50 ஆண்டுகால அவதி... சுமார் 1 கிலோ மீட்டர் சாலைக்காக அலையும் எம்.செட்டிப்பட்டி மக...
ஸ்படிக மாலை எல்லோரும் அணியலாமா? அணியும் நியதி, உகந்த நாள், தெரிந்துகொள்ள வேண்டிய ஸ்படிக ரகசியங்கள்!
சித்தர்களும், மகான்களும், மந்திர பாராயணம் செய்வோரும் ஸ்படிக மாலையை விரும்பி அணிவார்கள். சந்திரனின் சக்தியை ஈர்த்துத் தருவது டன், மனத்திடத்தை அளிக்கும் ஆற்றல் ஸ்படிகத்துக்கு உண்டு. ஆனால், இதை எல்லோரும் அணியலாமா? சாஸ்திரம் மற்றும் ஜோதிட நூல்கள் என்ன சொல்கின்றன தெரிந்துகொள்வோமா?

எதையும் எதிர்கொள்ளும் மனவலிமையையும் வைராக்கியத்தையும் தரவல்லது ஸ்படிக மாலை. ஸ்படிகம் இருக்கும் இடத்தில் எதிர்மறை சக்திகள் இருக்காது; நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும் என்கின்றன ஞான நூல்கள். ஆகவேதான் சித்தர்களும், மகான்களும், மந்திர பாராயணம் செய்வோரும் ஸ்படிக மணிகளை மிகவும் உயர்வானதாகப் போற்றினார்கள்.
ஸ்படிகத்தின் சிறப்பைப் போற்றும் விதமாக மகாபாரதத்தைத் தொடர்பு படுத்தி ஒரு சம்பவம் சொல்லப்படுவது உண்டு.

குருக்ஷேத்திர யுத்தக் களத்தில் பிதாமகர் பீஷ்மர் அம்புப்படுக்கையில் கிடந்த தருணம் அது. பாண்டவர்கள் அவரை வணங்கி நின்றார்கள். அப்போது ஸ்ரீமந் நாராயணனின் விஸ்வரூப தோற்றமும், அதில் அடங்கிய பல்வேறு ரூபங்களும், அவற்றுக்குரிய நாமங்களும், பீஷ்மருடைய மனக்கண் முன் தோன்றின.
அதனால் பக்திப் பரவசம் அடைந்த பீஷ்மர், ஸ்ரீமந் நாராயணனின் பெருமையை அற்புதமான கவிதைகளால் பாட ஆரம்பித்தார். அதுவே ‘விஷ்ணு ஸஹஸ்ர நாமம்’ எனும் மகிமை மிக்க மந்திரத் தொகுப்பு!அனைவரையுமே விஷ்ணு சகஸ்ரநாம மந்திரங்கள் கவர்ந்தன என்றபோதிலும், சகாதேவனை அவை தீவிரமான பக்திப் பரவசத்தில் ஆழ்த்தின.
ஆனாலும், பீஷ்மர் கூறிய அனைத்து வாசகங்களும் அவனது நினைவுக்கு வரவில்லை. இதையறிந்த கிருஷ்ணன், ``சகாதேவா! பீஷ்மர் மோட்சம் அடைந்து, அவர் உடலுக்கு மரியாதை செய்து முடித்த பின்பு, அவர் கழுத்தில் அணிந்துள்ள ஸ்படிக மணிமாலையை எடுத்து நீ அணிந்து கொள். அந்த மணிகளின் சக்தியால் விஷ்ணு ஸஹஸ்ரநாமம் முழுவதுமாக உன் நினைவுக்கு வரும்!’’ என்றார்.
உடனே ``அவ்வளவு மகத்துவம் வாயந்ததா அந்த மாலை?’’ எனக் கேட்டார் அர்ஜுனன்.
``ஆம் அர்ஜுனா! பிதாமகரின் சங்கல்பம் குறித்து அறிவோம். அதற்குப் பரிசாக கங்கை மாதா அளித்த பொக்கிஷம் அது. அவளின் திருவருளால் கங்கை நீர்த்துளிகள் ஸ்படிக மணிகளாக பீஷ்மரின் கைகளில் விழுந்தன. அதையே மாலையாகக் கோத்து அணிந்திருந்தார். வைராக்கியத்துடன் வாழ்வதற்கும், மந்திர சாதகங்கள் புரிவதற்கும் உனக்குப் பெரிதும் உதவும்.’’ என்றார் பகவான் கிருஷ்ணர்.
அர்ஜுனனும் அப்படியே செய்தான். ஸ்படிக மணிமாலையை அணிந்து, பக்தியோடு நாராயணனைத் தியானித்து, பீஷ்மர் இயற்றிய விஷ்ணு ஸஹஸ்ரநாம மந்திரங்கள் அனைத்தையும் அறிந்து மகிழ்ந்தான் என்று திருக்கதை விரியும்.

