Transgender Bill: தேசிய திருநர் கவுன்சில் பதவியை ராஜினாமா செய்த உறுப்பினர்கள்; க...
கேரளம்: தேர்தல் ஆணையத்தின் சுற்றறிக்கையில் பாஜக சீல்; முதல்வர் ஆவேசம்; தேர்தல் அதிகாரி சொல்வது என்ன?
கேரள மாநிலத்தில் ஏப்ரல் 9-ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் குற்றப் பின்னணி கொண்டவர்கள் போட்டியிடுவது தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பு உள்ளிட்ட விவரங்கள் இந்த மாத தொடக்கத்தில் மின்னஞ்சல் மூலம் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அனுப்பப்பட்டது.
அந்தக் கடிதத்தில் கேரள மாநில பா.ஜ.க சீல் அச்சிடப்பட்டிருந்தது. தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் பா.ஜ.க முத்திரை எப்படி வந்தது என்று சி.பி.எம் கேள்வி எழுப்பி இருந்தது.
அதுகுறித்து விளக்கம் அளித்த தேர்தல் ஆணையம், 2024-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது குற்றப் பின்னணி தொடர்பான வழிகாட்டுதல்களை மத்திய தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளுக்கு அனுப்பியிருந்தது.
கேரள மாநில பா.ஜ.க அலுவலகத்திற்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் அவர்கள் கட்சியின் ரப்பர் ஸ்டாம்பு சீல் பதித்திருந்தனர். பின்னர் இது குறித்து சில சந்தேகங்களை எழுப்பி தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்டு பா.ஜ.க விண்ணப்பித்திருந்தது.
அந்த விண்ணப்பத்தில் பா.ஜ.க முத்திரை பதித்த அந்தக் கடிதத்தையும் பரிசீலனைக்காக இணைத்து அனுப்பி இருந்தனர். அது டிஜிட்டல் வடிவமாக்கப்பட்டு ஆணையத்தின் சர்வரில் சேமிக்கப்பட்டு இருந்தது.
தற்போது மீண்டும் அரசியல் கட்சிகளுக்கு கடிதம் அனுப்பிய போது, சர்வரில் இருந்த பா.ஜ.க முத்திரை பதித்த கடிதமும் தவறுதலாக அனுப்பப்பட்டதாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்திருந்தது.

சி.பி.எம் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டதில் தவறு கண்டறியப்பட்டதாகவும், உடனடியாக அந்தக் கடிதம் திரும்பப் பெறப்பட்டதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
மேலும், மார்ச் 21-ம் தேதி புதிய கடிதம் அரசியல் கட்சிகளுக்கு அனுப்பப்பட்டதாகவும், அது அலுவல் தவறு என்பதால் அந்தப் பணியில் ஈடுபட்ட சம்பந்தப்பட்ட அதிகாரி பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே தேர்தல் ஆணையத்துக்கும் பா.ஜ.க-வுக்கும் தொடர்பு உள்ளதாக சமூக வலைத்தளங்களில் பதிவுகள் வலம் வந்தன. தேர்தல் ஆணையத்தைச் சந்தேகிக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவிட வேண்டாம் எனக் கேரள மாநில தேர்தல் அதிகாரி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தேர்தல் ஆணையம் குறித்து பதிவிட்டவர்களுக்கு காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவு மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அந்தப் பதிவுகளை நீக்க வேண்டும் எனவும் நோட்டீசில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு மற்றும் காவல் துறையின் நடவடிக்கை குறித்து முதல்வர் பினராயி விஜயனிடம் நேற்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த பினராயி விஜயன், "மத்தியில் ஆளும் பா.ஜ.க முத்திரையுடன் மற்ற அரசியல் கட்சிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதை ஒரு அதிகாரியின் தவறு என்று சாதாரணமாகக் கருத முடியாது.
தேர்தல் ஆணைய அதிகாரிகளின் நடவடிக்கைகளில் முழுமையான அரசியல் நடுநிலைமை பிரதிபலிக்க வேண்டும். உயர் அதிகாரிகள் சரிபார்க்காமல் இதுபோன்ற முக்கியத் தகவல்களை அனுப்புவதை, ஒரு சாதாரணத் தவறு என்றோ, எதிர்பாராத குறைபாடு என்றோ புறக்கணிக்க முடியாது.
இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று கேரள தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். விசாரணையின் முடிவுகளை அரசியல் கட்சிகளுக்கும் பொதுமக்களுக்கும் தெரிவிக்க வேண்டும். இதுபற்றி தலைமை தேர்தல் அதிகாரிக்கு கடிதம் எழுத்தியுள்ளேன். நான் இப்போது சாதாரண குடிமகன்தான்.
காவல் துறை இப்போது எனது கட்டுப்பாட்டில் இல்லை. அதனால், தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையின் பேரிலேயே சமூக வலைத்தளங்களில் பதிவிட்டவர்களுக்கு காவல்துறை நோட்டீஸ் அனுப்பியதாகக் கருதுகிறேன். ஒரு ஜனநாயக நாட்டில், இதுபோன்ற சம்பவங்களுக்கு பொதுமக்களிடமிருந்து கருத்துகளும் விமர்சனங்களும் ஏற்படுவது இயல்புதான்.
அந்த விமர்சனங்கள் கண்ணியத்தின் எல்லைகளை மீறாமலும், அவதூறாக மாறாமலும், தனிப்பட்ட தாக்குதலாகவும் மாறாமல் இருக்கும் வரை அவை கருத்து வெளிப்பாடுகளாகவே கருதப்பட வேண்டும்" என்றார்.














