`டி.ஆர்.பி ரேட்டிங் இனி கிடையாதா?' - சீரியல் ஆடியன்ஸ் கணக்கீட்டில் என்ன செய்யப் ...
புதுச்சேரி: 625 வகை போலி மருந்துகள்… நாடு முழுவதும் சப்ளை! - அடுத்தடுத்து சிக்கும் உயரதிகாரிகள் ?
இந்தியாவின் முக்கிய மருந்து நிறுவனங்களில் ஒன்றான சன் ஃபார்மா (Sun Pharmaceutical Industries Limited), தங்களின் உயிர்காக்கும் மருந்துகள் புதுச்சேரியில் போலியாக உற்பத்தி செய்யப்படுவதாக கடந்த 2024-ம் ஆண்டு டெல்லி சி.பி.சி.ஐ.டி-யில் புகாரளித்தது. அதையடுத்து புதுச்சேரியில் செயல்பட்டு வந்த போலி மருந்து தொழிற்சாலைக்கு சீல் வைத்த சி.பி.சி.ஐ.டி போலீஸார், முக்கிய குற்றவாளியான `மதுரை' ராஜா (எ) வள்ளியப்பன் உட்பட 13 பேரை கைது செய்தனர்.

ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கிய இந்த வழக்கை விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழுவை (S.I.T) அமைத்தார் ஆளுநர் கைலாஷ்நாதன். அந்தக் குழு, மதுரை ராஜாவின் மனைவி ஞானப்பிரியா, அவர்களின் பங்குதாரரான என்.ஆர்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மணிகண்டன், விருப்ப ஓய்வு பெற்ற ஐ.எஃப்.எஸ் அதிகாரி சத்தியமூர்த்தி உள்ளிட்ட 13 பேரை கைது செய்தது.
அப்போது பா.ஜ.க எம்.எல்.ஏ-வாக இருந்த முன்னாள் சபாநாயகர் செல்வத்திற்கும் இந்த மோசடியில் தொடர்பிருப்பதாக குற்றம் சுமத்தின எதிர்க்கட்சிகள். அதன்பிறகு என்ன காரணத்தாலோ வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றினார் ஆளுநர் கைலாஷ்நாதன். சிறைக்குச் சென்ற அனைவரும் ஜாமீனில் வெளியே வந்தார்கள். அதன் பிறகு அந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில், கடந்த ஜூன் மாதம் 9-ம் தேதி புதுச்சேரி வந்த சி.பி.ஐ அதிகாரிகள், ஜாமீனில் வெளிவந்திருந்த முக்கியக் குற்றவாளி மதுரை ராஜாவை மீண்டும் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

`சி.பி.ஐ விசாரணையை முடக்குவதற்காக டெல்லி காவல்துறை அதிகாரிகளிடம் இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்தார் ராஜா. அதனால் அவருடன் டெல்லி காவல்துறை இன்ஸ்பெக்டர் பிரவீன் குமார், ஐ.பி.எஸ் அதிகாரி தீபக் கஹ்லாவத் உள்ளிட்ட பலரைக் கைது செய்திருக்கிறோம்' என்றனர் சி.பி.ஐ அதிகாரிகள்.
இது ஒருபுறமிருக்க, கடந்த மாதம் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் 'கியூ' பிராஞ்ச் போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது உரிய ஆவணங்கள் இன்றி, `பிரிகாபலின் 150' (Pregabalin 150 mg) மாத்திரைகள் இலங்கைக்கு கடத்த இருந்ததை கண்டுபிடித்தனர். விசாரணையில், அவை புதுச்சேரியில் தயாரித்தது தெரியவந்தது.

அதன்பேரில், புதுச்சேரி அடுத்த குருமாம்பேட்டில் இயங்கி வந்த 'மெடினோக் ஹெல்த் கேர்' (Medinok Healthcare Private Limited) என்ற நிறுவனத்தில் கடந்த 14-ம் தேதி, மருந்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் மற்றும் போலீஸார் அதிரடி சோதனையை மேற்கொண்டனர். அங்கு போலி மருந்து தயாரிக்கப்பட்டது உறுதியானதால், அந்த நிறுவனத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். அத்துடன் புதுச்சேரி சாரம் பகுதியைச் சேர்ந்த அந்த நிறுவனத்தின் உரிமையாளர் பிரபாகரன் என்பவரை கைது செய்தனர்.
அதையடுத்து விழுப்புரம் மாவட்டம், பூத்துறை பகுதியில் அவர் நடத்தி வந்த குடோனில் தமிழக மருந்துக் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். எந்தவித அனுமதியும் பெறாமல் இயங்கி வந்த அந்த குடோனில் போலியாக தயாரிக்கப்பட்ட 625 வகையான மருந்துகள் இருந்ததைப் பார்த்து அதிர்ந்து போனார்கள் அதிகாரிகள். அதையடுத்து அங்கு தொடர்ச்சியாக மூன்று நாள்கள் ஆய்வு செய்த அதிகாரிகள், அனைத்து வகையான போலி மருந்துகள், அவற்றிற்கான மூலப் பொருள்கள் அனைத்தையும் பறிமுதல் செய்ததுடன், குடோனுக்கு சீல் வைத்தனர். கடந்த 2025-ம் ஆண்டு நாட்டையே உலுக்கிய புதுச்சேரி போலி மருந்து தொழிற்சாலைகள் வழக்கு சி.பி.ஐ விசாரணையில் இருக்கிறது.

தற்போது இந்த தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்ட மருந்துகளும் இந்தியா முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில்தான் தற்போது புதுச்சேரி மருந்துக் கட்டுப்பாட்டு அதிகாரி அனந்தகிருஷ்ணன் காத்திருப்போர் பட்டியலுக்கு அனுப்பப்பட்டிருக்கிறார். இவருக்கு முன்பு, சுகாதாரத்துறை செயலராக இருந்த முகமது யாசின் மிசோராமுக்கு மாற்றப்பட்டிருப்பது குறிப்பித்தக்கது.




















