செய்திகள் :

வெறும் கிரெடிட் கார்டு ஆப் மட்டுமல்ல.! CRED மீது META ரூ.8,500 கோடியை கொட்டுவதன் மெகா பிளான் என்ன?

post image

இந்தியாவின் மிகவும் உன்னிப்பாகக் கவனிக்கப்படும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் ஒன்றான க்ரெட் (CRED) மீது, டெக் உலகின் ஜாம்பவானான மெட்டா (Meta) நிறுவனம் சுமார் 900 மில்லியன் டாலர் (சுமார் 8,500 கோடி முதலீடு) முதலீடு செய்யவிருப்பதாக வெளியான செய்தி, ஃபின்டெக் உலகில் ஒரு பெரிய புயலைக் கிளப்பியிருக்கிறது. ஆனால், இந்த கதையின் சுவாரஸ்யம் அந்த பெரிய தொகையில் மட்டும் இல்லை. மெட்டா வெறும் பணத்தை மட்டும் கொட்டவில்லை, தனது மிக முக்கியமான தயாரிப்புகளில் ஒன்றான வாட்ஸ்அப்-இன் உலகளாவிய தலைமைப் பொறுப்பையும் க்ரெட் நிறுவனர் குணால் ஷாவிடம் ஒப்படைத்திருக்கிறது. இது ஏதோ தற்செயலான நிகழ்வு இல்லை, இதன் பின்னால் ஒரு மிகப்பெரிய வர்த்தக வியூகம் இருக்கிறது என்கிறார்கள் டெக் உலகில்..!

குணால் ஷா

ராய்ட்டர்ஸ் அறிக்கையின்படி, மெட்டா நிறுவனம் க்ரெட் நிறுவனத்தில் 900 மில்லியன் டாலர் முதலீடு செய்ய உள்ளது. இந்த ஒப்பந்தம் க்ரெட் நிறுவனத்தின் மதிப்பை சுமார் 4.5 பில்லியன் டாலராக உயர்த்தும். இதில் பாதி முதலீடு நிறுவனத்தின் வளர்ச்சிக்கும், மீதிப் பணம் தற்போதைய முதலீட்டாளர்கள் தங்கள் பங்குகளை விற்பதற்கும் பயன்படும். அதே நேரத்தில், க்ரெட் நிறுவனர் குணால் ஷா, வாட்ஸ்அப்-இன் புதிய உலகளாவிய தலைவராகப் பொறுப்பேற்கிறார். இந்த இரண்டு செய்திகளையும் தனித்தனியாகப் பார்த்தால், அவை வெறும் கார்ப்பரேட் நகர்வுகளாகத் தெரியலாம். ஆனால், இரண்டையும் இணைத்துப் பார்த்தால், டிஜிட்டல் பேமென்ட்ஸ் மற்றும் ஆன்லைன் வர்த்தகத்தின் எதிர்காலம் குறித்து மெட்டா என்ன நினைக்கிறது என்பது தெளிவாக தெரியும் என்கிறார்கள் டெக் ஆர்வலர்கள்.

முதல் பார்வையில், மெட்டாவின் இந்தத் தேர்வு கொஞ்சம் ஆச்சரியமாகத் தோன்றலாம். காரணம், க்ரெட் இந்தியாவின் மிகப்பெரிய ஃபின்டெக் நிறுவனம் இல்லை. யுபிஐ (UPI) பரிவர்த்தனைகளில் அது ஆதிக்கம் செலுத்தவில்லை. கோடிக்கணக்கான பயனாளர்களையும் கொண்டிருக்கவில்லை. நம்மில் பலருக்கும் க்ரெட் என்பது கிரெடிட் கார்டு பில்களைச் சரியான நேரத்தில் கட்டினால் ரிவார்டு தரும் ஒரு ஆப், அவ்வளவுதான். ஆனால், அந்தப் பிம்பத்தைத் தாண்டி க்ரெட் இன்று மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது.

2018-ல் தொடங்கப்பட்ட க்ரெட், ஆரம்பத்தில் நல்ல கிரெடிட் ஸ்கோர் உள்ள பயனாளர்களை மட்டுமே குறிவைத்தது. ஆனால், போகப் போக கடன் வழங்குதல், யுபிஐ பேமென்ட்ஸ், இன்சூரன்ஸ், வாடகை செலுத்துதல் எனப் பல நிதிச் சேவைகளுக்குள் நுழைந்தது. இன்று, க்ரெட் செயலியில் சுமார் 17 மில்லியன் மாதாந்திர பயனாளர்கள் இருப்பதாகவும், இந்தியாவின் மொத்த கிரெடிட் கார்டு பில் பேமென்ட்களில் 40%-க்கும் அதிகமானவை இவர்கள் மூலம்தான் நடப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த எண்கள் நிச்சயம் முக்கியமானவை. ஆனால், இதைவிட முக்கியமானது, அந்தப் பயனாளர்கள் யார் என்பதுதான்.

