`ஆடி கொடைக்கு ஆயிரங்கண் பானையும், தீச்சட்டியும் ரொம்ப விசேஷம்' - கவனம் ஈர்க்கும்...
Agri Budget: ``ஸ்டிக்கர் பட்ஜெட்: '-0' மதிப்பெண்தான் கொடுக்க முடியும்" - எடப்பாடி பழனிசாமி
இன்று சட்டமன்றத்தில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்ப்பட்டது. இந்த பட்ஜெட் விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்திருக்கிறது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக செய்தியாளர் சந்திப்பின்போது, ``தவெக ஆட்சி அமைந்த பிறகு, இரண்டாவது நாளில் முதன்முதலாக வேளாண் பட்ஜெட்டைத் தாக்கல் செய்திருக்கிறார்கள். இந்த வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகள் பெரும் எதிர்பார்ப்போடு இருந்தார்கள். ஆனால், அவர்களுக்குப் மிகப்பெரிய ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
கடந்த காலத்தில் திமுக ஆட்சியில், 20 துறைகளை ஒன்றாக இணைத்து "வேளாண் பட்ஜெட்" என்று அறிவித்து ஒவ்வொரு ஆண்டும் சட்டமன்றத்தில் சமர்ப்பித்தார்கள்.

அதேபோல்தான், இன்றைக்குப் புதிதாக அமைந்துள்ள அரசும் தமிழக விவசாயிகளை ஏமாற்றும் விதமாக வேளாண் பட்ஜெட்டைத் தாக்கல் செய்துள்ளது. சுமார் இரண்டரை மணி நேரம் இந்த பட்ஜெட்டை வாசித்தார்கள். ஆனால், அதில் விவசாயிகளுக்குப் பயனளிக்கக்கூடிய முக்கியமான புதிய திட்டங்கள் எதுவும் இடம்பெறவில்லை.
ஏற்கெனவே ஒவ்வோர் ஆண்டும் வேளாண் மானியக் கோரிக்கையின் போது என்ன அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றவோ, அதே அறிவிப்புகள்தான் இந்த பட்ஜெட்டிலும் இடம் பெற்றுள்ளன. இன்றைய அரசும் அதே பழைய அறிவிப்புகளுக்குப் புதிய "ஸ்டிக்கர்" ஒட்டிச் சட்டமன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறது. இதில் புதிதாக எதுவுமே இல்லை.
தேர்தல் நேரத்தில் தவெக ஆட்சிக்கு வந்தால், ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.3,500 வழங்கப்படும் என்றும், ஒரு டன் கரும்புக்குக் குறைந்தபட்ச ஆதார விலையாக ரூ.4,500 வழங்கப்படும் என்றும் அக்கட்சியின் தலைவர் ஜோசப் விஜய் அறிவித்தார். ஆனால், இன்றைய வேளாண் பட்ஜெட்டில் அந்த அறிவிப்பு இடம்பெறவில்லை.
சொந்தமாக விவசாய நிலம் வைத்துள்ள ஒவ்வொரு விவசாயக் குடும்பத்திற்கும் விதைக் காலச் செலவுகளைச் சமாளிக்க ஆண்டிற்கு ரூ.15,000 வீதம் இரண்டு தவணைகளில் (ஜூலை–ஆகஸ்ட் மற்றும் ஜனவரி–பிப்ரவரி) வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தார்கள். அந்த அறிவிப்பும் இதில் இடம்பெறவில்லை.

குத்தகை விவசாயிகள் மற்றும் விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கு "உழவர் உரிமை அட்டை" வழங்கி, ஆண்டிற்கு ரூ.10,000 உதவித்தொகை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்தார்களே தவிர, பட்ஜெட்டில் அதைச் செயல்படுத்தவில்லை.
தொடக்க வேளாண் கூட்டுறவுச் சங்கங்களில் 5 ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்குப் பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும் என்றும், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ளவர்களுக்குப் பாதி கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் அறிவித்திருந்தார்கள்.
ஆனால், சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு முதலமைச்சர் அவர்கள், 5 ஏக்கருக்குக் குறைவான நிலம் வைத்திருக்கும் சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ.75,000 கடனும், ஏனைய விவசாயிகளுக்கு ரூ.35,000 கடனும் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்து விவசாயிகளை ஏமாற்றியுள்ளனர்.
தேர்தல் நேரத்தில் இனிக்க இனிக்கப் பேசி விவசாயிகளை ஏமாற்றிவிட்டு, இந்த வேளாண் பட்ஜெட்டில் எந்தவொரு வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. இது விவசாயிகளை ஏமாற்றுகின்ற ஒரு நாடக பட்ஜெட்.

விவசாயிகள் உற்பத்தி செய்த நெல்லை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்குக் கொண்டு வரும்போது, உடனுக்குடன் கொள்முதல் செய்யாததால் மழையில் நனைந்து நெல்மணிகள் முளைத்து வீணாகின்றன. பாதுகாப்பிற்குத் தேவையான தார்பாய்கள் கூட வழங்கப்படுவதில்லை.
தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடுமையான வறட்சியும் குடிநீர் தட்டுப்பாடும் நிலவுகிறது. கர்நாடகாவில் உள்ள அணைகள் நிரம்பி உபரி நீரை மட்டுமே திறந்து விடுகிறார்களே தவிர, நமக்கு மாதாந்திர வாரியாக வர வேண்டிய உரிய பங்கீட்டு நீரைப் பெற இந்த அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
தமிழக முதலமைச்சர் உரிமைக்காகக் குரல் கொடுக்காமல் மெளனம் காப்பதுடன், கர்நாடகா செல்ல முயலும் போது அம்மாநில முதலமைச்சரால் நிராகரிக்கப்பட்டு தமிழகத்திற்குத் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளார்.
2 மணி நேரம் 35 நிமிடங்கள் வேளாண் பட்ஜெட்டை வாசித்ததுதான் இந்த அரசின் சாதனையே தவிர, விவசாயிகளுக்கு இதனால் எந்தப் பயனும் இல்லை. நேற்றைய பொது பட்ஜெட்டிற்கு 'பூஜ்ஜியம்' மதிப்பெண் கொடுத்தேன்; இந்த வேளாண் பட்ஜெட்டிற்கு 'மைனஸ் பூஜ்ஜியம்' தான் கொடுக்க முடியும்." என்றார்.















