திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரண்ட்; சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம்...
திருச்சி: `சந்தைப்படுத்துதல் மிகவும் முக்கியம்' - எஃப்.பி.ஓ கலந்துரையாடலில் விவசாயிகள்
திருச்சிராப்பள்ளியில் தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் தமிழ்நாட்டின் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் செயல்திறன், நிலைத்தன்மை, சவால்கள் மற்றும் எதிர்கால வாய்ப்புகள் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனங்கள் என்பது சிறு குறு விவசாயிகள் ஒன்று சேர்ந்து உருவாக்கப்படும் ஒரு கூட்டு அமைப்பாகும்.
இவை, நிறுவனங்கள் சட்டம் அல்லது கூட்டுறவு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட விவசாயிகளின் நிர்வாக குழுவால் வழிநடத்தப்படுகிறது. அரசு வேளாண்மை அமைச்சகம், நபார்டு போன்ற அமைப்புகள் மூலம் எஃப்.பி.ஓ-க்களை ஊக்குவிப்பதற்கும் நிதி உதவிகளை பெறுவதற்கும் உதவி செய்கின்றன.
விவசாயிகளுக்கு நேரடி சந்தை வாய்ப்பு மற்றும் இடைத்தரகர்கள் ஒழிப்பு, எளிதான நிதி உதவி மற்றும் கடன் வசதி, அரசு திட்டங்களை பயன்படுத்துதல் போன்ற முக்கிய நோக்கங்களை கொண்டு செயல்படுகிறது.

இந்த நோக்கங்களை செயல்படுத்துவதில் இருக்கும் சவால்களை எடுத்துரைக்கும் நிகழ்ச்சியில் ICAR-NRCB முதன்மை விஞ்ஞானி முனைவர் சி.கற்பகம், ICAR-NRCB இயக்குநர் முனைவர் இரா.செல்வராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முனைவர் இரா.செல்வராஜன் பேசுகையில்…
``2003 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த எஃப்.பி.ஓ தொடர் வளர்ச்சியால் 2020-ம் ஆண்டுக்கு மேல் 35,000 எஃப்.பி.ஓ-க்கள் வளர்ந்து வருகின்றன.
தற்போது இந்தியா முழுவதும் 45,000-க்கும் மேற்பட்ட எஃப்.பி.ஓ செயல்படுகின்றன. இதில் 86% சிறு குறு விவசாயிகள் தான் உள்ளனர்.
மஞ்சள், வாழை, தென்னை, நெல், இயற்கை விவசாயம், மரவள்ளிக்கிழங்கு, மதிப்புக்கூட்டுப் பொருள்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்வதில் ஏற்படும் சவால்களை குறித்த கலந்துரையாடலை அடிப்படையாகக் கொண்டுதான் இன்று நிகழ்ச்சி அமைந்துள்ளது" என்று விளக்கம் அளித்தார்.
இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் எஃப்.பி.ஓ-வை சேர்ந்த விவசாயிகள் முன்வைத்த முக்கியமான கோரிக்கைகள்:
``1. உற்பத்தி சரியாக செய்தாலும் சந்தைப்படுத்துதலில் பிரச்னை உள்ளது. விவசாயிகள் நேரடியாக உற்பத்தி பொருள்களை இடைத்தரகர்கள் இன்றி சந்தைப்படுத்துவதுதான் நமது நோக்கம். அதன் ஒரு முன்னெடுப்பாக அரசு நிலத்தில் குறைந்தபட்ச நிலமாவது கொடுத்து எங்களுடைய கடைகளை வைக்க வழிவகை செய்ய வேண்டும்.
2. தொடர் மின் கட்ட உயர்வால் ஆலை வைத்திருக்கும் எஃப்.பி.ஓ விவசாயிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மாதம் மின் கட்டணத்திற்கு மட்டுமே 18,000 முதல் 20,000 வரை செலவாகிறது. எனவே மின் கட்டண சலுகை வழங்க வேண்டும் அல்லது சூரிய மின்தகடு அமைத்து தரவேண்டும்.

3. நபார்டு வங்கி போன்ற நிறுவனங்கள் எங்களுக்கு கடனாக நிதி உதவி வழங்குகின்றனர். ஆனால் அது மூன்று ஆண்டுகளுக்கு மட்டும்தான். அதன் பின் எங்களுடைய வருமானத்தை வைத்து தான் நிறுவனத்தை செயல்படுத்த வேண்டும். கூடுதலாக மூன்றாண்டுகள் கொடுத்த கடனையும் திருப்பிக் கொடுக்க வேண்டும். சந்தைப்படுத்துதலும் சரியான வியாபாரமும் இல்லாததால் மூன்று ஆண்டுகளுக்குப் பின் தலைமை நிர்வாக அதிகாரிக்கு(CEO) ஊதியம் கொடுக்க முடியவில்லை. இதனால் நிறைய எஃப்.பி.ஓ-க்களுக்கு தலைமை நிர்வாக அதிகாரி இல்லாமல் இருக்கிறது. இது நிறுவனத்தின் மீதான மேற்பார்வையில் சிக்கல்களை ஏற்படுத்துகிறது.
4. நபார்டு போன்ற நிறுவனங்களில் கடன் வாங்கி கட்ட முடியாத பட்சத்தில் எங்கள் மீது உரிமையியல் வழக்கு போடலாம். ஆனால் குற்றவியல் வழக்குகளை (செக் பவுன்ஸ் வழக்கு) பதிவு செய்கின்றனர்.
இது மிகவும் மன உளைச்சலையும் கூடுதலான நிதி நெருக்கடியையும் ஏற்படுத்துகிறது. 75 வயது எஃப்.பி.ஓ விவசாயி மீது செக் பவுன்ஸ் வழக்கு போடப்பட்டு அவர் வாரம் இரு முறை சென்னை நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டியதாக இருக்கிறது. நபார்டு இது போன்ற வழக்குகளை எங்கள் மீது பதிவு செய்வார்கள் என்று தெரிந்திருந்தால் நாங்கள் அவர்களிடம் கடன் வாங்கி இருக்க மாட்டோம்.
நபார்டு எங்கள் மேல் உரிமையியல் வழக்கு கூட தொடுக்கட்டும் ஏனென்றால் எங்களால் கடனை திருப்பி கட்ட இயலவில்லை. இதற்கு சந்தைப்படுத்துதலில் இருக்கும் சிக்கலே முதல் காரணம். ஆனால் நபார்டு குற்றவியல் வழக்குகளை மனசாட்சி இன்றி எங்கள் மேல் பதிவு செய்யாமல் தடுக்க வேண்டும்."
மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இயலாத எஃப்.பி.ஓ-க்களை சேர்ந்தவர்கள் தங்களின் கோரிக்கைகளை படிவத்தில் எழுதி அனுப்பியுள்ளனர்.
“இந்த கோரிக்கைகளை எல்லாம் தொகுத்து மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்” என எஃப்.பி.ஓ இயக்குநர்கள் தெரிவித்தனர்.




















