'வாய் திறக்காத அமைச்சர்கள்; கண்ணாமூச்சி ஆடும் முதல்வர் விஜய்!' - தவெக அரசின் மேகதாது 'ரகசியம்'
மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகாவின் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள், விவசாய சங்கங்கள் என அத்தனை தரப்பினரும் ஒரே நேர்க்கோட்டில் இணைந்து மாநிலத்தின் உரிமைக்குரலாக ஒலித்துக் கொண்டிருக்கின்றனர்.

அதேநேரத்தில், இங்கே தமிழ்நாட்டில் மேகதாது விவகாரம் குடுமிப்பிடி சண்டையாக மாறியிருக்கிறது. அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைத்து மாநிலத்தின் கருத்தை ஒருமித்த குரலில் வெளிப்படுத்த வேண்டிய தமிழக அரசு 'ரகசியம்...பரம ரகசியம்' என சென்சிட்டிவான விவகாரத்தில் சீட்டுக்கட்டு ஆடிக்கொண்டிருக்கிறது.
'மேகதாது விவகாரத்தில் முறையான புரிதல் இல்லாத ஆலோசகர்களின் கருத்தை எடுத்துக் கொண்டு முதல்வர் சொதப்புகிறார்' எனக் கூறும் கோட்டை வட்டாரத்தினர் மேலும் விரிவாக பேசுகையில், 'மேகதாது விவகாரம் நீண்ட நெடியது. ஒவ்வொரு காலக்கட்டத்திலும் அந்த விவகாரம் எப்படி உருமாறி உருமாறி இப்போதைய காவிரி மேலாண்மை வாரியம் வரை வந்திருக்கிறது என்பதே பெரிய வரலாறு. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கருணாநிதி முதல் எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின் வரை முன்னாள் முதல்வர்கள் இந்த விவகாரத்தை எப்படி அணுகியிருக்கிறார்கள் என்பதை மனதில் வைத்தே இப்போதைய முதல்வர் ஒரு முடிவை எடுத்திருக்க வேண்டும்.

மாறாக, இந்த வரலாறெல்லாம் தெரியாத முதல்வரின் ஆலோசகர்கள் ஒரு சில அதிகாரிகளின் யோசனையை கேட்டே அவர் கர்நாடகாவுக்கு பேச்சுவார்த்தைக்கு செல்ல முடிவெடுத்தார். தமிழக முதல்வர் பேச்சுவார்த்தைக்கு வருகிறார் என்கிற நாகரீகத்துக்காகவாது கர்நாடகா கட்சிகள் அமைதியாக இருக்கவில்லை. தகவல் வெளியான உடனேயே போராட்டத்தை தொடங்கிவிட்டார்கள். சிவகுமாருக்கும் கட்சிக்குள் இருந்தே பெரிய அழுத்தம். அந்த சமயத்தில்தான் காவிரி மேலாண்மை வாரியமும் ஜூலை 29 முதல் 15 நாட்களில் 4.5 டி.எம்.சி தண்ணீரை தமிழ்நாட்டுக்கு திறந்துவிட வேண்டுமென உத்தரவிட்டது. அது உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட வாரியம்.
அணைகளின் நீர் தேக்க அளவையெல்லாம் கணக்கிட்டுதான் அவர்கள் நீர் திறப்பு குறித்து உத்தரவிடுவார்கள். அப்படி அவர்கள் இட்ட உத்தரவையே நிறைவேற்ற முடியாது எனக் கூறி முறையிட்டது கர்நாடக அரசு. இதெல்லாம் முதல்வர் விஜய் கர்நாடகாவுக்கு செல்லப்போகிறார் எனும் நிலையில் நடந்தது. இப்படிப்பட்டவர்கள் எப்படி ஒரு சிட்டிங் பேச்சுவார்த்தையில் தமிழகத்துக்கு தண்ணீர் கொடுக்க முன்வருவார்கள்? முதல்வருக்கு தமிழக அரசியல் வரலாற்றின்படி ஒரு நல்ல ஆலோசனையை வழங்காமல், அதிகம் யோசிக்காமல் சிந்தனையற்ற ஒரு ஐடியாவை கொடுத்து அவரை பெரும் அரசியல் அழுத்தத்தில் அவரது ஆலோசகர்கள் சிக்க வைத்திருக்கின்றனர்' என்றனர்.

