கஷ்டங்களை எட்டி உதைத்த கால்பந்து நாயகர்கள்! - வறுமையையும் தடைகளையும் வென்ற 5 வீர...
பள்ளி மாணவர்களுக்கு இலவச சிகிச்சை... சேவையால் மனங்களை வென்ற அம்பாசமுத்திரம் மருத்துவர்!
இன்றைய காலத்தில் மருத்துவம் என்பது பலருக்கு ஒரு தொழிலாக இருக்கலாம். ஆனால் சிலர் மட்டும் அதை ஒரு சேவையாக பார்க்கிறார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர் தான் அம்பாசமுத்திரத்தை சேர்ந்த இளம் மருத்துவர் டாக்டர் ஆதிமாரிமருது.
தன்னுடைய வாழ்க்கைப் பயணம், சந்தித்த போராட்டங்கள், இந்த சேவையின் பின்னால் இருக்கும் காரணம் குறித்து டாக்டர் ஆதிமாரிமருது நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.
``என்னைப் பற்றி சொல்லணும்னா, நான் ஒரு சாதாரண குடும்பத்துல பிறந்து வளர்ந்தவன்.
என்னோட சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டத்துல இருக்குற பண்ணைக்குளம் கிராமம். என்னோட அப்பா ராமமூர்த்தி, அம்மா வள்ளியம்மாள். ரெண்டு பேரும் எவ்வளவு கஷ்டம் இருந்தாலும், என்னை நல்லா படிக்க வைக்கணும்னு தான் நினைச்சாங்க.
நான் கே. ராமநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில்தான் படிச்சேன். அரசு பள்ளியில படிச்சதால, சாதாரண குடும்பத்துல இருக்குற பசங்க என்ன மாதிரியான சிரமங்களை சந்திப்பாங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும். எங்க வீட்டுல பெரிய வசதியெல்லாம் கிடையாது.
என்னோட அப்பா அம்மா நூறு நாள் வேலைக்குப் போய்தான் குடும்பத்தை பார்த்துக்கிட்டாங்க. ஆனா அந்த சூழ்நிலையில கூட, எனக்கு சின்ன வயசுல இருந்தே ஒரு கனவு இருந்துச்சு. அது டாக்டராகணும்னு.

நல்லா படிச்சேன். பிளஸ் டூவுல 1200க்கு 1165 மார்க் எடுத்தேன். ஆனா அதுக்கப்புறம் மருத்துவம் படிக்கணும்னா நிறைய செலவு. அந்த நேரத்துல என் ஆசிரியர்கள்தான் எனக்கு பெரிய துணையா இருந்தாங்க. அவங்க உதவியால்தான் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில MBBS படிக்கிற வாய்ப்பு கிடைச்சது.
நான் மருத்துவம் படிச்சுக்கிட்டு இருந்தப்போதே வாழ்க்கை எனக்கு ஒரு பெரிய பாடம் கற்றுக்கொடுத்துச்சு. கல்லூரியில சேர்ந்த சில மாதங்களிலேயே என்னோட அப்பாவை இழந்துட்டேன். அதுக்கு முன்னாடியும் மருத்துவ செலவுகளுக்காக எங்க குடும்பம் நிறைய கஷ்டப்பட்டிருக்கு.
ஒரு நோயாளிக்கு உடம்பு சரியில்லாதது மட்டும் பிரச்னை இல்ல. அதுக்காக செலவு பண்ண வேண்டிய பணமும் ஒரு பெரிய சுமைங்கிறத நான் என் வாழ்க்கையிலேயே பார்த்தவன்.
அதனால்தான் அப்போவே ஒரு முடிவு எடுத்தேன். டாக்டரான பிறகு என்னால முடிஞ்ச அளவுக்கு மக்களுக்கு உதவணும் என்று.
MBBS முடிச்சதுக்கப்புறம் அம்பாசமுத்திரத்துல ஒரு சின்ன கிளினிக் ஆரம்பிச்சேன். அந்த கிளினிக் ஆரம்பிச்ச முதல் நாளிலிருந்தே அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள்ல படிக்கிற மாணவர்களுக்கு இலவச சிகிச்சை கொடுக்க ஆரம்பிச்சேன். இப்போது குறைந்த செலவுல அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் சிகிச்சை அளிக்கிறேன்.
