அண்ணாவுக்கு பிறகு... நெடுஞ்செழியனை முந்தி கருணாநிதி முதல்வராக, திமுக தலைவராக மாற...
'சபரிமலையில் கொள்ளையடித்த தங்கத்தை மரியாதையாக கொண்டு வையடா!' - பிரசாரத்தில் ஆவேசமான சுரேஷ் கோபி
கேரளத்தில் ஏப்ரல் 9-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில் பாலக்காடு மாவட்டத்தில் நடிகரும் மத்திய அமைச்சருமான சுரேஷ் கோபி பிரசாரம் மேற்கொண்டார். மலம்புழா தொகுதி பா.ஜ.க வேட்பாளர் சி.கிருஷ்ண குமாரை ஆதரித்து நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் சுரேஷ்கோபி பேசுகையில், "மலம்புழா சட்டசபை தொகுதியில் கிருஷ்ண குமார் வெற்றிபெற்று வரவேண்டியது பா.ஜ.க தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியின் தேவையை விட பாலக்காடு மக்களுக்கு அவசியமாகும். அதை உணர்ந்து அதிக வாக்கு வித்தியாசத்தில் அவரை வெற்றிபெற வைக்கவேண்டும். இரண்டு, மூன்றாம் இடங்களைக்கூட எதிர்த்து போட்டியிடுபவர்கள் பெறாத நிலையை நீங்கள் ஏற்படுத்த வேண்டும்.

பா.ஜ.க கேரளத்துக்கு என்ன செய்தது என கேட்கிறார்கள். நீங்கள் எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள், அதன்பிறகு 5 ஆண்டுகள் முடிந்த பின்னர் கேளுங்கள். ஒரு எம்.பி என்ற நிலையில் கடந்த 2 ஆண்டுகளில் தொகுதி மேம்பாட்டு நிதியான 10 கோடி ரூபாயில் 8.37 கோடி ரூபாய்க்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன. ஆனால் நான் எதுவும் செய்யவில்லை என்பதுபோன்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்த முயல்கிறார்கள்.

சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கை நடத்துவது உயர்நீதி மன்றம் ஆகும். தங்கம் கொள்ளை விவகாரத்தில் ஆளும் சி.பி.எம் மற்றும் காங்கிரஸ் ஆகியவை அரசியல் விளையாடுகின்றன. ஒன்றை புரிந்துகொள்ளுங்கள். கே.சுரேந்திரன் மற்றும் ஷோபா சுரேந்திரன் போன்ற இரண்டு வித்துக்கள் (விதைகள்) கடந்தமுறை சட்டசபையில் இருந்திருந்தால், 'மிஸ்டர் சீப் மினிஸ்டர், சபரிமலையில் கொள்ளையடித்த தங்கத்தை மரியாதையாக இங்கே கொண்டு வையடா' என்ற குரல் கேட்டிருக்கும். அவர்கள் எப்படி பேசுவார்கள் என்று உங்களுக்குத் தெரியாதா. உங்களுக்கு புரிந்துகொள்ளும் விதமாக நான் பேசியுள்ளேன். கிருஷ்ணகுமாரை ஆதரிப்பதன் மூலம் என்னையும் நாட்டின் பிரதமரையும் நீங்கள் ஆதரிக்க வேண்டும்" என்றார்.












