ஈரான் : காமேனி மரணம் - மௌனம் காக்கும் இந்தியா | காரணம் என்ன?
Modi: மரத்தில் மோடி உருவப்பொம்மை; மின்கம்பத்தில் ராகுல் உருவப்பொம்மை; குமரியில் என்ன நடக்கிறது?
பிரதமர் மோடி நேற்று மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். மேலும், திருப்பரங்குன்றம் கோயிலில் தரிசனம் செய்தார்.
இந்த நிலையில் பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாகர்கோவில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் நவீன்குமார் தலைமையில் டதி ஸ்கூல் அருகே போராட்டம் நடத்தப்பட்டது.
அப்போது அந்தப் பகுதியில் உள்ள வேப்ப மரத்தில் பிரதமர் மோடியின் உருவப்பொம்மையின் கழுத்தில் காவித் துணியைக் கட்டி தொங்கவிட்டுள்ளனர். போராட்டம் முடிந்து சென்றபிறகும் உருவப்பொம்மை அங்கேயே தொங்கிக்கொண்டிருந்தது. இதையடுத்து போலீஸார் உருவப்பொம்மையை அகற்றினர்.
இது குறித்து காங்கிரஸ் நாகர்கோவில் மாநகர் மாவட்ட தலைவர் நவீன்குமார் கூறுகையில், "ஒடிசாவில் உள்ள புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் ஆலயத்தின் கருவூலத்தின் சாவி தமிழ்நாட்டில் இருப்பதாகக் கூறி தமிழர்களை திருடர்கள் என்ற வகையில் பேசியிருந்தார். அதனால்தான் அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாங்கள் போராட்டம் நடத்தினோம்" என்றார்.

இதை அடுத்து பா.ஜ.க-வினர் டதி ஸ்கூல் ஜங்சன் பகுதியில் நேற்று இரவு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீஸார் காலையில் சம்பந்தப்பட்ட நபர்களைக் கைது செய்வதாக உறுதி கூறியதை அடுத்து போராட்டத்தைக் கைவிட்டனர்.
இதற்கிடையே காங்கிரஸ் மாவட்ட தலைவர் நவீன்குமாரைக் கைது செய்த கோட்டாறு போலீஸார் அவரை ஸ்டேஷன் ஜாமினில் விடுவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ தலைமையில் பா.ஜ.க நிர்வாகிகள் கோட்டாறு காவல் நிலையம் முன்பு திரண்டு இன்று முற்றுகையிட்டனர்.

இதையடுத்து பா.ஜ.க-வினரிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். காங்கிரஸார் மீது கண் துடைப்புக்கு மட்டுமே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பா.ஜ.க-வினர் கூறினார்கள்.
சம்பந்தப்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக போலீஸார் கூறினார்கள். இதையடுத்து அங்கிருந்து கலைந்து சென்ற பா.ஜ.க-வினர் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உருவபொம்மையின் கழுத்தில் கயிற்றைக் கட்டி வடசேரி ஜங்சனில் உள்ள மின்கம்பத்தில் தொங்கவிட்டனர்.
இதை அறிந்து போலீஸார் அங்கு சென்று ராகுல் காந்தி உருவபொம்மையை மீட்டு எடுத்துச் சென்றனர். தேர்தல் நெருங்கும் நிலையில் குமரியில் பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகளின் செயல்கள் அனலைக் கிளப்பி உள்ளன.















