TNPSC குரூப் 2, 2A மெயின்ஸ் தேர்வு 'பின்னர்' ஒத்திவைப்பு - காரணம் என்ன?
Doctor Vikatan: காலை உணவைத் தவிர்த்தால் ஆரோக்கியம் பாதிக்கப்படுமா?
Doctor Vikatan: காலை உணவு சாப்பிட வேண்டியது மிகமிக அவசியம் என்று முன்பெல்லாம் வலியுறுத்தப்பட்டது. இப்போது சிலர், அப்படியெல்லாம் இல்லை, காலை உணவைத் தவிர்த்தாலும் பிரச்னையில்லை என்று சொல்கிறார்கள். பசித்தாலும் பசிக்காவிட்டாலும் காலை உணவைச் சாப்பிட்டே ஆக வேண்டுமா.... இதை எப்படிப் புரிந்துகொள்வது?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, உணவு மற்றும் ஊட்டச்சத்து ஆலோசகரான ஷைனி சுரேந்திரன்.

தூங்கி எழுந்த பிறகு சிறிது நேரத்தில் நீங்கள் எதையும் சாப்பிடவில்லை என்றால் உங்கள் வளர்சிதை மாற்றச் செயல்பாடு தாமதமாகும். நீங்கள் சாப்பிடும்வரை, உங்கள் உடலிலுள்ள கொழுப்பு மற்றும் ஆற்றலைப் பாதுகாக்கும்படி மூளைக்கு உடல் தகவல் அனுப்பும்.
ஒருநாளைக்கான மொத்த கலோரி தேவை என்பது நபருக்கு நபர் வேறுபடும். நாள் முழுவதும் கண்ட கண்ட நேரத்துக்குச் சாப்பிடுவது என்ற பழக்கம் தொடரும் பட்சத்தில் அது வளர்சிதை மாற்றத்தில் பெரிய அளவில் பாதிக்கலாம்.
காலை உணவு அவசியம் சாப்பிட வேண்டுமா, தவிர்த்தால் ஆரோக்கியம் பாதிக்கப்படுமா என்பது சம்பந்தப்பட்ட நபரின் வயதையும் தேவையையும் பொறுத்தது. பள்ளிக்குச் செல்லும் குழந்தையாகவோ, கல்லூரி செல்லும் டீன் ஏஜராகவோ அல்லது கர்ப்பிணியாகவோ இருந்தால் காலை உணவைத் தவிர்ப்பது சரியானதல்ல. வளரும் பருவத்தில் உள்ள இவர்களுக்கு உடல் மற்றும் மனரீதியான தேவைகளுக்கு ஊட்டச்சத்துகள் அவசியம்.
மட்டுமன்றி எடை குறைவான குழந்தைகள், விளையாட்டு வீரர்கள், உடலளவில் மிகவும் ஆக்டிவ்வாக வேலை செய்பவர்கள், சர்க்கரை நோயாளிகள், உணவுக்குப் பிறகு மருந்து, மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டிய தேவை உள்ளோர், ரத்தச் சர்க்கரை அளவு குறைவாக உள்ளவர்கள் போன்றோர் கட்டாயம் காலை உணவை எடுத்துக்கொள்ள வேண்டும்.
எனவே. காலையில் பெரிதாகச் சாப்பிடப் பிடிக்கவில்லை என்றாலும் புதினா சட்னி சேர்த்த சாண்ட்விச், பிரெட் ஆம்லட், சிறுதானியக் கஞ்சி, முட்டை, காய்கறி தோசை, அவல் போன்ற 'லைட்'டான உணவுகளைச் சாப்பிடலாம்.
அதுவே ஒரு நபர், எடைக்குறைப்பு முயற்சிக்காக காலை உணவைத் தவிர்க்க நினைக்கிறார் என்றால், அவர் தன்னிச்சையாக அந்த முடிவை எடுப்பது சரியாக இருக்காது. ஊட்டச்சத்து ஆலோசகரிடம் பேசி, அவருக்கேற்ற உணவுமுறையைத் தெரிந்துகொண்டு பின்பற்ற வேண்டும்.
சிலர் காலையில் நேரமில்லை என்றோ, பசியில்லை என்றோ சாப்பிடுவதைத் தவிர்த்திருப்பார்கள். ஆனால், மதிய உணவுக்கு முன்பே, பசி எடுத்து, நொறுக்குத்தீனிகளைத் தேடிச் சாப்பிடுவார்கள். இது ஆரோக்கியமற்றது.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.




















