CM விஜய் பதவியேற்பு விழா LIVE: C Joseph Vijay எனும் நான்! | Tamilaga Vetri Kazha...
TVK: விஜய்யின் ‘குட் புக்ஸில்’ இடம்பிடித்தது எப்படி? அமைச்சர் ராஜ் மோகனின் அசுர வளர்ச்சி பின்னணி!
தவெக தலைவர் விஜய் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றிருக்கிறார். விஜய்யோடு சேர்ந்து 9 அமைச்சர்களும் பதவியேற்றிருக்கின்றனர்.
அதில் முக்கியமானவர் தவெகவின் கொள்கைப் பரப்புச் செயலாளர் ராஜ் மோகன். அவருக்கும் அமைச்சரவையில் இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. விஜய் எப்படி ராஜ்மோகனின் பெயரை டிக் அடித்தார்?
ஊடகவியலாளரான ராஜ் மோகன் விக்கிரவாண்டி மாநாட்டுக்கு முன்பே தவெகவுடன் இணைந்து பயணிக்கத் தொடங்கிவிட்டார். விக்கிரவாண்டி மாநாட்டுக்கு முன்பாக சேலத்தில் ஒரு பயிற்சி பட்டறை தவெக நிர்வாகிகளுக்காக நடத்தப்பட்டிருந்தது.
அந்த நிகழ்வில் சிறப்புப் பேச்சாளராக ராஜ் மோகன் அழைக்கப்பட்டிருந்தார். அந்தச் சமயத்தில் ராஜ் மோகனின் தந்தை உடல்நிலை சரியாக இல்லாமல் மருத்துவமனையில் இருந்தார்.

தந்தை சீரியஸாக இருந்தபோதும் ராஜ் மோகன் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிவிட்டு சென்றதில் விஜய் பெர்சனலாக இம்ப்ரஸ் ஆகிவிட்டார். விக்கிரவாண்டி மாநாட்டு இரண்டு நாள்களுக்கு முன்பு ராஜ் மோகனின் தந்தை காலமாகிவிட்டார்.
அந்தச் சமயத்தில் விஜய்யே தனக்கு நெருக்கமான சிலரை ராஜ் மோகனின் வீட்டுக்கு அனுப்பி தேவையான உதவிகளையெல்லாம் செய்து கொடுக்க உத்தரவிட்டார்.
ஆரம்பக்கட்டத்திலேயே ஈடுபாட்டோடு செயல்பட்டதால்தான் கட்சியில் இணைந்த உடனேயே கொள்கைப் பரப்புச் செயலாளர் எனும் பொறுப்பையும் விஜய் கொடுத்திருக்கிறார்.
கரூர் சம்பவத்தின்போது ராஜ் மோகனை இணையத்தில் கடுமையாக ட்ரோல் செய்திருந்தனர். அப்போதும் விஜய்யே ராஜ்மோகனை பெர்சனலாக அழைத்து எதையும் மனதில் ஏற்றிக் கொள்ள வேண்டாம் என அக்கறையோடு அறிவுரை கூறியிருந்தார்.
மேலும், விஜய் எந்தக் கூட்டத்தில் பேசினாலும் அவரை அறிமுகப்படுத்தி வைக்கும் குரல் ராஜ் மோகனுடையதாகத்தான் இருக்கும்.
வேட்பாளர் தேர்வின் போது பெரும்பாலான வேட்பாளர்களை வியூக வகுப்பு நிறுவனம்தான் முடிவு செய்தது. ஆனால், விஜய் ஒரு சிலர் கட்டாயம் வேட்பாளர் ஆக வேண்டுமென விரும்பினார். அதில் ராஜ்மோகனும் ஒருவர். 'உங்களை நானே கைப்பட தேர்வு செஞ்சேன்' என வேட்பாளர்களை அறிவிக்கையிலும் விஜய் மகிழ்ச்சியோடு கூறி வாழ்த்தியிருக்கிறார்.

ராஜ் மோகனுக்கு வழங்கப்பட்ட எழும்பூர் (தனி) தொகுதி திமுக வலுவாக இருக்கும் தொகுதி. 1991 இல் திமுக படுமோசமாகத் தோற்ற போதும் எழும்பூரில் திமுக வென்றிருந்தது. அந்தளவுக்கு திமுக வாக்காளர்கள் திரட்சியாக இருக்கும் தொகுதி.
மேலும், இது அமைச்சர் சேகர் பாபுவின் மாவட்டத்தில் வரும் தொகுதி. திமுகவின் கோட்டையில் போய் வென்று வந்ததால் அதற்கு பரிசாக அமைச்சரவையில் ராஜ் மோகனுக்கும் இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவருக்கு ஆதிதிராவிடர் நலத்துறை ஒதுக்கப்படலாம் எனத் தெரிகிறது.
சமூக நிதியையும் முற்போக்கையும் முன்னிலைப்படுத்துவதால் விஜய்யுடன் பதவியேற்கும் அமைச்சர் குழுவுடனேயே ஆதிதிராவிட நலத்துறை அமைச்சராகவிருப்பவரும் பதவியேற்க வேண்டுமென ராஜ் மோகனையும் மேடையேற்றியிருக்கிறார்கள்.










