"'மந்திரி சபையிலும் இடம், திமுகவிலும் தொடர்கிறோம்' எனச் சிலர் சொல்வது எனக்கு புர...
"அப்பாவை அங்க தேடாதீங்க; மகளிர் உரிமைத்தொகை இருக்கும்வரை நான்தான் முதல்வர்" - ஸ்டாலின் பதிலடி
திருவாரூர் மாவட்டம் காட்டூரில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டிருக்கிறார்.
அப்போது விழா மேடையில் பேசிய அவர், "நாட்டில் மின்வெட்டுப் பிரச்னை, டெல்டா மாவட்டத்தில் குறித்த நேரத்தில் விவசாயிகளுக்கு தண்ணீர் திறக்க முடியவில்லை என்பன போன்ற பிரச்னைகள் உள்ளன.
கடந்த ஐந்து ஆண்டுகளில் நாம் குறித்த நேரத்தில் மேட்டூர் அணையைத் திறந்து வைத்துள்ளோம். இவற்றையெல்லாம் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றத்தில் எடுத்துச் சொல்லிப் பேசினார்.

ஆனால் முதலமைச்சராக உள்ளவர் எங்கே உங்கள் அப்பாவைக் காணோம் என்று கதை சொல்லியிருக்கிறார். அப்பாவை அங்கு தேடாதீர்கள். மக்கள் மனதில் இருக்கிறேன் அதுபோதும்.
நீங்கள் தேடும் இடத்தில் நான் இருக்க மாட்டேன். மக்கள் தேடும் இடத்தில் நிச்சயம் முதல் ஆளாக இருப்பேன். சட்டமன்றத்தில் நான் இல்லாவிட்டாலும் இன்றைக்கு நான் மக்கள் மன்றத்திலே இருக்கிறேன் என்பதைத் தெரிவித்துகொள்கிறேன்.
60 ஆண்டுகள் பொதுவாழ்க்கையில் மக்களோடு மக்களாகவே நான் இருக்கிறேன். நான் சட்டமன்றத்தில் இல்லாவிட்டாலும் மக்கள் மன்றத்தில் இருக்கிறேன்.
கோட்டையில் அனைத்து கோப்புகளும் இருக்கின்றன. மகளிர் உரிமைத்தொகை கோப்பில் ஸ்டாலின் என்ற கையெழுத்து இருக்கும். அங்கு இந்த ஸ்டாலின் இருப்பேன்.
புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம் போன்ற கோப்புகளில் ஸ்டாலின் இருப்பான். கோட்டையில்தான் இருக்கிறேன். ஆட்சியில்தான் இருக்கிறேன். மகளிர் உரிமைத்தொகை திட்டம் இருக்கும்வரை இந்த ஸ்டாலின்தான் முதலமைச்சர்.

இங்கு பேசிய ஆ.ராசா கூட்டணி பற்றியெல்லாம் பேசினார். கலைஞர் காலத்தில் கூட்டணியைப் பாதுகாப்பாக வைத்திருப்பார். அவர்களே வெளியேறினால்தான் உண்டு.
அதேபோல்தான் நானும் எந்தக் கூட்டணியாக இருந்தாலும் விட மாட்டேன். ஆனால் அவர்களாகவே போனால் நாம் ஒன்றும் பண்ண முடியாது.
இன்று இருக்கக்கூடிய மக்கள் எல்லாம் கூட்டணியே வேண்டாம் என்றுதான் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அதனை விரைவிலேயே நாங்கள் பரிசீலிப்போம்" என்று பேசியிருக்கிறார்.












