டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில் வாங்க செயலி; தமிழ்நாடு அரசின் முன்னெடுப்பு - விவர...
`பழனிசாமி தான் அதிமுக சட்டமன்ற குழுத் தலைவர்'- சபாநாயகர் அதிரடி அறிவிப்பு; அதிருப்தி குழுவின் நிலை?
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியானதில் இருந்து இப்போது வரை அதிமுக-வில் உட்கட்சிப் பூசல் முடிந்தபாடில்லை.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், அதிமுக மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த பிறகு, அதிமுக சந்திக்கும் பதினோறாவது தோல்வி இது.
இதனால், அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிமுக நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் இருந்தனர்... இருக்கின்றனர்.
இரு அணிகள்
இந்த அதிருப்தியில் எடப்பாடி பழனிசாமி & டீம், சி.வி.சண்முகம் & டீம் என்று இரு அணிகள் அதிமுக-விற்குள்ளேயே உருவாகின. இதில் சி.வி.சண்முகம் & டீம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை முதன்மை முகமாக முன்னிறுத்தியது.

கடிதம்
சி.வி.சண்முகம் & டீம் விரைவில் பழனிசாமி பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும் என்று கோரிக்கையைத் தொடர்ந்து முன்வைத்து வருகிறது. ஆனால், இதற்குப் பழனிசாமி செவிசாய்ப்பதாக இல்லை.
இதே நேரத்தில், தவெக அரசு மீது நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் சி.வி.சண்முகம் & டீம் தவெக-விற்குச் சாதகமாக வாக்களித்தது. இதன் பின், அதிமுக-வின் சட்டமன்றக் குழு தலைவராக எஸ்.பி.வேலுமணியை முன்னிறுத்தி சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரிடம் கடிதத்தையும் அளித்தனர்.
புகார்
இதை எதிர்த்து இந்தக் கோரிக்கையை முன்வைத்த எம்.எல்.ஏ-க்களை கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்யக் கோரி சபாநாயகரிடம் அரசுக் கொறடா மூலம் புகார் அளித்தார் பழனிசாமி.
இதனால் சி.வி.சண்முகம் தவிர்த்த சி.வி.சண்முகம் & டீம் பழனிசாமியுடன் சமாதானம் ஆகியது. ஆனாலும், இவர்களுக்குக் கட்சியில் உரிய பதவியை வழங்கவில்லை பழனிசாமி.
இதனால், மீண்டும் அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் சி.வி.சண்முகம் & டீமாக மாறினர்.

அதிமுக-வின் சட்டமன்றக் குழுத் தலைவர் எடப்பாடி பழனிசாமி தான்!
இன்றுகூட, சட்டமன்றத்திற்கு எடப்பாடி பழனிசாமி & டீம், சி.வி.சண்முகம் & டீம் இரு அணிகளும் தனித்தனியாகவே வந்தனர்.
இந்த நிலையில், சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், அதிமுக-வின் சட்டமன்றக் குழுத் தலைவர் எடப்பாடி பழனிசாமி தான் என்று இன்று அறிவித்துள்ளார்.
இதை அதிருப்தி எம்.எல்.ஏக்கள் எப்படி எதிர்கொள்ளப் போகின்றனர்... இவர்களில் சிலர் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணைய உள்ளதாகவும் பேச்சுகள் அடிபடுகின்றன... என்ன நடக்கிறது என்று பார்ப்போம்!















