செய்திகள் :

வெளியே சொல்லமுடியாத அளவுக்கு வாழ்க்கை கசக்கிறதா... இந்த கணேசரின் சந்நிதிக்குச் சென்று வாருங்கள்!

post image

திருப்போரூர் முருகப்பெருமான் கோயில் கொண்டிருக்கும் தலம் என்பது அனைவரும் அறிந்த தகவல். முருகன் சூரபதுமனோடு வான் வெளியில் இந்தத் தலத்தில் யுத்தம் செய்தார் என்பதாக ஐதிகம்.

எனவே இங்கே சென்றாலே வாழ்வில் பகை அழியும் என்பது நம்பிக்கை. அதே தலத்தில் அருளும் கணபதி மிகவும் விசேஷமானவர் என்பதை பலரும் அறிவதில்லை. அந்த கணபதிக்கு வழிபாடு நடந்தபிறகே ஆலயத்தின் பிற சந்நிதிகளில் வழிபாடு நடைபெறும் என்றால் அந்த சந்நிதியின் மகிமை அளப்பரியது. வாருங்கள் அந்த விநாயகரின் சிறப்புகளை அறிந்துகொள்வோம்.

திருபோரூரில் கோயில் கொண்டிருக்கிறார் வேம்படி விநாயகர். பெயரிலேயே விநாயகர் வேப்ப மரத்தின் அடியில் எழுந்தருளியிருப்பவர் என்கிற தகவல் வெளியாகிவிடும். ஆனால் அந்த வேப்பமரம் தோன்றிய கதை சுவாரஸ்யமானது.

திருப்போரூர் முருகன் கோயில்
திருப்போரூர் முருகன் கோயில்

அசுரன் ஒருவன் தேவர்களை மிகவும் தொல்லை செய்ய அவர்கள் திருமாலைச் சரணடைந்தனர். அவரும் தேவர்களுக்கு உதவ முன்வந்தார். திருமாலிடம் இருந்து தப்பியோடிய அசுரன் ஒருவன், பிருகு முனிவரிடம் சரண் புகுந்தான். அவர் அவனுக்கு அடைக்கலம் தர மறுத்துவிட்டார்.

பயந்து அங்குமிங்கும் ஓடிய அசுரன், நீராடிவிட்டு வந்துகொண்டு இருந்த பிருகு முனிவரின் மனைவி புலோமசையைக் கண்டான். அவளின் காலில் விழுந்து, தனக்கு அபயம் அளிக்கும்படி வேண்டினான்.

முதலில் மறுத்தவள், பிறகு அவனது மன்றாடலுக்கு மனமிரங்கி, அவனுக்கு சரணாகதி அளித்தாள். அந்த வேளையில், அசுரனைத் தேடி அங்கு வந்த திருமாலை தொழுது, அசுரன் தன்னிடம் சரண் புகுந்ததை விவரித்து, அவனை விட்டுவிடும்படி வேண்டினாள். ஆனால், திருமால் தயவுதாட்சண்யம் காட்டாமல் அசுரனைத் தாக்கினார்.

'நான் அவனுக்கு அடைக்கலம் தந்திருக்கிறேன். எனவே, முதலில் என்னை சம்ஹரித்துவிட்டு, அதன் பிறகு அசுரனை அழியுங்கள்’ என்றாள் புலோமசை தீர்மானமாக!

இதனால் கோபம் அடைந்த திருமால், சக்ராயுதத்தால் பிருகுவின் மனைவியை வீழ்த்தினார். இதைக் கண்ட மற்ற ரிஷிபத்தினிகள் அலறியடித்தபடி ஓடிச் சென்று, பிருகுவிடம் விஷயத்தைச் சொன்னார்கள். உடனே, மனைவி விழுந்து கிடக்கும் இடத்துக்கு வந்தார் பிருகு. அங்கே அவரது கண்களுக்கு விஷ்ணு தென்படவில்லை.