மெட்டா | பணிநீக்கம்
மெட்டா | பணிநீக்கம்

பல ஆண்டுகளாக, இணைய நிறுவனங்கள் பயனாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதையே குறிக்கோளாகக் கொண்டிருந்தன. ஆனால், க்ரெட் கொஞ்சம் வித்தியாசமாக யோசித்தது. எல்லோரையும் குறிவைக்காமல், நிதி ரீதியாக ஆக்டிவாக இருக்கும், கிரெடிட் கார்டு வைத்திருக்கும், ஆன்லைனில் அதிகம் செலவு செய்யும், அடிக்கடி பயணம் செய்யும் ஒரு ப்ரீமியம் வாடிக்கையாளர் கூட்டத்தை மட்டும் ஈர்த்தது. இந்தியாவின் மொத்த இணையப் பயனாளர்களுடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை சிறியதுதான். ஆனால், இவர்களின் மதிப்பு மிக மிக அதிகம்.

ஏற்கனவே பயனாளர்கள் என்ன பார்க்கிறார்கள், விரும்புகிறார்கள், பகிர்கிறார்கள் என்பதைத் தெரிந்து வைத்திருக்கும் மெட்டா போன்ற ஒரு நிறுவனத்திற்கு, இந்த அதிக செலவு செய்யும் வாடிக்கையாளர்கள் கொண்ட தளம் ஒரு புதிய கதவைத் திறக்கிறது. அவர்கள் எப்படிப் பணத்தைச் செலவிடுகிறார்கள் என்பதைப் பற்றிய ஆழமான புரிதலைக் கொடுக்கிறது. இங்குதான் கதை சூடுபிடிக்கிறது. ஏனெனில், இந்தியாவில் பயனாளர்களை ஈர்ப்பது மெட்டாவுக்கு ஒருபோதும் சவாலாக இருந்ததில்லை; விளம்பரங்களைத் தாண்டி அவர்களிடம் இருந்து எப்படிப் பணம் சம்பாதிப்பது என்பதுதான் மெட்டாவின் மில்லியன் டாலர் கேள்வி.

இந்தியாவில் மெட்டாவை விட அதிக வீச்சு கொண்ட நிறுவனங்கள் சில மட்டுமே. வாட்ஸ்அப்-க்கு மட்டுமே 50 கோடிக்கும் அதிகமான பயனாளர்கள் உள்ளனர். இன்ஸ்டாகிராம், ஒரு பொருளைப் பார்ப்பதற்கும், ஷாப்பிங் செய்வதற்கும் ஒரு சக்திவாய்ந்த கருவியாக மாறியுள்ளது. இவ்வளவு பெரிய நெட்வொர்க் இருந்தும், பேமென்ட்ஸ் துறையில் மெட்டாவால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை என்பதுதான் உண்மை. ஃபோன்பே (PhonePe) மற்றும் கூகுள் பே (Google Pay) தான் சந்தையை ஆள்கின்றன. இந்தியாவின் மிகவும் பிரபலமான மெசேஜிங் ஆப்-இல் இணைக்கப்பட்டிருந்தாலும், வாட்ஸ்அப் பே இன்னும் ஒரு சிறிய பிளேயராகவே உள்ளது.

