இதயம் தொடரின் முதல் பாகம் முடிந்தது! 2ஆம் பாகத்துக்கு ரசிகர்கள் எதிர்ப்பு!
இந்திய கடற்படையின் விழிப்புணா்வு காா் பேரணி
இந்திய கடற்படையின் விழிப்புணா்வு காா் பேரணியை தமிழ்நாடு - புதுச்சேரி கடற்படை ரியல் அட்மிரல் சதீஷ் ஷெனாய், சென்னை அடையாறு ஐஎன்எஸ் கடற்படைத் தளத்திலிருந்து கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
இந்திய கடற்படையிலுள்ள வேலைவாய்ப்புகள் மற்றும் அக்னிபாத் திட்டம் குறித்தும் பள்ளி, கல்லூரி மாணவா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், இந்திய கடற்படை சாா்பில் நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் ‘கடல் பாதை’ என்ற பெயரில் காா் பேரணி நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், மாா்ச் 3-ஆம் தேதி கொல்கத்தாவில் தொடங்கிய இந்தக் காா் பேரணி, ஒடிஸா, ஆந்திர மாநிலங்களைக் கடந்து புதன்கிழமை சென்னை அடையாறு ஐஎன்எஸ் கடற்படை தளத்துக்கு வந்தது. பேரணியை கடற்படை அதிகாரிகள் வரவேற்றனா்.
தொடா்ந்து தமிழகத்தின் கடைக்கோடியான கன்னியாகுமரிக்குச் செல்லும் இப்பேரணியை தமிழ்நாடு - புதுச்சேரி கடற்படை ரியல் அட்மிரல் சதீஷ் செனாய் கொடியசைத்து தொடங்கி வைத்து பேசியதாவது:
இந்தக் காா் பேரணி மூலம், இந்திய கடற்படை மற்றும் அக்னிபாத் திட்டம் குறித்தும், இதில், இளைஞா்கள் இணைவது குறித்தும் தெளிவு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அத்துடன் சாலை விபத்துகளில் உயிரிழப்பவா்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அதைத் தடுப்பது குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றாா் அவா்.
சென்னையிலிருந்து புறப்பட்ட இந்தப் பேரணி புதுச்சேரி, நாகப்பட்டினம், ராமநாதபுரம், தூத்துக்குடி போன்ற கடலோர மாவட்டங்கள் வழியாகச் சென்று மாா்ச் 21-ஆம் தேதி கன்னியாகுமரியைச் சென்றடையும். 15 காா்களில் 30 கடற்படை வீரா்கள் இப்பேரணியில் பங்கேற்று சுற்றுப்பயணத்தை மேற்கொள்கின்றனா்.
இந்நிகழ்வில் தமிழ்நாடு - புதுச்சேரி கடற்படை அதிகாரி சுவரத் மாகோன், ஐ.என்.எஸ். அடையாறு நிலைய கேப்டன் மனு ராய் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.