'மேகதாது விவகாரம் அரசியலை கடந்த தமிழக மக்களின் உரிமையும் உணர்வும் கலந்த பிரச்னை. அந்த விவகாரத்தில் இந்த அரசாங்கம் ஏன் இத்தனை ரகசியம் காக்க வேண்டும்' என கேள்வியெழுப்பும் அரசியல் விமர்சகர்கள், 'முதல்வர் கர்நாடகாவுக்கு செல்லப்போகிறார் எனும் அறிவிப்பை தமிழக அரசு எங்கேயுமே அதிகரிப்பூர்வமாக வெளியிடவில்லை. கோட்டையிலிருந்து தகவலாக கசியவிடப்படுகிறது. கர்நாடக முதல்வர் சிவகுமார் விஜய்யின் வருகை திட்டத்தை வெளிப்படையாக உறுதி செய்கிறார்.
பின்னர் கர்நாடகாவில் எழுந்த அழுத்தத்தை தொடர்ந்து அவரே முதல்வர் விஜய்யை கர்நாடகாவுக்கு வர வேண்டாம் என சொல்கிறார். அப்போதும் தமிழக அரசு அமைதியாக இருக்கிறது. முதல்வரின் கர்நாடகா பயணம் ரத்து குறித்தும் எந்தத் தகவலும் இல்லை. ஒட்டுமொத்த தமிழர்களின் டெல்டா விவசாயிகளின் உரிமை விவகாரத்தில் இதற்கு முந்தைய எந்த அரசும் இத்தனை ரகசியம் காத்தது இல்லை. திமுக, அதிமுக என தெருவில் எதிர் எதிராக நின்று அடித்துக் கொள்ளும் கட்சிகள் கூட ஆட்சியில் இருக்கும் போது அனைத்துக்கட்சி கூட்டத்தை எல்லா தரப்பினருடைய கருத்தையும் கேட்டிருக்கின்றனர். ஆனால், தவெக அரசு அதை சட்டை செய்யவே இல்லை. இத்தனைக்கும் எதிர்க்கட்சிகள் ஒருமித்த குரலில் அனைத்துக்கட்சி கூட்டம் வேண்டும் என்கின்றனர். ஆளும் அரசு அதை கண்டுகொள்ளவே இல்லை.

இந்த மாதிரியான சென்சிட்டிவான விவகாரங்களில் தமிழக மக்களின் குரலாக அனைத்து கட்சிகளையும் ஒரே புள்ளியில் இணைக்க வேண்டியது ஆளுங்கட்சியின் பொறுப்பு. ஆனால், இங்கே கருணாநிதி, ஸ்டாலின் என முன்பு ஆண்டவர்களின் மீது பழியை போட்டு அரசியல் ஆட்டம் ஆடிக்கொண்டிருக்கிறது தவெக. கட்சிகளை விடுங்கள், விவசாயிகளிடம் பேசினீர்களா? பட்ஜெட் கூட்டத் தொடருக்கு ஆலோசனை கேட்க தமிழகம் முழுவதுமிருந்து விவசாயிகளை வர வைத்தீர்கள். செங்கோட்டையன், ஆனந்த் உட்பட 10 அமைச்சர்கள் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். முதல்வர் கர்நாடகா செல்வது குறித்தோ மேகதாது விவகாரம் குறித்தோ அந்த கூட்டத்தில் பேசப்படவே இல்லை. விவசாயிகளாக எழுந்தரித்து 'முதல்வர் கர்நாடகாவுக்கு செல்ல வேண்டாம்' என கொதித்து பேசியிருக்கின்றனர். அதற்கு அமைச்சர்களிடமிருந்து எந்த பதிலும் இல்லை.
விவசாயிகளின் கருத்தை அமைச்சர்கள் முதல்வரிடம் எடுத்துச் சென்றார்களா என்றே தெரியவில்லை. அப்படி எடுத்து சென்றிருந்தால் சிவகுமார் வர வேண்டாம் என்று சொல்வதற்கு முன்பு முதல்வரே கர்நாடகா பயணத்தை ரத்து செய்திருப்பார். வேளாண் மற்றும் நீர்வளத்துறை என இரண்டு அமைச்சகங்கள் இந்த விவகாரத்தில் ரொம்பவே முக்கியமானவே. இரண்டு துறைகளின் அமைச்சர்களான ஆனந்தும் வினோத்தும் மேகதாது விவகாரத்தில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பையாவது நடத்தியிருக்கிறார்களா? இந்த இரண்டு அமைச்சர்களும் இல்லாமல் கூட மேகதாது விவகாரம் குறித்து முதல்வர் சில ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியிருக்கிறார். மேகதாது விவகாரத்தின் அடிப்படையே தெரியாமல் 'ரகசியம்...பரம ரகசியம்' என கண்ணாமூச்சி அரசியலை செய்து கொண்டிருக்கிறது தவெக' என்கின்றனர்.

தவெக என்கிற கட்சியை வெறுமென 'தகவல்'களை மையமாக கொண்டு விஜய் நடத்தலாம். அது அவரது கட்சி, அவரது உரிமை. ஆனால், தமிழகம் ஒருமித்த குரலில் கைகோர்க்க வேண்டிய பிரச்னைகளிலும் வாயை திறக்காமல் வெறுமென தகவல்களை மட்டுமே கசியவிட்டு கபடி ஆடுவது பொறுப்பற்றத் தன்மையே.












