Paris Cafe: `பாரிஸ் நகரில் சிரமத்தைப் பொருட்படுத்தாமல் படப்பிடிப்பு நடத்தினோம்' ...
Paris Cafe: `பாரிஸ் நகரில் சிரமத்தைப் பொருட்படுத்தாமல் படப்பிடிப்பு நடத்தினோம்' - குரு சோமசுந்தரம்
கண்மணி ரங்கநாதன் தயாரிப்பில் சரஜ் சீலன் இயக்கத்தில் குரு சோமசுந்தரம், அனுமோல், அர்ச்சனா குமார், விஜய் விஷ்வா, சாய் விக்கி, நயனா உள்ளிட்டோர் நடித்துள்ள 'பாரிஸ் கபே' திரைப்படம் விரைவில் திரைக்கு வருகிறது. இந்தப் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் குரு சோமசுந்தரம், ``இயக்குநர் சரஜ் முதன்முதலில் திருவான்மியூரில் வைத்து இக்கதையை என்னிடம் விவரித்தார். அவர் கதை கூறிய விதமும், அவரது தெளிவும் என்னை மிகவும் கவர்ந்தது. கதை கேட்டவுடனேயே, 'நீங்கள் சொன்னது போலவே படமாக்கி விடுங்கள், நான் நடிக்கிறேன்' என உறுதி அளித்தேன்.

ஒரு படைப்பாளியின் கனவை நிறைவேற்ற குடும்பத்தின் ஒத்துழைப்பு மிக முக்கியம். தமிழ் சினிமாவில் பல புதிய இயக்குநர்களின் வெற்றிக்குப் பின்னால் அவர்களின் வாழ்க்கைத்துணையின் தியாகம் இருக்கும். ஆனால், இந்த படத்தில் இயக்குநரின் மனைவியே தயாரிப்பாளராக மாறி, படத்தை மிக நேர்த்தியாக முன்னெடுத்துச் சென்றுள்ளது பாராட்டுக்குரியது.
இத்திரைப்படம் ஆழமான கருத்தைக் கொண்ட குடும்ப படமாக மிக அழகாக வந்துள்ளது. நடிகை அனுமோலுடன் மீண்டும் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சியளிக்கிறது. படப்பிடிப்பின் போது எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் ஒரு குடும்பமாக இணைந்து பணியாற்றினோம். இசையமைப்பாளர் கே (K) அவர்களின் இசை இப்படத்திற்கு ஆன்மாவாக அமைந்துள்ளது. மேலும், பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரிலும் சிரமத்தைப் பொருட்படுத்தாமல் ஒரு வாரம் வரை படப்பிடிப்பை நடத்திப் படத்தை நிறைவு செய்துள்ளோம்.
பெண்களுக்கு உரிய மதிப்பும் உரிமையும் வழங்காத எந்தவொரு சமூகமோ, துறையோ அல்லது நாடோ உண்மையான வளர்ச்சியை அடைய முடியாது. வளர்ச்சி இருப்பது போன்ற பிம்பம் தென்பட்டாலும் அது ஒரு போலியான வளர்ச்சியாகவே இருக்கும். இனி ஒரு கௌசல்யா உருவாகக் கூடாது என்ற விழிப்புணர்வை நாம் உருவாக்க வேண்டும். மாற்றம் என்பது மற்றவர்களிடம் இருந்து தொடங்குவதில்லை, நம்மிடம் இருந்துதான் தொடங்க வேண்டும். இத்தகைய சமூக அக்கறையுள்ள ஆழமான கருத்துக்களைப் பேசும் படங்களை ஊடகங்களும் ரசிகர்களும் முழுமையாக ஆதரித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்" என்றார்.
















