தவெகவுக்கு முன்னாள் அதிமுக வேட்பாளர்; அதிமுகவுக்கு முன்னாள் திமுக வேட்பாளர்! - இ...
அதிரடிக்கு தயாராகும் ஸ்டாலின் - தனிக்கவனம் பெற்ற வன்னிஅரசு - நெருக்கடியில் நயினார்! | கழுகார்
தாம்பரம் கமிஷனர் அலுவலகத்தில் பணிபுரியும் 'முருகக் கடவுள்' அதிகாரி, பொதுமக்களை சந்தித்து புகார்களை வாங்குவதில்லையாம். அதோடு, தனக்கு கீழ் பணியாற்றும் உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர்களின் போன் அழைப்பைக்கூட அவர் எடுத்து பேசுவதில்லையாம்.
ஆனால், தொழிலதிபர்கள், வி.வி.ஐ.பி-க்கள் என்றால் அவரே சென்று சந்திப்பதை வழக்கமாக வைத்திருக்கிறாராம். சமீபத்தில்கூட, அப்துல் கலாம் மாவட்டத்தை சேர்ந்த எம்.பியை சந்தித்திருக்கிறார். எம்.பி-யின் கூரியர் நிறுவனத்தின் மூலம் சென்னை டூ கோவைக்கு அனுப்பப்பட்ட பார்சல்களில் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான செல்போன்கள் கோவை பகுதியில் மாயமாகிவிட்டதால், அதனை உடனடியாக ரெக்கவர் செய்யச் சொல்லி கேட்டிருக்கிறார்கள்.
அதிரடியாக களமிறங்கிய அந்த முருகக்கடவுள் அதிகாரி, உடனடியாக சி.எஸ்.ஆர் போட்டுக் கொடுக்கும்படி அவருக்கு கீழ் பணியாற்றும் உதவி கமிஷனரை பாடாய்படுத்திவிட்டாராம். 'உரிய கவனிப்புகள் இருக்குமிடத்தில்தான் அந்த அதிகாரி வேலை செய்கிறார். சாமானியர்களின் புகார்களை திரும்பிக்கூட பார்ப்பதில்லை' என குமுறுகிறார்கள் சக காவல் அதிகாரிகள்!
கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி, உளுந்துர்பேட்டையில் நடந்த வி.சி.க மாநாட்டில் பெருங்கூட்டம் வந்தபோதிலும் முறையான ஒருங்கிணைப்பு இல்லாததாலும், மேடையைச் சுற்றி பாதுகாப்பு இல்லாததாலும் மாநாடு பாதியிலேயே கைவிடப்பட்டிருக்கிறது.
ஆனால், திருமாவளவன் மேடையேறுவதற்கு முன்பு பல சுவாரஸ்ய சம்பவங்கள் அரங்கேறியிருக்கின்றன. மாலை 3.30 மணிக்கு திருமா மேடையேறிய நிலையில் 3 மணிக்கெல்லாம் மாநாட்டு திடலுக்கு வந்திருக்கிறார் அமைச்சர் வன்னி அரசு. திடலில் குழுமியிருந்த சிறுத்தைகள் வன்னி அரசை பார்த்ததும் பெரும் ஆரவாரத்தை கொடுக்கவும், குளிர்ந்துவிட்டார் அமைச்சர்.

திருமா, வன்னி அரசை தவிர வேறு யாருக்கும் மாநாட்டில் வரவேற்பு கிடைக்காதது வி.சி.க முகாமை பெரும் உஷ்ணத்தில் ஆழ்த்தியிருக்கிறது. 'அடுத்த ஐந்து ஆண்டுகள் வன்னி அரசு அமைச்சராக இருந்தால், தலைவரின் அரசியல் வாரிசாகிவிடுவார்...' என கிசுகிசுத்திருக்கிறார்கள். 'அமைச்சராக இருக்கும் அவருக்கு பொதுச்செயலாளர் பதவி கொடுக்கலாமே!' என்ற பேச்சும் கிளம்ப தொடங்கியிருப்பதால் சிட்டிங் பொதுச்செயலாளர்கள் கடும் அப்செட்!
சட்டமன்றத்தில் நடக்கும் மானியக் கோரிக்கை விவாதங்களில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு உரிய பதில் கிடைப்பதில்லையாம். மேலும், அவசியமற்ற விவகாரங்களை பேசி சபாநாயகரிடம் குட்டு வாங்குவதும் கேள்விக்கு சம்பந்தமில்லாத பதில்களை சொல்வதும் த.வெ.க உறுப்பினர்களின் வாடிக்கையாகிவிட்டது என வருந்துகிறார்கள் ஆளும்தரப்பினர்.
'முதல்வர் வரும்போது எதிர்க்கட்சித் தலைவர் எழுந்து நிற்க மறுக்கிறார்!' என கொந்தளித்தார் அமைச்சர் ரமேஷ். குறுக்கிட்ட சபாநாயகர், 'அப்படி எழுந்து நிற்க வேண்டிய அவசியமில்லை' என என்றதும் கமுக்கமாக உட்கார்ந்து கொண்டார்.

