'தவெக-வின் கொள்கை குறித்து அதிகம் பேசினார்' - TVK-வில் அதிமுக முன்னாள் அமைச்சர் ...
CJP: டெல்லி வந்த கரப்பான் பூச்சி கட்சி நிறுவனர் அபிஜீத் - ஜந்தர் மந்தரில் நடக்கும் போராட்டம்!
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, 'காக்ரோச் ஜனதா கட்சி' (CJP) என்ற அமைப்பின் நிறுவனர் அபிஜீத் திப்கே டெல்லியில் பிரம்மாண்ட போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார். இதற்காக அமெரிக்காவிலிருந்து இன்று இந்தியா திரும்பிய அவருக்கு, இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அரசியலமைப்புச் சட்டப் புத்தகத்துடன் விமான நிலையத்தை விட்டு வெளியேறிய அபிஜீத் திப்கேவுக்கு ஆதரவாக, "ஜெய் பீம்", "அபிஜீத் திப்கே ஜிந்தாபாத்" என அவரது ஆதரவாளர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
அங்கிருந்து அவர் நேரடியாகப் போராட்டம் நடைபெறும் ஜந்தர் மந்தர் நோக்கிப் புறப்பட்டார். முன்னதாக அமெரிக்காவிலிருந்து கிளம்பும் போது, "என் விதியை அரசியலமைப்பின் கைகளில் ஒப்படைக்கிறேன்" என Jaibhim என்ற ஹேஷ்டேக்குடன் அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
அபிஜீத் திப்கேவைப் பார்ப்பதற்காகப் பல்வேறு தரப்பு மக்களும் விமான நிலையத்தில் குவிந்திருந்தனர். விமான நிலைய ஊழியரான மிதிலேஷ் குமார் தனது பணி முடிந்ததும் திப்கேவைக் காண ஓடிவந்ததாகக் கூறினார்.
"இந்தியாவுக்கு இவரைப் போன்ற ஒரு இளைஞர் தலைவர்தான் தேவை. எங்களின் பல பிரச்சனைகளுக்கு இவரால் தீர்வு காண முடியும்" என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். போஸ்டன் பல்கலைக்கழகப் பட்டதாரியான திப்கேவின் இந்த இயக்கம், தொடங்கப்பட்ட சில நாட்களிலேயே இன்ஸ்டாகிராமில் 20 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பாளர்களைப் பெற்றுள்ளது.
இந்த விவகாரம் குறித்து ஜார்கண்டிலிருந்து வந்திருந்த சமூக ஆர்வலர் விஜய் குமார் கூறுகையில், "மக்களுக்கு இந்த இயக்கம் மிகவும் முக்கியமானது. ஆனால், இது ஒரு அரசியல் கட்சியாக மாறக்கூடாது; கட்சியாக மாறும் நாளில் இந்த இயக்கம் அழிந்துவிடும்" என்று எச்சரித்தார்.

அதேபோல், ஜந்தர் மந்தர் போராட்டத்தில் பங்கேற்க வந்த 23 வயது இளம்பெண் குஷ்பு, "அவரைப் பார்க்க நான் மிகவும் ஆவலாக இருக்கிறேன். எங்களுக்கு மோடி அரசு மீது நம்பிக்கை இல்லை, ஆனால் திப்கே எங்களுக்காக ஏதாவது செய்வார் என்று நம்புகிறோம்" என்றார். நீட் தேர்வு முறைகேட்டுக்கு எதிராக திப்கே தொடங்கிய ஆன்லைன் மனுவில் ஏற்கனவே ஆயிரக்கணக்கானோர் கையெழுத்திட்டு ஆதரவு தெரிவித்துள்ளனர்.














