ரூ.156-க்கு பதில் ரூ.15,682 அனுப்பிய மும்பைவாசி - காத்திருந்து திரும்ப கொடுத்த ஆ...
முகேஷ் அம்பானியை முந்திய டிக்டாக் அதிபர்! ஆசியாவின் புதிய பெரும் கோடீஸ்வரராக உருவெடுத்த சாங் யிமிங்
உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இந்தியாவின் முகேஷ் அம்பானி எப்போதுமே ஆசியாவின் முன்னணிப் புள்ளியாகப் பார்க்கப்பட்டு வந்தார்.
ஆனால், ஜூன் 5, 2026 அன்று வெளியாகியுள்ள புளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின் புதிய அறிக்கையின்படி, பிரபல 'டிக்டாக்' செயலியின் தாய் நிறுவனமான 'பைட் டான்ஸ்' நிறுவனத்தின் இணை நிறுவனர் சாங் யிமிங், முகேஷ் அம்பானியைப் பின்னுக்குத் தள்ளி ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய கோடீஸ்வரராக உருவெடுத்துள்ளார்.
சாங் யிமிங்கின் சொத்து மதிப்பு அசாத்திய வளர்ச்சியைக் கண்டு 92.8 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளதுடன், அவர் சீனாவின் முதன்மைப் பணக்காரர் என்ற அந்தஸ்தையும் மீண்டும் தன்வசப்படுத்தியுள்ளார்.

ஒரு சிறிய வாடகை அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து தொடங்கப்பட்ட பைட் டான்ஸ் நிறுவனத்தின் இந்த அசுர வளர்ச்சி உலகையே வியக்க வைத்துள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இவரது சொத்து மதிப்பு மிகவும் குறைவாகவே இருந்த நிலையில், தற்போது அது ஏழு மடங்குக்கும் மேல் அதிகரித்துள்ளது.
இந்த அசுரத்தனமான வெற்றிக்கு, செயற்கை நுண்ணறிவு துறையில் பைட் டான்ஸ் நிறுவனம் எடுத்து வரும் அதிரடி நடவடிக்கைகளே மிக முக்கியமான திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது. இந்நிறுவனத்தின் ஏஐ சாட்பாட் தற்போதைய நிலையில் மாதத்திற்கு பல மில்லியன் பயனர்களைப் பெற்று சீனாவின் மிகவும் பிரபலமான செயலியாக மாறியுள்ளது.
அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களுக்குச் சவால் விடும் வகையில், செயற்கை நுண்ணறிவு சந்தையில் மிகப்பெரிய தொகையை முதலீடு செய்ய பைட் டான்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதற்கு முன்னதாக அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடைகள் காரணமாக பைட் டான்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பில் கணிசமான சரிவு ஏற்பட்டிருந்தது. ஆனால், அமெரிக்க முதலீட்டாளர்களுடன் மேற்கொள்ளப்பட்ட வணிகப் பரிமாற்றங்கள் வெற்றிகரமாக முடிந்ததைத் தொடர்ந்து, பைட் டான்ஸ் மீதான ஆபத்துகள் முற்றிலுமாகக் குறைந்து அதன் மதிப்பு பன்மடங்கு உயர்ந்துள்ளது.
இந்த அதிரடி மாற்றங்களால் முகேஷ் அம்பானி ஆசிய அளவில் மூன்றாவது இடத்திற்குச் சரிந்துள்ள வேளையில், இந்தியாவின் கௌதம் அதானி ஆசியாவின் முதல் பணக்காரராகத் தனது இடத்தை இன்னும் தக்க வைத்துக் கொண்டுள்ளார்.!


