மாறாக, அவரின் மார்பில் இருந்த மகாலட்சுமியே முனிவரின் கண்ணுக்குத் தெரிந்தாள். ''சாகாத் தன்மையும் இனிப்பும் கலந்த பாற்கடலின் அமுதத்துடன் பிறந்த நீ... கசப்பான இந்தச் செயலைச் செய்யும்படி திருமாலை அவரின் நெஞ்சில் இருந்துகொண்டு மூட்டிவிட்டுவிட்டாய். நீயும் பூலோகத்தில் கசப்பின் மரமாகப் போவாய்'' என்று திருமகளைச் சபித்தார். பிறகு, இறந்து கிடக்கும் புலோமசையின் உடலோடு சிரத்தைப் பொருத்தி, அவளை உயிர்ப்பித்தார்.

திருப்போரூர் முருகன் கோயில்
திருப்போரூர் முருகன் கோயில்

முனிவரின் சாபத்தால் மனம் வருந்திய திருமகள், திருமாலிடம் புலம்பினாள். அவரோ, ''விநாயகரின் கருணை இருந்தால் மட்டுமே, உனது சாபம் தீரும்'' என வழிகாட்டினார். அதன்படி பூலோகம் வந்தவள், ஓரிடத்தில் வேப்ப மர வடிவம் தாங்கி, அங்கிருந்த விநாயகரை வழிபட்டுத் தவம் செய்து, அவரருளால் சாப விமோசனம் பெற்றாள். அந்த வேப்ப மரத்தின் அடியில் அருளும் விநாயகருக்கு, ஸ்ரீவேம்படி விநாயகர் என்றே திருநாமம்!

அன்னை மீனாட்சியின் ஆணைப்படி யுத்தபுரி எனும் திருப்போரூரை அடைந்த சிதம்பர சுவாமிகள், அங்கே முருகன் ஆலயம் எங்குள்ளது என்று தேடியபோது, வேம்படி விநாயகர் அவருக்குக் காட்சி அளித்தார்.

மகாலட்சுமிக்கு அருளிய அந்தப் பிள்ளையாரை, சிதம்பர சுவாமிகளும் வழிபட்டார். மீனாட்சி அன்னையின் ஆணைப்படி, கந்தவேள் ஆலயத்தைப் பொலிவுறச் செய்வதற்கு, ஸ்ரீவேம்படி விநாயகரின் திருவருளை வேண்டினார்.

விநாயகர் வழிகாட்ட, அங்குள்ள பனங்காட்டில் பெண் பனைமரத்தின் ஒன்றின் அடியில், சுயம்பு மூர்த்தியாக கந்தவேள் காட்சியளிப்பதைக் கண்டு மகிழ்ந்தார். அந்த மூர்த்திக்கு சிறு குடில் ஒன்று அமைத்துப் பாதுகாத்தார்.

வேம்படி விநாயகர் கோயிலில் இருந்துகொண்டு, அருகிலுள்ள வள்ளையார் ஓடையில் நீராடி, தினமும் வழிபட்டு வந்தார். திருப்போரூர் முருகன் கோயில் திருப்பணி ஏற்பாடுகளைச் செய்து, கந்தவேளின் ஆலயத்தைப் புதுப்பித்தார்.

சென்னை- மாமல்லபுரம் செல்லும் வழியில் சுமார் 42 கி.மீ. தூரத்தில் உள்ளது திருப்போரூர். திருமால், மகாலட்சுமி, கண்வ முனிவர் ஆகியோர் வழிப்பட்ட தலம் இது. இங்கே, ஸ்ரீவேம்படி விநாயகர் ஆலயம், முருகன் கோயிலுக்கு மேற்கில்... சாலையின் வலப்புறம் அமைந்துள்ளது. இந்தப் பிள்ளையாரை வழிபட்ட பிறகே, கந்தவேள் ஆலயத்துக்குச் செல்லவேண்டும் என்பார்கள்.

திருப்போரூர் முருகன் கோயில்
திருப்போரூர் முருகன் கோயில்

திருப்போரூருக்குள் நுழையும்போதே, சிதம்பர சுவாமிகளின் திருமடமும், சமாதியும் உள்ளன. அருகிலுள்ள பிரணவ மலையில் கயிலாயநாதரும் பாலாம்பிகையும் அருள்புரிகிறார்கள்.

