக்கமான ஒன்று. தமிழ்நாட்டில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்ட அரசியல் கட்சிகள், அத்தகைய படுபாதகச் செயலைப் பலமுறை அரங்கேற்றியுள்ளன. இந்த நிலையில், முதலமைச்சர் விஜய், பரந்தூர் விமான நிலைய விஷயத்தில் விவசாயிகளுக்கு ஆதர வாக அதிரடி முடிவெடுத்து விதிவிலக்காகவும் முன்மாதிரியாகவும் நடந்துகொண்டுள்ளார்.
மக்கள் அனைவரும் விமானத்தில் பயணிப்பதில்லை. ஆனால், உணவு அனைவருக்கும் அவசியமானது. விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுவதென்பது உயிர் மூச்சு போன்றது. பரந்தூர் விமான நிலைய விஷயத்தில் கடந்தகால தி.மு.க ஆட்சியின் அணுகுமுறை மிகவும் தவறானது. தற்போது எதிர்க்கட்சியாகவும், அவர்கள் விவசாயிகளுக்காக நிற்கவில்லை.
தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் சுமார் 70 சதவிகிதம் பேர் விவசாயிகள். விவசாயிகள் நலன் கருதி செயல்படாவிட்டாலும், தி.மு.க-வின் எதிர்காலம் கருதியாவது, அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின், இந்த விஷயத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக நடந்துகொள்ள வேண்டும்.
தற்போது பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை ரத்து செய்தும், விவசாயிகளின் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளையும் ரத்து செய்து அறிவித்துள்ள த.வெ.க அரசுக்குப் பாராட்டுகள்.
- ஆசிரியர்




















