`நாளையிலிருந்து கோழி இறைச்சி கிடைக்காதா?' - கோழி வணிகர்களின் கூட்டமைப்பு சொல்வது...
மேகதாது விவகாரம்: ``ராகுல் காந்தியால் இந்த ஒரு வரியை பகிரங்கமாகச் சொல்ல முடியுமா?" - அன்புமணி சவால்!
கர்நாடக முதலமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்துவதோ அல்லது மேகதாது பகுதியைப் பார்வையிடுவதோ தமிழ்நாட்டுக்குப் பெரும் பாதகமாக அமையும் என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``மேகதாது அணை திட்டத்தை தமிழ்நாடு இதுவரை ஏற்றுக்கொள்ளவும் இல்லை, அங்கீகரிக்கவும் இல்லை. அவ்வாறு அங்கீகரிக்கப்படாத ஒரு திட்டத்தைக் குறித்துக் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் எந்தவித அர்த்தமும் இல்லை. இந்த விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி ஆலோசிக்க வேண்டும்.

இது ஒரு தனிப்பட்ட அரசியல் கட்சியின் பிரச்னை அல்ல. ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்னை ஆகும்.
காவேரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுபடி அணையிலிருந்து தண்ணீர் திறக்க கர்நாடகா தொடர்ந்து மறுத்து வருகிறது. அணையில் போதிய தண்ணீர் இருந்தும் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர மறுக்கும் சூழலில், மேகதாதுவில் புதிய அணை கட்டப்பட்டு விட்டால் தமிழ்நாட்டுக்கு குடிநீர்கூடக் கிடைக்காத நிலை உருவாகும்.
எனவே, பேச்சுவார்த்தை என்பது கர்நாடக அரசுடன் அல்லாமல் மத்திய அரசிடமும், பிரதமர் மோடியிடமுமே நடத்தப்பட வேண்டும். பிரதமர் மோடிக்கு அழுத்தம் கொடுத்து, மேகதாது திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை திரும்பப் பெற உத்தரவிடச் செய்ய வேண்டும். இந்த விஷயத்தில் மத்தியிலுள்ள பா.ஜ.க அரசும், கர்நாடகாவிலுள்ள காங்கிரஸ் அரசும் கூட்டுச் சதி செய்கிறது.
சமீபத்தில் நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர், "2018-ம் ஆண்டின் உச்ச நீதிமன்றத் தீர்ப்பில், தமிழ்நாட்டின் அனுமதி பெற்றே கர்நாடகா அணை கட்ட வேண்டும் என்று எந்த இடத்திலும் கூறப்படவில்லை" எனத் தவறான தகவலைப் பதிவு செய்துள்ளார். இதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
மேல்மடை மாநிலம் எந்தவொரு கட்டுமானத்தையும் கீழ்மடை மாநிலத்தின் அனுமதியின்றி செய்ய முடியாது என்பதே சர்வதேச அளவிலான நதிநீர் ஒப்பந்த விதியாகும். எனவே, இந்த உண்மையை மறைத்து நாடாளுமன்றத்தில் பொய் உரைத்த மத்திய இணை அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தமிழ்நாட்டைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்களுடன் இணைந்து செயல்படத் திட்டமிடப்பட்டுள்ளது.
மத்திய அரசை வலியுறுத்தி அணை கட்டத் தடை விதிக்க வேண்டும் எனக் கூறும் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு, தனது கட்சித் தலைவர் ராகுல் காந்தியிடம் இது குறித்துப் பேசத் தைரியம் இருக்கிறதா? நிக்கோபார் தீவில் காடுகளை அழிக்கும் திட்டம் எனக் கூறி எதிர்த்த ராகுல் காந்தி, மேகதாதுவில் அணை கட்டினால் சுமார் 12,500 ஏக்கர் காடுகளும், மூன்று வனவிலங்கு சரணாலயங்களும் அழியும் அபாயம் உள்ளதை எதிர்ப்பாரா? மேகதாது அணை திட்டம் சட்டத்திற்கு எதிரானது, வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் விதிகளுக்கு எதிரானது, விவசாயிகளுக்கு எதிரானது என்பதால் "கர்நாடகாவில் மேகதாது அணை கட்டக் கூடாது" என்று ஒரே ஒரு வரியை ராகுல் காந்தி பகிரங்கமாக அறிவிக்கத் தயாரா?" எனச் சவால் விட்டிருக்கிறார்.














