நாம் பிள்ளைகளுக்கு விட்டுச் செல்வது சொத்தா... அறமா? – தலைமுறை கடக்கும் நற்பண்புக...
`நீங்களாகவே பதவி விலகிடுங்க' ; கலகத்துக்கு காத்திருக்கும் திமுக; போர்மேகத்தில் அதிமுக! | கழுகார்
விழுப்புரம் அ.தி.மு.க மாவட்டச் செயலாளராக பசுபதியை நியமித்ததிலிருந்து, கடும் கொந்தளிப்பில் இருக்கிறார்கள் சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்கள். சண்முகத்தின் ஆதரவாளர்களை எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து நீக்கி வருவதால், விழுப்புரம் மாவட்டத்தை சார்ந்த 1,000 பேர் கட்சிப் பொறுப்புகளை உதற தயாராகிவிட்டனர்.

கடந்த ஜூலை 20-ம் தேதி மதுரை, இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தைக் எடப்பாடி நடத்திக் கொண்டிருந்தபோது, சண்முகம் ஆதரவாளர்கள் 300 பேர் சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்.ஜி.ஆர் மாளிகைக்கு படையெடுத்து, தங்களது ராஜினாமா கடிதங்களைக் கொடுத்திருக்கிறார்கள்.
நாளுக்கு நாள் விழுப்புரம் அ.தி.மு.க-வில் போர்மேகம் இருண்டு கொண்டிருக்கிறது. 'சி.வி சண்முகம் கட்சியைவிட்டு வெளியேற வேண்டும். அல்லது வெளியேற்றப்பட வேண்டும். இரண்டும் இல்லாமல் குழப்பகர சூழலை உருவாக்கி வருகிறது கட்சித் தலைமை' எனக் கொதிக்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.
தமிழ்நாட்டில், உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகளை தொடங்கிட க்ரீன் சிக்னல் கொடுத்திருக்கிறது ஆட்சி மேலிடம். முந்தைய தி.மு.க ஆட்சியில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பி.ஜோதி நிர்மலாசாமி நியமிக்கப்பட்ட நிலையில், அவரை மாற்றிவிட்டு வேறொரு நிர்வாகியை நியமிக்க விரும்புகிறது த.வெ.க தலைமை.

ஆகவே, 'நீங்களாகவே பதவி விலகிவிடுங்கள்' என்று ஜோதி நிர்மலாசாமியை கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் சில மூத்த அதிகாரிகள். ஆனால், 'நான் ஏன் ராஜினாமா செய்ய வேண்டும்?' என தடாலடியாக கேட்கிறாராம் ஜோதி நிர்மலாசாமி.
மாநில தேர்தல் ஆணையர் பதவிக்கு அரசியலமைப்பு ரீதியாக பாதுகாப்பு உள்ளது. பிற ஐ.ஏ.எஸ் அதிகாரிகளைப் போல இவர்களை மாநில அரசால் எளிதாக இடமாற்றம் செய்யவோ, நீக்கவோ முடியாது என்பதால், செய்வதறியாது முழிக்கிறார்களாம் த.வெ.க பவர் சென்டர்கள். வெவ்வேறு ரூபங்களில் குடைச்சல் கொடுத்தாவது ஜோதி நிர்மலாசாமியை ராஜினாமா செய்ய வைக்க காய் நகர்த்தி வருகிறார்களாம்.
மதுரை மாநகராட்சியிலுள்ள 100 வார்டுகளில், 69 வார்டுகளில் தி.மு.க-வும், 4 வார்டுகளில் சி.பி.எம் கட்சியும் வெற்றி பெற்றிருந்தன. அதைத் தொடர்ந்து, ஊழல் புகாரில் சிக்கி தி.மு.க மேயர் பதவி விலகிய நிலையில், துணை மேயரான சி.பி.எம் கட்சியை சேர்ந்த நாகராஜனுக்கு முழு அதிகாரமும் கிடைத்தது. தற்போது சி.பி.எம் கட்சி த.வெ.க-வுக்கு ஆதரவு அளிப்பதோடு, மதுரையில் உள்ள அக்கட்சியின் எம்.எல்.ஏ-க்களுடன் நெருக்கம் காட்டி வருவதால், தி.மு.க கவுன்சிலர்கள் உச்ச கோபத்தில் இருக்கிறார்கள்.
'மேயர் பதவிக்கு நம்ம ஆள் ஒருவரை போட்டாக வேண்டும்...' என்று முயற்சித்து வருகிறார்கள். அதிலும், முன்னாள் அமைச்சர் மூர்த்தியும், மாவட்டச் செயலாளர் கோ.தளபதியும் தங்களுடைய ஆதரவு கவுன்சிலர்களை மேயராக்க காய் நகர்த்தி வருகிறார்கள். கூடிய விரைவில் மாநகராட்சியில் கலகம் செய்ய காத்திருக்கிறது தி.மு.க!
த.வெ.க-வின் சூலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சுகுமாருக்கும், கோவை கிழக்கு மாவட்டச் செயலாளர் பாபுவிற்கும் இடையேயான உட்கட்சி மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளதாம். மாண்புமிகு பதவி கிடைக்காததால், மாவட்டச் செயலாளர் பதவியை பெற்றுவிட வேண்டும் என சுகுமார் காய் நகர்த்தி வருகிறாராம். ஆனால், ரசிகர் மன்ற காலத்தில் இருந்து பணியாற்றும் பாபு, 'தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு கட்சியில் இணைந்த சுகுமாருக்குக் கீழ் நான் வேலை செய்ய முடியாது' எனக் கறாராக சொல்லிவிட்டாராம்.
இதனால் இருவரின் ஆதரவாளர்களிடமும் போஸ்டர், பிளக்ஸ்களில் இருந்து வந்த சண்டை, தற்போது சாலையில் மோதிக் கொள்ளும் அளவிற்கு சென்றுவிட்டதாம். அதுமட்டுமின்றி, இருவரும் மற்றவர் பற்றிய புகார் பட்டியலை தலைமைக்கு அனுப்பி வருகிறார்கள். இந்த அதிகார யுத்தத்தில் யார் பக்கம் நிற்பது எனத் தெரியாமல் அப்பகுதி த.வெ.க-வினர் குழப்பி தவித்து வருகிறார்கள்.
