யு.பி.ஐ பரிவர்த்தனை | UPI
யுபிஐ பரிவர்த்தனை | UPI

இந்த இடைவெளி ஏன் முக்கியம்? காரணம், இணையத்தின் அடுத்த கட்ட வளர்ச்சி, உரையாடலை யார் கட்டுப்படுத்துகிறார்கள் என்பதைப் பொறுத்தது அல்ல; பரிவர்த்தனையை (Transaction) யார் கட்டுப்படுத்துகிறார்கள் என்பதைப் பொறுத்தது. யோசித்துப் பாருங்கள், இன்று ஒரு பயனர் இன்ஸ்டாகிராமில் ஒரு பொருளைப் பார்க்கிறார், அதன் விற்பனையாளரிடம் வாட்ஸ்அப்-இல் பேசுகிறார், விவரங்களைக் கேட்டு, வாங்க முடிவு செய்கிறார். ஆனால், பணம் செலுத்தும் நேரம் வரும்போது, அந்தப் பரிவர்த்தனை மெட்டாவின் தளத்திற்கு வெளியே நடக்கிறது. இந்த கடைசிப் படிதான் ஒரு தொழில்நுட்ப நிறுவனத்திற்கு மிக முக்கியமானது. பேமென்ட்ஸ் தான் டேட்டாவை உருவாக்குகிறது, வாடிக்கையாளர் உறவுகளை ஆழமாக்குகிறது மற்றும் வர்த்தகம், கடன் எனப் பல புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது. சுருக்கமாகச் சொன்னால், கவனம் எங்கே வியாபாரமாக மாறுகிறதோ, அதுதான் பேமென்ட்ஸ்.

குணால் ஷா ஏன் ஒரு முக்கியமான புள்ளி?

இங்குதான் குணால் ஷாவின் நியமனம் முக்கியத்துவம் பெறுகிறது. கடந்த பத்தாண்டுகளாக, இந்தியாவின் மிகவும் கவனிக்கப்படும் தொழில்முனைவோர்களில் அவரும் ஒருவர். க்ரெட்-க்கு முன்பு, ஃப்ரீசார்ஜ் (Freecharge) நிறுவனத்தை உருவாக்கி, அதை நாட்டின் பிரபலமான டிஜிட்டல் பேமென்ட் நிறுவனங்களில் ஒன்றாக மாற்றினார். நுகர்வோர் மற்றும் தொழில்நுட்பப் போக்குகளை முன்கூட்டியே கணிப்பதில் அவர் ஒரு கில்லாடி என்ற நற்பெயரைப் பெற்றவர்.

ஆக, உலகின் மிகப்பெரிய மெசேஜிங் தளங்களில் ஒன்றான வாட்ஸ்அப்-இன் தலைமைப் பொறுப்புக்கு ஒரு இந்தியர் வருகிறார் என்பது மட்டுமல்ல; வாட்ஸ்அப்-இன் எதிர்காலம் வர்த்தகம் மற்றும் பேமென்ட்ஸை மையமாகக் கொண்டிருக்கும் நிலையில், அந்தத் துறைகளில் பல ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த ஒருவர் அதன் தலைவராக நியமிக்கப்படுகிறார் என்பதுதான் இங்குள்ள மெகா ட்விஸ்ட்.

இந்திய ஃபின்டெக் மீதான நம்பிக்கை

ஸ்டார்ட்அப் உலகின் நிதிச் சுழற்சியில் இந்த ஒப்பந்தம் ஒரு முக்கிய நேரத்தில் வருகிறது. 2022-ஆம் ஆண்டில் ஸ்டார்ட்அப் நிதி திரட்டல் உச்சத்தில் இருந்தபோது, க்ரெட் நிறுவனத்தின் மதிப்பு சுமார் 6.4 பில்லியன் டாலராக இருந்தது. பின்னர், உலகளாவிய நிதி நெருக்கடி காரணமாக அதன் மதிப்பு 3.5 பில்லியன் டாலராகக் குறைந்தது. தற்போது மெட்டாவின் முதலீட்டிற்குப் பிறகு, அதன் மதிப்பு சுமார் 4.5 பில்லியன் டாலராக உயர்கிறது. இது உச்சத்தை விடக் குறைவு என்றாலும், இது ஒரு குறிப்பிடத்தக்க மீட்சியைக் காட்டுகிறது. ஆட்குறைப்பு, மதிப்புக் குறைப்பு போன்ற செய்திகளால் சூழப்பட்டிருந்த இந்திய ஸ்டார்ட்அப் துறைக்கு, உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றிடமிருந்து வரும் 900 மில்லியன் டாலர் முதலீடு, முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மீண்டும் துளிர்க்கச் செய்யும் ஒரு சக்திவாய்ந்த சமிக்ஞையாகும்.

மெட்டா | பணிநீக்கம்

மெட்டாவின் மெகா பிளான்!

