உதயநிதி ஸ்டாலின் கைது: ``விசாரணை நடத்துவதுதான் நோக்கம் என்றால்..." - ஸ்டாலின் கே...
மழைக்காலத்தில் கழிவுநீர் சூழும் அபாயம் - மதுரை கோரிப்பாளையத்தில் வலுக்கும் மக்கள் போராட்டம்!
கோயில் மாநகராமான மதுரையின் மத்தியப் பகுதி, கோரிப்பாளையம் - செல்லூர் பகுதியில் "செல்லூர் கண்மாயின்" வடிகால் தூர்வாரும் பணிகள் கடந்த மூன்று மாதமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் வடிகால் பணி காரணமாக கால்வாயின் இருபக்கமும் இருக்கின்ற கழிவுநீர்க் குழாயை அடைத்திருக்கிறார்கள். இதனால் கழிவுநீர்க் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பாதாளச் சாக்கடை பல வாரங்களாக சாலைகளிலும் குடியிருப்புப் பகுதிகளிலும் புகுந்து தொற்றுநோய் அபாயத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இப்பிரச்னையை மதுரை மாநகராட்சிக்குப் புகாராகக் கொடுத்தும் துறை சார்ந்து எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதிவாழ் மக்கள் குறைப்படுகின்றனர்.
அன்றாடம் பள்ளி செல்லும் குழந்தைகள், பச்சிளம் பிள்ளைகள் என கொசுக்கடியில் அவதிப்படுவதோடு, குடிநீரோடு கழிவுநீர் கலந்து வருவதைக் கண்டித்தும், அவர்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டிருப்பதையும் கோரிக்கையாக வைத்து கண்மாயின் வடிகால் பணியை துரிதமாய் முடிக்கக் கோரியும் பந்தல்குடி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சிறிது மழை பெய்தால்கூட, கால்வாய்க்கு அருகிலுள்ள பந்தல்குடி, கான்சாபுரம், அப்துல் ரஹ்மான், ஜஹாங்கீர் கான், ஜம்புரோபுரம் உள்ளிட்ட குடியிருப்புப் பகுதிகளிலுள்ள வீடுகளில் கழிவுநீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இச்சாலை மறியல் காரணமாக மதுரை சிம்மக்கல் பகுதி தொடங்கி யானைக்கல், வைகை மேம்பாலம், செல்லூர் கோரிப்பாளையம் இணைப்புச் சாலை என வழிநெடுகிலும் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாகனங்கள் அணிவகுத்து நின்று போக்குவரத்து தடைபட்டது.
காவல்துறையின் சமாதானப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு மறியலில் ஈடுபட்டோர் சாலையோரம் கூடி, போக்குவரத்து சீர் செய்யப்பட்டது.