திருப்போரூரில் தினமும் வேம்படி விநாயகருக்குப் பூஜை செய்த பின்னரே மற்ற சந்நிதிகளில் பூஜை நடைபெறுகிறது. சிதம்பர சுவாமிகளின் குருபூஜை தினமான வைகாசி பௌர்ணமி தினத்தில், வேம்படி விநாயகருக்கு 1008 தேங்காய்களைச் சமர்ப்பிக்கிறார்கள்.

அன்று அன்னதானமும் நடைபெறுகிறது. வேம்படி விநாயகரை வழிபட்டுத் திருவருள் பெற, திருப்போரூர் சென்று வருவோம்!

திருவாரூர் மாவட்டம், ஆலங்குடி கலங்காமல் காத்த விநாயகர்: தீராத பிரச்னைகளும் தீர்க்கும் கணபதி சந்நிதி!

விநாயகர் தலங்கள் ஒவ்வொன்றும் தனிச்சிறப்பு பெற்றவை. ஆலயம் எதுவாக இருந்தாலும் அங்கே கணபதி குடியிருப்பார் என்பதை நாம் அறிவோம். ஆனால் சில தலங்களில் அந்த கணபதிக்குத் தனிச்சிறப்பு இருக்கும். அவரைத் தவறாமல் ... மேலும் பார்க்க

திருக்கடவூர் கள்ளவாரண பிள்ளையார்: ஆயுள் விருத்தி அருளும் கணபதி சந்நிதி! விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்!

திருக்கடவூர் என்றதும் நமக்கு நினைவுக்கு வருவது அன்னை அபிராமியும் அப்பன் அமிர்தகடேஸ்வரரும்தான். அதே தலத்தில் அருளும் விநாயகப்பெருமான் மிகவும் முக்கியமானவர். அவரைத்தான் முதலில் வணங்க வேண்டும். மேலும் அவ... மேலும் பார்க்க

கோவை, புலியகுளம் ஸ்ரீ முந்தி விநாயகர்: நாகதோஷம் தீரும்... விரைவில் வேண்டுதல் நிறைவேறும்!

விநாயகரை வழிபட்டால் வினைகள் தீரும். எளிமையாக மனம் உருகி அழைத்தாலே ஓடிவந்து காத்திடுபவர் விநாயகர். அதனால்தான் ஊரெங்கும் தெருவுக்குத் தெரு விநாயகர் கோயிலை பிரதிஷ்டை செய்து மக்கள் வழிபட்டு வருகிறார்கள். ... மேலும் பார்க்க

திருச்சி பீமநகர் வேணுகோபால சுவாமி திருக்கோயில்: பிரச்னைகள் தீர்க்கும் ரோகிணி நட்சத்திர வழிபாடு!

திருச்சியில் ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோயில் என்று பல்வேறு ஆலயங்கள் அமைந்திருக்கின்றன. இவை தவிர்த்தும் அபல நூறு பழைமையான சிறப்புடைய ஆலயங்கள் பல உண்டு. அவற்றில் ஒன்று ... மேலும் பார்க்க

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஸ்ரீஉக்தவேதீஸ்வரர்: திருமண வரம் தரும் தலத்தில் சுயம்வரபார்வதி ஹோமம்!

மயிலாடுதுறை கும்பகோணம் பகுதிகளைச் சுற்றிலும் புண்ணியத் தலங்கள்தான். பார்க்கும் இடங்கள் எல்லாம் ஆலயங்கள்தான். இதில் சிறப்பு என்னவென்றால் ஒவ்வோர் ஆலயமும் ஒரு சிறப்பினையும் புராண வரலாற்றையும் உடையது. அப்... மேலும் பார்க்க

விழுப்புரம் மாவட்டம் தீவனூர் லிங்க வடிவ விநாயகர் - காரியவெற்றியைக் காட்டி அருளும் நவகிரக சந்நிதி!

விநாயகரை ஆனைமுகத்தானாவே பெரும்பாலும் வணங்குகிறோம். சில தலங்களில் விநாயகர் மனித ரூபத்திலும் அருள்கிறார். ஆனால் அவரே லிங்க ரூபனாக அருளும் தலம் ஒன்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளது. திண்டிவனத்திலிருந்து... மேலும் பார்க்க