ஸ்படிகத்தின் தன்மை என்ன?
பலநூறு ஆண்டுகளாக பூமிக்கு அடியில் மிக ஆழமான பகுதியில் மென்மையான ஸ்படிக பாறைகள் கிடைக்கின்றன. ஸ்படிகம் என்பது ஒளி ஊடுறுவக்கூடிய ஒரு ரத்தினக் கல். இது குவார்ட்ஸ் எனும் பெயரிலும் அழைக்கப்படுகிறது.
ஆரம்ப நிலையில் பூமிக்கடியில் கிடைக்கப்பெறும் ஸ்படிகம் கரடு முரடாகவும், ஒளி ஊடுறுவும் தன்மை குறைவாகவும் கொண்டு திகழும். இதனைப் படிகாரம் என்று நாட்டுமருந்து கடைகளில் விற்பார்கள். படிகாரக் கற்களை வீட்டு வாசலில் கட்டித் தொங்கவிட்டிருப்பதைப் பார்த்திருப்போம். இதனால் திருஷ்டி தோஷங்கள், தீவினை பாதிப்புகள் வீட்டை அண்டாது என்பது நம்பிக்கை.
இவ்வாறு பூமிக்கடியில் இருந்து கிடைக்கும் ஸ்படிகக் கற்களைச் சீர்ப்படுத்தி ஸ்படிக மணிகள் உருவாக்கப்படுகின்றன. ஸ்படிக பட்டைகளும் உண்டு. இவற்றை வாஸ்து குறைபாடுகள் நீங்குவதற்குப் பயன்படுத்து வார்கள்.
ஸ்படிக மாலைகளை எல்லோரும் அணியலாமா?
அபூர்வமான மிக உயர்தரமான ஸ்படிக மணிகளை ஒன்றோடொன்று உரசினால், அவற்றிலிருந்து பிரகாசமான தீப்பொறி போன்ற ஒளி தோன்றும். ஸ்படிக மணிகளை உருட்டி மந்திர ஜபம் செய்த பின்பு இந்தப் பிரகாசம் அதிகமாகத் தெரியும் என்பார்கள் ஆன்மிக ஆன்றோர்கள்.
அதேபோல், உயர்ந்ததான ஸ்படிக மாலையை தண்ணீரில் போட்டால் எளிதில் கண்ணுக்குப் புலப்படாது; நீரோடு நீராக ஒன்றி இருக்கும். சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவரும் ஸ்படிக மாலையை அணிந்துகொள்ளலாம்.
ஸ்படிகத்தை அணிவதன் மூலம் மனச் சலனங்கள் நீங்கும்; மனதில் அமைதியும் ஆனந்தமும் உண்டாகும் என்கின்றன பழைமையான நூல்கள்.

ஸ்படிக மாலை அணிவதன் நியதிகள் என்ன?
1. ஸ்படிக மாலை அணிவதற்கு கார்த்திகை நட்சத்திரத்துடன் பொருந்தி வரும் தினங்கள் ஏற்றது என்பார்கள்.
2. ஸ்படிக மாலையை வாங்கியதும் அப்படியே பயன்படுத்தக் கூடாது. நல்ல குருமார்களின் வழிகாட்டுதலோடு, குறிப்பிட்ட நாள்கள் கன்று ஈன்ற பசுவின் சாணத்தில் பொதிந்துவைக்க வேண்டும். பின்னர், பால் மற்றும் தண்ணீரால் சுத்தம் செய்து குருவின் ஆசியோடு அணிந்து கொள்ள வேண்டும்.
3. வீட்டில் பூஜையறையில் இஷ்ட தெய்வங்களின் படங்களின் முன் ஸ்படிக மாலை வைத்து மனதார வணங்கி, `தெய்வமே உங்களின் சாந்நித்தியம் இந்த மாலையில் நிரம்பியிருக்கட்டும்; எப்போதும் எனக்குக் கவசமாக இருந்து காக்கட்டும்; எனக்குள் நல்ல சிந்தனைகளை விதைக் கட்டும்’ என்று வேண்டி வழிபட்டுவிட்டு கழுத்தில் அணிவது மிகவும் சிறப்பு.
4. அசைவ உணவுகள் உண்ணும்போதும் உறங்கும்போதும் தீட்டுக்கு உரிய இடங்களில் இருக்கும்போதும் அணிவதைத் தவிர்க்கலாம்.
5. இரவில் தீர்த்தத்தில் சுத்தம் செய்து சாமிப்படங்கள் அருகில் வைத்து விட்டு, காலையில் சுவாமியை வணங்கியபிறகு மீண்டும் அணிந்து கொள்ளலாம்.
ஸ்படிக மாலை உடம்பின் சூட்டைத் தணிக்கும்; குளிர்ச்சியைத் தரும். இந்த மாலையின் ஆற்றலால் எப்போதும் தெய்வசக்தி நம்மைச் சூழ்ந்திருக்கும். இப்படியான அதிர்வுகளால் தீயசக்திகள் நம்மை அண்டாது. நேர்மறை எண்ணங்களே நிறைந்திருக்கும். சொல்லாலும் செயலாலும் நன்மைகளே நடக்கும்; நாம் விரும்பியதெல்லாம் நடக்கும்.!


















