முதல்வர் உரை: ``10 Reels-க்கான கண்டென்ட்; இனி சட்டமன்றத்துல டான்ஸ் ஆடுவாங்க போல"...
அயோத்தி ராமர் கோயில் நிதி மோசடிப் புகார்: யோகி ஆதித்யநாத் அரசுக்கு நெருக்கடி! - என்ன நடக்கிறது?
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்டமாகக் கட்டப்பட்டுள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா கோவில், கடந்த 2024-ம் ஆண்டு ஜனவரி 22-ம் தேதி அன்று முறைப்படி திறக்கப்பட்டது. இக்கோவிலின் வரலாற்றுச் சிறப்புமிக்க பிராண பிரதிஷ்டை மற்றும் திறப்பு விழாவை பிரதமர் மோடி தலைமை தாங்கி நடத்தி வைத்தார். அந்தக் கோயிலில் பக்தர்கள் செலுத்தும் கோவில் உண்டியல் காணிக்கை பணம் மற்றும் நன்கொடை நிதியில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்துள்ள புகார்கள், மத்தியில் ஆளும் பா.ஜ.க மற்றும் உத்தரப் பிரதேச மாநில யோகி ஆதித்யநாத் அரசுக்கு கடும் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) அமைக்கப்பட்டுள்ள நிலையில், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் கோவில் கட்டுமானக் குழுத் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா ஆகியோர் பொதுவெளியில் வெளியிட்டுள்ள முற்றிலும் மாறுபட்ட கருத்துகள், ஆளுங்கூட்டணிக்குள் இருக்கும் உட்கட்சிப் பூசலையும், நிர்வாகப் பிளவையும் வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளது என்கிறார்கள்.
ராமர் கோவில் கட்டுமானக் குழுவின் தலைவரும், பிரதமரின் முன்னாள் முதன்மைச் செயலாளருமான நிருபேந்திர மிஸ்ரா, சமீபத்தில் அளித்த தொலைக்காட்சி நேர்காணல்களில், கோவிலில் கடுமையான பாதுகாப்பு மற்றும் நிர்வாகக் குறைபாடுகள் இருந்ததை வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார்.
உண்டியல் பணம் எண்ணும் அறையில் சந்தேகத்திற்கிடமான நகர்வுகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளதாகவும், பணம் எண்ணும் அறைக்கு வெளியே உள்ள கழிவறையில் அநாதையாகப் பணம் கண்டெடுக்கப்பட்டதாகவும் அவர் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார். மேலும், பணம் எண்ணும் பணியில் ஈடுபடுபவர்கள் பாக்கெட்டுகள் இல்லாத ஆடைகளை அணிய வேண்டும் என்ற விதிமுறை மீறப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பு கண்காணிப்பு 'பூஜ்யம்' என்ற அளவில் இருந்ததாகவும் அவர் சாடியுள்ளார்.
மறுபுறம், இந்த விவகாரம் குறித்துப் பேசிய உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், ``அயோத்தி ராம ஜென்மபூமியின் புகழைக் கெடுப்பதற்காக திட்டமிட்டு நடத்தப்படும் "சதி" இது. அயோத்தியை நோக்கி கேள்வி எழுப்புவது அயோத்திக்கு அவமானம்.

இந்தியா ஏதேனும் ஒரு சாதனை படைக்கும் போதெல்லாம், நாட்டின் பிம்பத்தை சீர்குலைக்க சதிகாரர்கள் தூக்கத்தை இழந்து செயல்படுகிறார்கள்" என்று ஆவேசமாகப் பேசிய அவர், 'இன்னும் 15 நாட்களில் சிறப்பு புலனாய்வுக் குழுவின் (SIT) விசாரணை அறிக்கை உண்மையை வெளிகொண்டு வரும். அதுவரை ராம பக்தர்கள் பொறுமை காக்க வேண்டும். ஆதாரமற்ற வதந்திகளைப் பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" எனவும் எச்சரிக்கையையும் அவர் விடுத்துள்ளார்.
கோவில் அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராயின் நெருங்கிய உதவியாளரான ராம் பிரசாத் யாதவ் (என்ற தின்னு), அயோத்தியில் ரூ.50 கோடி மதிப்பிலான சொத்துகளை முறைகேடாக சேர்த்துள்ளதாக எழுந்துள்ள புகார்கள் விவகாரத்தை மேலும் சிக்கலாக்கியுள்ளது.
பணம் எண்ணும் பணிகளுக்குத் தகுதியானவர்களைத் தேர்வு செய்யாமல், ஆர்எஸ்எஸ் என்ற ஒரே தகுதியின் அடிப்படையில் ஊழியர்களை நியமிக்கும் தற்போதைய நடைமுறை இனி வேலைக்கு ஆகாது என்று நிருபேந்திர மிஸ்ரா கடுமையாக விமர்சித்துள்ளார். எனினும், தன் மீதான புகாரை மறுத்துள்ள ராம் பிரசாத் யாதவ், தனது சொத்துகள் அனைத்தும் சட்டப்பூர்வமாக ஈட்டப்பட்டவை என்று விளக்கமளித்துள்ளார்.

இதற்கிடையில், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் இந்த விவகாரத்தில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அயோத்தி பயணம், சிறப்பு புலனாய்வுக் குழுவின் (SIT) விசாரணையில் செல்வாக்கு செலுத்துவதற்கான ஒரு முயற்சியே என்று அவர் சாடியுள்ளார்.
"பொதுமக்கள் வெறும் பாலுக்கும் தண்ணீருக்குமான கணக்கை மட்டும் கேட்கவில்லை; தங்கம், வெள்ளி மற்றும் விலைமதிப்பற்ற ஆபரணங்களின் உண்மையான கணக்கையும் கேட்கிறார்கள்" என்று அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். ஜூன் 13 அன்று அமைக்கப்பட்ட எஸ்சிடி (SIT) குழு, இந்த நிதி மோசடிப் புகார்கள் குறித்த தனது இறுதி அறிக்கையை சமர்ப்பிக்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அயோத்தியில் அரசியல் பரபரப்பு உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
அதைத் தொடர்ந்து, உத்தரப் பிரதேச துணை முதல்வர் பிரஜேஷ் பதக், ``எதிர்க்கட்சிகளிடமும், குறிப்பாக சமாஜ்வாடி கட்சித் தலைவரிடமும் நான் ஒரு கேள்வியைக் கேட்க விரும்புகிறேன்: பாபர் மசூதியைக் கட்டுவதற்காக நிதி திரட்டப்பட்டதே, அந்தப் பணம் எங்கே போனது? அவர் அந்த விவகாரம் குறித்து ஒருபோதும் கேள்வி எழுப்பமாட்டார். மாறாக, சனாதன கலாச்சாரத்தைக் கேள்விக்குள்ளாக்குவதும், திருப்திப்படுத்தும் அரசியல் மற்றும் வாக்கு வங்கி அரசியலைச் செய்வதுமே அவரது வேலையாக இருக்கும். இதன் மூலம் தனது வாக்கு வங்கியைத் தக்கவைத்துக் கொள்ளலாம் என்று அவர் நினைக்கிறார்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

இதற்கிடையில், அயோத்தியில் உள்ள ராமர் கோயில் நிதியில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில், FIR பதிவு செய்யவும், நியாயமான மற்றும் காலவரையறைக்குட்பட்ட விசாரணையை மேற்கொள்ளவும் உத்தரவிடக் கோரி அஜய் குமார் ராய் மற்றும் தினேஷ் குமார் யாதவ் ஆகிய இரு வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.












