'120 சீட்டுகள்' தவெக உடன் விசிக; விஜய்க்கு திருமாவளவன் ஆதரவு
'ஜோசப் விஜய் எனும் நான்...' - ஆதரவு கொடுத்த விசிக, கம்யூக்கள், இ.யூ.எம்.எல்; முதல்வராகும் விஜய்!
தவெக தலைவர் விஜய் மூன்றாவது முறையாக ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரியிருக்கிறார்.
இந்த முறை விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் இந்தியன் முஸ்லீம் யூனியன் லீக் கட்சியின் ஆதரவோடு விஜய் ஆளுநரிடம் கடிதம் கொடுத்திருப்பதால், ஆளுநர் விஜய்யை உடனடியாக ஆட்சி அமைக்க அழைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சட்டமன்றத் தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக 108 இடங்களில் வென்றிருந்தது. ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மை இல்லாததால் தவெக தரப்பில் விஜய் மற்ற கட்சியினரின் ஆதரவை நாடினார்.
காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், விசிக ஆகிய கட்சிகளிடம் ஆதரவு கேட்டு தவெக தரப்பில் கடிதம் எழுதப்பட்டது.
காங்கிரஸ் கட்சி முதல் கட்சியாக தவெகவுக்கு ஆதரவை கொடுத்தது. காங்கிரஸின் 5 எம்.எல்.ஏக்கள் ஆதரவோடு மே 6 ஆம் தேதி விஜய் ஆளுநர் அர்லேக்கரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.
ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மை எண்ணுடன் வாருங்கள் என ஆளுநர் விஜய்யை அனுப்பிவிட, மறுநாளும் விஜய் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.
அப்போதும் ஆளுநர் பெரும்பான்மையை நிரூபிக்க சொல்லி அனுப்பி விடவே தவெக முகாம் அப்செட்டானது. இந்த சமயத்தில்தான் திமுகவும் அதிமுகவும் கூட்டணி சேர்கின்றனர் என்கிற தகவல் தீயாய் பரவியது.

இதைத் தொடர்ந்தே தவெக தரப்பில் முக்கிய நிர்வாகிகள் கம்யூனிஸ்ட்டுகள் மற்றும் விசிகவினரை நேரில் சந்தித்து ஆதரவு கோரினர். கம்யூனிஸ்ட்டுகள் தங்களின் முக்கிய நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்தி, மக்கள் தனிப்பெரும் கட்சியாக தேர்ந்தெடுத்த தவெகவை ஆதரிக்கும் முடிவை எடுத்தனர். இறுதியாக இந்தியன் முஸ்லீம் யூனியன் லீக் கட்சியும் தனது ஆதரவை வழங்கியது.
முறையாக தவெகவுக்கு தங்களின் ஆதரவு கடிதத்தையும் அனுப்பி வைத்தனர். இதன்பிறகே விஜய் இப்போது 118 எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.
நாளை காலை 11 மணிக்கு, நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் விஜய் முதல்வராகப் பதவியேற்க இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இன்றே ஆளுநரும் ஆட்சியமைக்க தவெக-வுக்கு அழைப்பு விடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.













