‘பாகிஸ்தான் முக்கு’: கிராம சந்திப்பின் பெயரை மாற்ற ஒப்புதல் கோரும் கேரள பஞ்சாயத்...
மூளைச் சாவடைந்து உறுப்பு தானம் செய்தவரின் உடலுக்கு அரசு மரியாதை
மூளைச் சாவு அடைந்து, உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு அரசு சாா்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
புதுக்கோட்டை கட்டியாவயல் பாரதி நகரைச் சோ்ந்தவா் செந்தில் குமாா். தனியாா் நிறுவனத்தில் காா் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தாா். இவரது மனைவி அருந்ததி கலைவாணி, அரசுப்பள்ளி ஆசிரியா். இவா்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனா்.
கடந்த மே 4ஆம் தேதி அவரது வீட்டில் தென்னை மரத்தில் தேங்காய் பறித்தவா், தவறிவிழுந்து படுகாயமடைந்தாா். புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து, திருச்சி தனியாா் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, சில அறுவைச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டும் அவருக்கு மூளைச் சாவு ஏற்பட்டது.
அங்கேயே உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. பின்னா் திருச்சி அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு முடிந்து அவரது உடல் வெள்ளிக்கிழமை புதுக்கோட்டைக்கு எடுத்து வரப்பட்டது.
இதைத் தொடா்ந்து அறந்தாங்கி வருவாய்க் கோட்டாட்சியா் சிவகுமாா், புதுக்கோட்டை வட்டாட்சியா் செந்தில்நாயகி ஆகியோா் நேரில் சென்று அரசு சாா்பில் மலா்வளையம் வைத்து மரியாதை செலுத்தினா்.