ஊரக வளர்ச்சித் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றபோது, 'கலைஞருடைய கனவு இல்ல திட்டம் பெயரை மாற்றிவிட்டீர்கள்' என தி.மு.க உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். உடனடியாக எழுந்த அமைச்சர் வினோத் 'நீங்கள் கட்டிக் கொடுத்த வீடுகள் இடியும் நிலையில் இருக்கிறது' என்றார்.
அதற்கு விளக்கமளித்த நேரு, 'நீங்கள் விமர்சனங்கள் எழாதபடி முறையாக கட்டுங்கள்' எனச் சொல்ல, அதற்கு அமைச்சர் ஆனந்த், 'நீங்கள் இனி ஆட்சிக்கே வர முடியாது' என சம்பந்தமில்லாத சொல்ல, முதல்வரின் முகமே மாறிவிட்டது. கேள்விக்கான பதிலை அமைச்சர்கள் சொல்வதில்லை என எதிர்க்கட்சியினரும் உஷ்ணமாகிறார்கள்!
'கூட்டணியில் சட்டமன்றத் தேர்தலில் தொகுதி பிரிப்பில் எடப்பாடியுடன் இணைந்துகொண்டு ஏமாற்றிவிட்டார்' என பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மீது டெல்லி கடும் டென்ஷனில் இருக்கிறது. சமீபத்தில் சென்னைக்கு விசிட் அடித்த அமித் ஷா, நயினாரை திரும்பிக்கூட பார்க்கவில்லையாம்.
இந்தச் சூழலில், சர்ச்சை ஏற்படுத்தும் விதமாகப் பேசி தொடர் நெருக்கடிகளில் சிக்கிக் கொள்கிறார் நயினார். இந்த சூழலை பயன்படுத்திக் கொண்டு மாநிலத் தலைவர் பொறுப்பை பெற பகீரத பிரயத்தனங்களை செய்துவருகிறது ஒரு குழு.

'தமிழ்நாடு பா.ஜ.க மாநிலத் தலைவர்களிலேயே உருப்படியாக எந்த வேலையும் செய்யாதவர் நயினார்தான். தமிழிசை கட்சியை கீழ்மட்டத்தில் கொண்டுபோய் சேர்த்தார். அண்ணாமலை கட்சியை பரபரப்பாக மக்களிடம் பேச வைத்தார்.
நயினார் அ.தி.மு.க-வினருடன் செட்டிங் போட்டார்...' என அங்கலாய்க்கிறார்கள் பா.ஜ.க-வினர். இப்படியான சூழலில், வானதி ஸ்ரீநிவாசன், ராம ஸ்ரீநிவாசன், அஸ்வத்தாமன், சரத்குமார் என பெரும்படையே மாநிலத் தலைவர் பொறுப்புக்கு அடிபோடுகிறார்கள். ஆனால், 'தமிழ்நாடு பா.ஜ.க-வை நெறிப்படுத்தும் நோக்கமெல்லாம் டெல்லிக்கு இல்லை.. அவர்கள் எதையும் கண்டுகொள்ள மாட்டார்கள்' என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்!
சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, `கள ஆய்வுக்குழு' அமைத்து, தொகுதிவாரியாகக் கருத்துக்கேட்பு கூட்டங்களை நடத்த உத்தரவிட்டார் தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின். அதன்பிறகு அமைக்கப்பட்ட மறுசீரமைப்பு குழுவும் தங்கள் அறிக்கையை தாக்கல் செய்துவிட்டனர்.
எனவே, 'கட்சியின் மறு கட்டுமான நடவடிக்கைகளில் இனியும் காலம் தாழ்த்தக் கூடாது' என முடிவெடுத்திருக்கும் ஸ்டாலின், வரும் 22-ம் தேதி செயற்குழு கூட்டத்தை கூட்டியிருக்கிறார். அந்த கூட்டத்துக்கு பிறகு 10 மாவட்டச் செயலாளர்களை தூக்கிவிட்டு, புதியவர்களை உள்ளே கொண்டு வரவும் திட்டமிட்டிருக்கிறாராம்.

மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக இருக்கும் பலருக்கு மா.செ-வாக போஸ்ட்டிங் கிடைக்கப்போகிறதாம். சீனியர் அமைச்சர்களான கே.என் நேரு, ஐ.பெரியசாமி, எ.வ வேலு என 70 வயதுக்கு மேற்பட்டோரை மாவட்டச் செயலாளர் பதவிகளிலிருந்து நீக்கவிட்டு, மாநிலப் பொறுப்பு கொடுத்துவிட முடிவெடுத்திருக்கிறாராம் ஸ்டாலின்.
ஒன்றிய, வட்டப் பொறுப்புகளில் 50 வயதுடையவர்களை நியமிக்கவும் திட்டம் தீட்டப்படுகிறது. 'முப்பெரும் விழாவுக்கு முன்பே மாவட்டக் கட்டமைப்பை மறுசீரமைத்துவிட்டு முப்பெரும் விழாவுக்கு பிறகு தலைமை கழக நிர்வாகிகளில் மாற்றம் கொண்டுவரலாம்' என்றிருக்கிறாராம் ஸ்டாலின். துரைமுருகனுக்குப் பதிலாக புதிய பொதுச்செயலாளரை தேர்தல் வைத்து தேர்ந்தெடுப்பதுதான் திட்டமாம்!












