'பட்டினப்பாக்கம் தலைமைச் செயலகத் திட்டம் ரத்து?' - அமைச்சர் ஆதவ் சூசகம்!
”பொன்னியின் செல்வன் பயணம் ஒரு வரம்”- சோழர்கள் வரலாற்றை அறிய தஞ்சை ஆட்சியர் அசத்தல் முயற்சி!
தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சாவூர் வயல்களுக்கு மட்டுமல்ல வரலாற்றுக்கும் சிறப்பு மிக்க ஊராகும். வயலும், வரலாறுமான வாழ்வியலை கொண்ட பகுதி. இத்தகைய பெருமைகளுக்கு உலகையே வியக்கும் வகையில் ஆட்சி புரிந்த சோழ மன்னர்களே காரணம். உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் தஞ்சாவூரை பெரிய கோயிலை எழுப்பியவர் மாமன்னன் ராஜராஜசோழன். விண்ணை முட்டி நிமிர்ந்து நிற்கும் பெரிய கோயில் விமான கோபுரத்தை கண்டு ஆயிரம் ஆண்டுகளை கடந்த பின்னரும் உலக சுற்றுல்லாப் பயணிகள் அதிசயித்து ரசித்து செல்கின்றனர்.

தஞ்சாவூர் பெரிய கோயிலை போல் பல அதிசங்களை, ஆச்சர்யங்களை பொக்கிஷங்களை உள்ளடக்கி வைத்து விட்டு சென்றுள்ளனர் சோழர்கள். சோழர்களின் ஆட்சி முறை, வரலாறு, கலாச்சாரத்தை அறிந்து கொள்வதற்கான ஆர்வம் இன்றைக்கும் மக்களிடையே பெருகியுள்ளது. இந்நிலையில் சோழர்களின் வரலாற்றை பலதரப்பு மக்களும் அறிந்து கொள்வதற்கான முன்னெடுப்பை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ரேவதி நிகழ்த்தியிருக்கிறார். பொன்னியின் செல்வன் என்ற பெயரில் நடந்து வந்த அந்த வரலாற்று சிறப்புமிக்க பயணம் நின்று போன நிலையில் மீண்டும் அந்த வரலாற்று பயணத்தை உயிர்பித்திருக்கிறார் ஆட்சியர் ரேவதி.
கடந்த 9ம் தேதி நடந்த சோழர்களின் வரலாற்றை அறிந்து கொள்ள கூடிய இந்த பொன்னியின் செல்வன் வரலாற்று பயணத்தை தஞ்சாவூர் பெரிய கோயிலில் இருந்து மாவட்ட ஆட்சியர் ரேவதி தொடங்கி வைத்ததுடன் சோழர்கள் குறித்த அறியாத தகவல்கள் குறித்து பேசியிருக்கிறார். 14 நபர்களுடன் ஒரு நாள் பயணமாக புறப்பட்ட பொன்னியின் செல்வன் வரலாற்று பயணத்தில் கலந்து கொண்டவர்கள் மெயிசிலிர்த்து மாவட்ட ஆட்சியருக்கும், பயண குழுவுக்கும் பாராட்டை தெரிவித்துள்ளனர். இனி பொன்னியின் செல்வன் பயணம் எந்த சூழலிலும் நிற்க கூடாது என்ற வேண்டுகோளையும் விடுத்துள்ளதாக சொல்கிறார்கள்.

இது குறித்து விபரம் அறிந்த தரப்பில் பேசினோம், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சோழர்கள் வரலாறை அறிந்து கொள்ளும் வகையில் பொன்னியின் செல்வன் பயணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. சில முறை பயணமும் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் கடந்த ஒரு வருடமாக அந்த பயணம் நடைபெறவில்லை. இதையறிந்த ஆட்சியர் ரேவதி, சோழர்களின் பொக்கிஷமான வரலாறை அறிந்து கொள்வது என்பது ஒரு வரம். இதை நாம் மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்றார். இதையடுத்து உடனே அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு அறிவிப்பை வெளியிட்டோம்.
பெங்களூர், சென்னை, கோவை, திருச்சி, தஞ்சாவூர் என பரவலாக பல பகுதிகளில் இருந்து 14 நபர்கள் புக் செய்தனர். ஒரு நபருக்கு ரூ.2,000 கட்டணம். வாகனம் மற்றும் டீ முதல் நல்ல தரமான உணவு வரை அனைத்திற்கும் ஏற்பாடு செய்தோம். தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு எல்லோரையும் வர வைத்து அங்கிருந்து காலை 6 மணிக்கு பொன்னியின் செல்வன் பயணத்தை தொடங்கினோம். வீராணாம் ஏரி தான் முதல் ஸ்பாட். அங்கிருந்து உடையார்குடி, கடம்பூர், குடந்தை, பழையாறை, உடையாளூர் என சோழர்கள் வாழ்ந்த வரலாற்று சிறப்பு மிக்க பகுதிகளை பார்வையிட்டு சோழர்களின் அடையாளமாக இருக்கும் பெரிய கோயிலில் நிறைவு செய்தோம். இதில் கலந்து கொண்ட அனைவரும் வந்தியதேவன் காவிய பயணத்தை அனுபவிக்க ஒரு வாய்ப்பாக அமைந்ததாக முத்தாய்த்தனர். தடை பட்டிருந்த சோழர்களின் தடத்தை அறிவதற்கான பயணத்திற்கு மீண்டும் உயிரூட்டியவர் மாவட்ட ஆட்சியர் ரேவதி.

பயணம் முடிந்த பிறகும் வரலாற்று சுற்றுலாவில் கலந்து கொண்ட நபர்கள் இதற்கான அனுபவத்தை சிலிர்ப்புடன் பகிர்ந்து வருகின்றனர். மூன்று மாதத்திற்கு ஒரு முறை பொன்னியின் செல்வன் பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதே போல் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோயில்களை காண்பதற்கும், விவசாயம் குறித்து அறிந்து கொள்வதற்கான பயணமும் நடந்து முடிந்துள்ளது. தஞ்சாவூரின் பெருமையை உலக அளவில் எடுத்து செல்ல வேண்டும், வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப்பயணிகளை ஈர்த்து சோழர்களின் பொக்கிஷங்களை அனைவரையும் அறிய செய்ய வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் ரேவதி அது தற்போது நடந்திருக்கிறது என்றனர்.
