இந்த ஒப்பந்தத்தை ஒரு ஃபின்டெக் முதலீடு என்று எளிமையாகச் சொல்லிவிடலாம். ஆனால், இன்னும் துல்லியமாகச் சொன்னால், இது ஒரு முழுமையான சுற்றுச்சூழல் (Ecosystem) மீதான பந்தயம். மெட்டாவிடம் ஏற்கனவே பார்வையாளர்கள் இருக்கிறார்கள், உரையாடல்கள் நடக்கின்றன, வர்த்தகர்களும் இருக்கிறார்கள். ஆனால், இவை அனைத்தையும் இணைக்கும் நிதி அடுக்கில் (Financial Layer) தான் ஒரு பலவீனமான நிலையில் இருந்தது. க்ரெட், பணக்காரப் பயனர்களுக்கான அணுகலை வழங்குகிறது. குணால் ஷா, பேமென்ட்ஸ் மற்றும் நுகர்வோர் தொழில்நுட்பத்தில் பல ஆண்டு அனுபவத்தைக் கொண்டு வருகிறார். வாட்ஸ்அப், ஈடு இணையற்ற வீச்சைக் கொண்டுள்ளது.

இவை அனைத்தையும் ஒன்றாக இணைத்துப் பார்த்தால், இது ஒரு வழக்கமான முதலீட்டைப் போல் தெரியவில்லை; இது ஒரு நீண்ட கால திட்டமாகத் தெரிகிறது. மெட்டா ஒரு ஸ்டார்ட்அப் மீது மட்டும் முதலீடு செய்யவில்லை. சமூக ஊடகங்கள், மெசேஜிங், வர்த்தகம் மற்றும் பேமென்ட்ஸ் ஆகியவற்றைத் தனித்தனியாகப் பிரிக்க முடியாத ஒரு எதிர்காலத்தில் முதலீடு செய்கிறது என்பதே இதில் கவனிக்கப்பட வேண்டியது.!

தொழில்நுட்பமும் நஸ்டால்ஜியாவும்: NOIZZYBOX-இன் தனித்துவமான வெற்றி! | StartUp சாகசம் 62

இந்தியாவில் மியூசிக் பாக்ஸ் சந்தை, கடந்த சில ஆண்டுகளாக ஒரு தனித்துவமான வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இன்றைய டிஜிட்டல் மற்றும் மியூசிக் ஸ்ட்ரீமிங் (Music streaming) உலகிலும், பழைய நினைவுகளை (Nostalgia) மீட... மேலும் பார்க்க

முகேஷ் அம்பானியை முந்திய டிக்டாக் அதிபர்! ஆசியாவின் புதிய பெரும் கோடீஸ்வரராக உருவெடுத்த சாங் யிமிங்

உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இந்தியாவின் முகேஷ் அம்பானி எப்போதுமே ஆசியாவின் முன்னணிப் புள்ளியாகப் பார்க்கப்பட்டு வந்தார்.ஆனால், ஜூன் 5, 2026 அன்று வெளியாகியுள்ள புளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின... மேலும் பார்க்க

`ஆண்டுக்கு ரூ.200 கோடி வாடகை மிச்சமாகும்' - ரூ.1600 கோடியில் ஏர் இந்தியா கட்டடத்தை வாங்கிய மகா. அரசு

மும்பையின் தென்பகுதியில் இருக்கும் ஏர் இந்தியா கட்டடம் மும்பையின் அடையாளங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ஏர் இந்தியா நிறுவனத்தை மத்திய அரசு டாடா நிறுவனத்திற்கு விற்பனை செய்த போது இந்த ஏர் இந்தியா கட்டிட... மேலும் பார்க்க

சுவிட்சர்லாந்தின் சாம்ராஜ்யம் சரிகிறதா? `உலகப் பணத்தின்' புதிய அரியணை ஏறும் ஹாங்காங்!

பல தசாப்தங்களாக உலகப் பணக்காரர்களின் ரகசியப் புகலிடமாகவும், எல்லை தாண்டிய நிதிப் பரிவர்த்தனைகளின் அசைக்க முடியாத மன்னனாகவும் திகழ்ந்த சுவிட்சர்லாந்தின் சாம்ராஜ்யம் சரிந்துள்ளது என்கிற தகவல் வெளியாகி உ... மேலும் பார்க்க

100 ஆண்டுகள்... மக்களின் நம்பிக்கையில் செஞ்சுரி அடித்த `லயன் பஸ்' கம்பெனி!

திருச்செந்தூர் ரூட்டில் இருந்து திருநெல்வேலிக்கு பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் மாணவ மாணவியர்கள், வேலைக்குச் செல்லும் அலுவலர்கள் என்று அனைவரின் மத்தியிலும் பிரபலமாக வலம் வரும் லயன் பஸ், இந்த ஆண்டோடு செ... மேலும் பார்க்க