மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகளில் 47 சதவீத பணிகள் மட்டும் முடிந்துள்ளது - ஆர்டிஐயி...
'6 தொகுதிகள் கொடுத்தே ஆகணும்' - கறார் காட்டும் கம்யூனிஸ்டுகள்; கைவிரித்த திமுக!
கம்யூனிஸ்ட் கட்சிகளுடனான தி.மு.க-வின் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் தொடர் இழுபறி நீடிக்கிறது. பேச்சுவார்த்தை சுமூகமாக செல்லவில்லை எனவும் தி.மு.க இறங்கி வர மறுக்கிறது என குமுறுகிறார்கள் தோழர்கள். இதுகுறித்து விரிவாக விசாரித்தோம்.
2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை அண்ணா அறிவாலயத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. காங்கிரஸுடனான கடும் இழுபறிக்கு பிறகு 28 தொகுதிகளையும் ஒரு ராஜ்ய சபா சீட்டையும் ஒதுக்கியது தி.மு.க. அதைதொடர்ந்து 'எங்களுக்குள் கூடுதல் தொகுதிகள் வேண்டும்' என கச்சைக்கட்டத் தொடங்கினார்கள் இதர கூட்டணிக் கட்சிகள்.

தொகுதி பங்கீடு குறித்து நம்மிடம் பேசிய சி.பி.ஐ, சி.பி.எம் நிர்வாகிகள், "இந்த தேர்தலில் எப்படியாவது கூடுதல் தொகுதிகளை பெற்றுவிட வேண்டும் என்பதில் மிகத் தெளிவாக இருந்தோம். ஆனால், முதற்கட்ட பேச்சுவார்த்தையின்போதே தொகுதிகள் குறைக்கப்படும் என்பதை நாசுக்காக சொல்லிவிட்டது தி.மு.க பேச்சுவார்த்தை குழு. ஆரம்பத்தில் இப்படித்தான் பேசுவார்கள், எப்படியும் கூடுதல் தொகுதிகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் தி.மு.க தனது கறார் தன்மையிலிருந்து இறங்கிவரவில்லை" என்றனர்.
'கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கீடு?' என சில விவரப்புள்ளிகளிடம் கேட்டோம் "கூட்டணிக்கு புதிய கட்சிகள் வந்திருப்பதால் 4 தொகுதிகளை பெற்றுக் கொள்ளுங்கள் என்றது தி.மு.க-வின் பேச்சுவார்த்தை குழு, ஆனால் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தலா 8 இடங்கள் எதிர்பார்த்தன. சி.பி.ஐ-யின் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தையிலும் அவர் எதிர்பார்த்த முடிவுகள் எட்டப்படாததால் சி.பி.ஐ மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், முன்னாள் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் ஆகியோர் முதல்வர் சந்தித்தும் முறையிட்டனர். அதன்பின்னர் 4 தொகுதியிலிருந்து 5 தொகுதிகள் தர முன்வந்திருக்கிறது தி.மு.க தலைமை.
கூடுதல் தொகுதிகள் தராவிட்டாலும் பரவாயில்லை, கடந்தமுறை பெற்ற 6 தொகுதிகளை தாருங்கள் என்றிருக்கிறார்கள் கம்யூனிஸ்ட். ஆனால் கடைசிவரை 5 தொகுதிகளை தி.மு.க தாண்டவில்லை. ஆகையால் என்ன செய்வதென்று தெரியாமல் கையை பிசைகிறார்கள் சி.பி.ஐ கட்சியினர். அதேபோல் சி.பி.எம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், 6 தொகுதிகளை போராடியாவது பெற்றாக வேண்டும் என்றிருக்கிறார். ஆனால் கம்யூனிஸ்ட் எவ்வளவு போராடினும் 5 தொகுதிகள்தான் என்பதில் ரொம்ப உறுதியாக இருக்கிறார்கள்" என்றனர்
இந்த ரேஸில் யார் வெல்கிறார்கள் எனப் பார்ப்போம்!


















