"குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக் கூடாது..." - தவெக-வை ஆதரிக்க திருமா சொல்லும்...
TVK: "விஜய் முதல்வராவார்" - தவெக-விற்கு ஆதரவளித்த விசிக; கடிதத்தைப் பெற்ற ஆதவ் அர்ஜுனா
தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. நடந்து முடிந்துள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கட்சி தோல்வியைத் தழுவிய நிலையில், த.வெ.க அதிக இடங்களை வென்ற தனிக்கட்சியாக உள்ளது.
ஆனாலும் தனிப்பெரும்பான்மை ஆட்சி அமைப்பதற்கான எண்ணிக்கை த.வெ.கவிற்குக் கிடைக்கவில்லை. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 118 தொகுதிகளை தனிக் கட்சியாக வென்றால் மட்டுமே தனிப்பெரும்பான்மை ஆட்சி அமைக்க முடியும்.

ஆனால் தனிக்கட்சியாக 108 இடங்களை மட்டுமே த.வெ.க வென்றுள்ளது. பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை கட்சி பெறாததால், ஆதரவு அளிக்க காங்கிரஸை த.வெ.க நாடியது.
காங்கிரஸும் தவெகவுக்கு ஆதரவு அளித்து 5 இடங்களை வழங்கிவிட்டது. மீதம் தேவைப்படும் 6 இடங்களுக்காக விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் தவெக கோரிக்கை வைத்திருந்தது.
அதன்படி இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சிகள் தவெக-வுக்கு ஆதரவு அளித்திருக்கும் நிலையில் தற்போது விசிக தலைவர் திருமாவளவனும் தவெக விஜய்க்கு ஆதரவு அளித்திருக்கிறார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் நேற்று, தவெக-விற்கு நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்திருந்த நிலையில் தற்போது, விசிக-வும் நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கடிதம் வழங்கியிருக்கிறார்.

விசிக-வின் ஆதரவு கடிதத்தைப் பெற்றப் பிறகு செய்தியாளர்களிடையே பேசிய ஆதவ் அர்ஜூனா, "காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்களுக்கும், என்னுடைய ஆசான் திருமாவளவன் அண்ணனுக்கும் நன்றி! ஜனநாயகன் காக்கப்படும். மக்களின் ஆதரவோடு எங்களின் தலைவர் விஜய், முதலமைச்சர் ஆவார்." எனக் கூறியிருக்கிறார்.













