முதலீட்டாளர்கள் மாநாடு: ``இதுவரை புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 80% நிறைவேறிவிட்டத...
Karnataka: 16 குட்டிகள் உட்பட 23 புலிகளைப் பிடித்த கர்நாடக வனத்துறை; என்ன நடக்கிறது?
கண்மூடித்தனமான தொடர் வேட்டையின் காரணமாக கிட்டத்தட்ட அழிவின் விளிம்புக்கு தள்ளப்பட்ட வங்கப் புலிகளின் எண்ணிக்கை தென்னிந்திய காடுகளில் தற்போது மெல்ல மீண்டெழுந்து வருகின்றன. உலகில் வங்கப் புலிகள் அதிகம் வாழும் பகுதிகளாக தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய இந்த மூன்று மாநிலங்களை உள்ளடக்கிய வனப்பரப்பு விளங்கி வந்தாலும், அவற்றுக்கான வாழிடப்போதாமை என்பது மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது.

கர்நாடகாவின் பந்திப்பூர் , நாஹரோலே புலிகள் காப்பக சுற்றுவட்டாரப் பகுதிகளில் புலி- மனித எதிர்கொள்ளல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. புலிகளால் ஏற்படும் கால்நடைகளின் இழப்பைத் தாண்டி கடந்த இரண்டு மாதங்களில் மூன்று விவசாயிகள் புலி தாக்குதல்களால் உயிரிழந்திருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து புலிகளைப் பிடிக்கும் பணியில் இறங்கிய கர்நாடக வனத்துறையினர் ஒரே மாதத்தில் 20 புலிகளுக்கு மேல் பிடித்திருக்கிறார்கள். இதில் 16 குட்டிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து தெரிவித்த கர்நாடக வனத்துறை அதிகாரிகள், " புலிகள் காப்பக எல்லை பகுதிகளில் நடமாடி வரும் புலிகளைப் பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விளைநிலங்களில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடலில் 16 புலிக்குட்டிகள் உட்பட 23 புலிகளைப் பிடித்திருக்கிறோம். மைசூரில் உள்ள புலிகள் மறுவாழ்வு மையத்தில் பராமரிக்கப்பட்டு வரும் படிப்படியாக வனப்பகுதிக்குள் விடுவித்து வருகிறோம்.

குட்டிகளை அதன் தாயுடன் இணைத்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவிக்கும் முயற்சிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. அண்மையில் பிடித்த 3 புலிக் குட்டிகளையும் தாயுடன் இணைத்தோம். கடைசியாக பிடிக்கப்பட்ட 3 மாத குட்டியின் தாய் புலியை தேடும் முயற்சியும் நடைபெற்று வருகின்றன. எங்களின் இந்த நடவடிக்கையால் எதிர்கொள்ளல்கள் குறையும் " என்றனர். அதேவேளையில் , புலிக்குட்டிகளை வனத்துறையினர் முறையாகக் கையாள்வதில்லை என சுற்றுச்சூழல் அமைப்பினர் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.




















