`டி.ஆர்.பி ரேட்டிங் இனி கிடையாதா?' - சீரியல் ஆடியன்ஸ் கணக்கீட்டில் என்ன செய்யப் ...
``முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயர் மாற்றம்" - அரசாணை வெளியிட்ட தமிழ்நாடு அரசு!
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக இருந்தபோது கொண்டு வந்த முதலமைச்சர் காலை உணவு திட்டத்தின் பெயரை 'பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம்' என தவெக அரசு பெயர் மாற்றம் செய்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் அரசாணையில், ``தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்காகச் செயல்படுத்தப்பட்டு வரும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், வரும் செப்டம்பர் 17-ம் தேதி முதல் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. மேலும், இத்திட்டத்திற்கு ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

ஆரம்பத்தில், மாநகராட்சி, நகராட்சி, ஊரக மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் 1,14,095 மாணவர்களுக்குக் காலை உணவு வழங்கும் வகையில் இத்திட்டம் முதற்கட்டமாகத் தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. இதன் மூலம் தற்போது 37,447 பள்ளிகளைச் சேர்ந்த 19,34,230 தொடக்கப் பள்ளி மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர்.
இப்புதிய விரிவாக்கத்தின் மூலம், தமிழ்நாட்டில் செயல்படும் 15,454 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் 12,87,133 மாணவர்கள் பயனடைவார்கள். ஒரு மாணவருக்கு ஒரு நாளைக்கு ரூ.12.71 செலவினம் என்ற அடிப்படையில், ஆண்டிற்கு 210 வேலை நாட்களைக் கருத்தில் கொண்டு, இத்திட்டத்திற்காக ஆண்டுதோறும் மொத்தம் ரூ.343.55 கோடி செலவிட நிதி அனுமதி வழங்கப்பட்டுள்ளது." எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அதைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாக்கூர் தன் எக்ஸ் பக்கத்தில், ``பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பெயரை காலை உணவுத் திட்டத்திற்குச் சூட்டிய தமிழக முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்! படிக்க வைக்கும் கல்விக்கு பாடுபட்ட பெருந்தலைவருக்குச் செய்யும் முறையான மரியாதை!" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.














