மிசா: `ஷா கமிஷன் அறிக்கை'; கைதிகள் பட்டியலில் `மிஸ்'ஸான ஸ்டாலின் பெயர் - ஏன்... ...
மிசா: `அண்ணன் ஸ்டாலின், அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட தலைவர்; அதை யாரும் மறுக்க முடியாது!'- திருமா
சட்டமன்றத்தில் முன்னாள் முதல்வர் ஸ்டாலினின் மிசா கைது குறித்து, முதல்வர் விஜய்-யின் செய்கை பரவலான விமர்சனம் பெற்ற நிலையில், அதற்கு வருத்தம் தெரிவித்திருந்தார். அந்த செய்கை குறித்து முன்னாள் முதல்வர் ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில், இது தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் பேசியிருக்கிறார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``நாடாளுமன்றத் தேர்தலையொட்டி கூட்டணி அமைத்திருக்கிறோம். இது ஒரு சக்திவாய்ந்த கூட்டணி என்பதால், இதில் வெற்றி பெறுவதில் எந்தவிதமான சிக்கலும் இருக்க வாய்ப்பில்லை என்று நம்புகிறோம். கூட்டணியில் இடம் பெற்றுள்ள த.வெ.க. தரப்பில் யாருக்குப் போட்டியிட வாய்ப்பளிப்பது என்பது குறித்த முழு அதிகாரமும் அவர்களுக்கே உரியது. அதில் நாங்கள் கருத்து சொல்வதற்கு எதுவும் இல்லை. அவர்களை ஆதரிப்பதா, வெற்றி பெற வைப்பதா என்பதை அந்தந்தத் தொகுதியைச் சேர்ந்த மக்களே முடிவு செய்வார்கள்.

இந்தக் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் ஓர் அங்கமாக இருக்கிறது. எனவே, கூட்டணியின் வேட்பாளர்களை வெற்றி பெற வைப்பது கூட்டணிக்கான முக்கியத் தேவையாகும். அந்த வகையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி த.வெ.க வேட்பாளர்களின் வெற்றிக்காகவும் பாடுபடும். நாங்கள் இந்தக் கூட்டணியில் இருப்பதோடு, ஆளும் கூட்டணியின் ஒரு பகுதியாகவும் இயங்குகிறோம். இதனால் த.வெ.க.விற்கு ஆதரவளிப்பது மட்டுமன்றி, எங்கள் அனுபவத்தின் அடிப்படையில் அவ்வப்போது அவர்களுக்கு உரிய வழிகாட்டுதலையும் வழங்கி வருகிறோம். அரசமைப்புச் சட்டத்தின் விழுமியங்களைப் பாதுகாக்கவும், அறம் சார்ந்த அரசியலை முன்னெடுக்கவும் இணைந்துள்ளதால் அதில் நாங்கள் மிகுந்த கவனத்துடன் இருப்போம்.
பட்டினப்பாக்கத்தில் புதிய சட்டமன்றம் அமைப்பது குறித்து மீனவர்களும், எதிர்க்கட்சிகளும் பல்வேறு கோரிக்கைகளையும் விமர்சனங்களையும் முன்வைத்துள்ளனர். அந்த வட்டாரத்தைச் சார்ந்த பொதுமக்களின் கருத்தையும் அறிந்துதான் அரசு இந்த முடிவை நடைமுறைக்குக் கொண்டு வரும் என்று நம்புகிறேன். இன்னும் அந்தப் பகுதி மக்களின் முழுமையான கருத்து என்னவென்று தெரியவில்லை. மக்களின் கருத்தை அறிந்த பிறகே தமிழ்நாடு அரசு ஒரு நல்ல முடிவை எடுக்கும்.

தி.மு.க. தலைவர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் அண்ணன் ஸ்டாலின் அவர்கள் மிசா காலத்துக் கொடுமைகளைச் சந்தித்த முக்கியமான தலைவர்களில் ஒருவர் என்பதை யாரும் மறுக்க இயலாது. அது வரலாற்றில் மறைக்க முடியாத உண்மை. அக்காலத்தில் கைதுசெய்யப்பட்டு அடக்குமுறைக்கும் வதைக்கும் உள்ளாக்கப்பட்ட தலைவர்களில் அவரும் ஒருவர். இது குறித்து எனது கருத்துகளை ஏற்கெனவே சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளேன். தன்னுடைய கருத்து யாரையும் புண்படுத்தியிருந்தால் அதற்காக வருந்துவதாகவும், அது உள்நோக்கத்தோடு சொல்லப்பட்டதல்ல என்றும் முதலமைச்சரும் தெளிவுபடுத்தியுள்ளார். இதனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் சுட்டிக்காட்டியுள்ளது" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.