ஒரு மாணவன் காய்ச்சலோட வந்தாலும் சரி, உடம்பு சரியில்லாம வந்தாலும் சரி, அவன் பணத்தைப் பற்றி யோசிக்காம சிகிச்சை பெறணும் என்பதுதான் என்னோட நோக்கம்.
உண்மையா சொல்லணும்னா, இந்த கிளினிக்கால எனக்கு பெரிய வருமானம் எதுவும் கிடைக்கல. ஆனா மனநிறைவு நிறைய கிடைக்குது. பிள்ளைங்க குணமாகி சிரிச்சுக்கிட்டு வீட்டுக்கு போறத பார்க்குறப்போ கிடைக்கிற சந்தோஷத்துக்கு எந்த பணமும் ஈடாகாது.

நான் படிக்க உதவின ஆசிரியர்களும், என் கனவை நிஜமாக்க உதவின நண்பர்களும்தான் இந்த சேவைக்கு காரணம். அவங்க எனக்கு செய்த உதவியை, நான் சமூகத்துக்கு திருப்பிக் கொடுக்கிறேன்னு நினைக்கிறேன்.
இப்போ நான் அரசு மருத்துவ அதிகாரி பணிக்கான தேர்வையும் எழுதியிருக்கேன். எதிர்காலத்துல அரசு மருத்துவரா பணியாற்றணும். அதோட, மக்கள் அன்போட நினைக்கிற 'ஐந்து ரூபாய் டாக்டர்' ஆகணும் என்பதுதான் என்னோட மிகப்பெரிய கனவு.
என்னால முடிஞ்ச வரைக்கும், மருத்துவத்தை ஒரு தொழிலா இல்லாம, ஒரு சேவையா செய்யணும்னு நினைக்கிறேன். அதுதான் என்னோட பயணமும்... அதுதான் என்னோட கனவும்" எனக் கூறி மனம் நிறைகிறார்.
டாக்டர் ஆதிமாரிமருதுவிடம் சிகிச்சை பெற்றுள்ள அப்பகுதியைச் சேர்ந்த தீபலட்சுமி பேசும்போது,
``எங்க ஏரியால டாக்டர் ஆதிமாரிமருதுவை தெரியாதவங்க ரொம்ப கம்மிதான். ஒரு டாக்டரா மட்டும் இல்லாம, வீட்டுல ஒருத்தர மாதிரி பழகுறாரு.
எந்த நேரத்துல உடம்பு சரியில்லாம போனாலும், தயங்காம அவர்கிட்ட போயிடலாம். எப்போ போனாலும் முகம் சுளிக்காம பொறுமையா கேட்டு, என்ன பிரச்னைன்னு பார்த்து சிகிச்சை கொடுப்பாரு. குறிப்பா பள்ளி படிக்கிற பசங்களுக்கு அவர் செய்யுறது ரொம்ப பெரிய விஷயம். கன்சல்டேஷன் ஃபீஸ் கிடையாது, ஊசி போடுறதுக்கு கட்டணம் கிடையாது. மருந்துகளுக்கும் ரொம்ப குறைவான தொகைதான் வாங்குறாரு.
என்னோட பிள்ளைகளுக்கு எத்தனை தடவை சிகிச்சை எடுத்திருந்தாலும், ஐம்பது ரூபாய்க்கு மேல செலவு ஆனதே இல்ல. சமீபத்துல என்னோட மகனுக்கு மஞ்சள் காமாலை வந்தப்போ கூட இங்கதான் சிகிச்சை எடுத்தோம். நல்லா கவனிச்சு பார்த்துக்கிட்டாரு.
இந்த கிளினிக் எங்க ஏரியா மக்களுக்கு ஒரு மருத்துவமனை மட்டும் இல்ல... ஒரு பெரிய நம்பிக்கை" என நெகிழ்ச்சியுடன் கூறினார்.




















