'பாஜகவும் தேர்தல் ஆணையமும் கைகோத்து ஒரு கட்சியைப் பிளவுபடுத்துகின்றன'- மம்தாவுக்...
"'மீசைய முறுக்கு 2' படத்துக்குப் பிறகு கானா பாடல் மீதான பார்வை மாறும்" - ஹிப்ஹாப் ஆதி
கல்லூரி மாணவனின் கனவு, காதல், வாழ்க்கைப் போராட்டம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவான ‘மீசைய முறுக்கு’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
அந்த வெற்றியைத் தொடர்ந்து தற்போது ‘மீசைய முறுக்கு 2’ படத்தை ஹிப் ஹாப் ஆதி இயக்கி, கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.
சுந்தர் சி - குஷ்பு தயாரிக்கும் ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தில் சைத்ரா, ரம்யா ரங்கநாதன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் யூடியூபர் ஹர்ஷத் கான், நாசர், கருணாஸ், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் இடம்பெற்றுள்ளனர்.
இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் பேசிய நடிகர் ஹிப்ஹாப் ஆதி, ``'மீசை முறுக்கு' முதல் பாகம் என்னுடைய சொந்த வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. ஆனால், 'மீசை முறுக்கு 2' என்பது ஒரு இசைக் கலைஞனின் கதை. இசை பற்றிய படம். இதில் பாபா பாஸ்கர் மாஸ்டர் ஒரு முக்கியமான தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
மறைந்த நடிகர் விவேக் சார் நடித்த இடத்திற்கு யாரையும் ஈடு செய்ய முடியாது என்றாலும், இந்தக் கதாபாத்திரத்திற்கு பாபா பாஸ்கர் மாஸ்டர் சரியாக இருப்பார் என்று நம்பி அவரை நடிக்க வைத்தேன். இந்தப் படத்திற்குப் பிறகு அவர் ஒரு சிறந்த நடிகராகவும் உருவெடுப்பார்.
என்னுடைய சுயாதீன பாடல் (Music Video) மூலமாகத்தான் ஹர்ஷத் கானை முதன்முதலில் அறிமுகப்படுத்தினேன். 'பய் பய் பய்' என்ற அந்தப் பாடலை எடுத்து, அவரை ஒரு நடிகராக உலகிற்கு அடையாளம் காட்ட முயன்றேன்.
அதிலிருந்து இரண்டு வருடங்கள் கழித்து, தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து, தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக உருவெடுத்து விருதெல்லாம் வாங்கியிருப்பதைப் பார்க்கும்போது மிகவும் பெருமையாக இருக்கிறது.
இந்தப் படத்தில் ஹர்ஷத் மிகவும் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில், தனது சொந்த பெயரிலேயே நடித்துள்ளார். பல உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இந்தப் படத்தின் நகைச்சுவைப் பகுதியை அவர் மிகச் சிறப்பாகக் கையாண்டுள்ளார்.
மேலும், படத்தைப் பற்றிய விளம்பரப் பணிகளையும் (Promotions) அவர் முன்னின்று நடத்தி வருகிறார். ஹிப்ஹாப் என்பது எப்படி மேலைநாடுகளின் வீதிப் பாடலாக இருந்து உலக அளவில் முதன்மைப் பெற்றதோ, அதேபோல நம்ம ஊரின் 'கானா' இசையும் சர்வதேச அளவில் கொண்டாடப்பட வேண்டும் என்பதே எனது விருப்பம்.
கானா என்பது வெறும் லோக்கல் இசை கிடையாது. அது மனிதர்களின் வாழ்வியலைப் பேசும் ஒரு அற்புதமான கலை.
இந்தத் திரைப்படத்தில் 80-கள், 90-கள் மற்றும் தற்கால கானா இசை என மூன்று வெவ்வேறு காலகட்டங்களின் பின்னணியில் 12 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. 'மீசை முறுக்கு 2' படத்திற்குப் பிறகு கானா கலைஞர்களுக்கான அங்கீகாரமும், கானா இசை மீதான பார்வையும் முற்றிலும் நேர்மறையாக மாறும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இந்தப் படத்தில் கெட்டிகா, சைத்ரா, ரம்யா என மூன்று கதாநாயகிகள் நடித்துள்ளனர்.

யோகி பாபு அண்ணன், நாசர் சார், கருணாஸ் அண்ணன் எனப் பல முன்னணி நடிகர்கள் முக்கியப் பங்கு வகித்துள்ளனர். மேலும், 'அன்பறிவு' படத்தின் இயக்குநர் அஸ்வின் இதில் கிரியேட்டிவ் புரொட்யூசராகப் பணியாற்றியுள்ளார். 12 பாடல்களைக் கொண்ட இந்தப் படம் ரசிகர்களுக்கு ஒரு முழுமையான கொண்டாட்டமாக இருக்கும்" என்றார்.










