``தமிழ் மீதான தவறான விமர்சனத்திற்கு மன்னிப்பு கோர வேண்டும்" - அமைச்சர் மரிய வில்...
இனி 12 ஆண்டுகள் கழிச்சிதான் இப்படி ஓர் ஆடி அமாவாசை வரும்... தவறவிடாமல் செய்ய வேண்டிய வழிபாடுகள்!
அமாவாசை என்றாலே புனிதமான தினம். நம் முன்னோர்களை நினைக்கும் தினம். இந்த நாளில் தவறாமல் முன்னோரை வழிபட்டுவந்தால் வாழ்வில் துன்பங்கள் விலகும் என்பார்கள். ஆனால் எல்லோராலும் அனைத்து அமாவாசையிலும் முன்னோர் வழிபாடு செய்ய முடிவதில்லை.
அப்படிப்பட்டவர்கள் தவறாமல் மூன்று அமாவாசைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பார்கள். அவை, ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை. இவற்றில் தமிழ் ஆண்டில் முதலில் வருவது ஆடி அமாவாசை.
தட்சிணாயின புண்ணிய காலத்தின் தொடக்கத்தில் வரும் இந்த அமாவாசை மிகவும் சிறப்பானது. புதுர் லோகத்தில் இருக்கும் நம் முன்னோர்கள் இந்த நாளில் பூமியை நோக்கிய தங்கள் பயணத்தைத் தொடங்குவார்கள் என்பது ஐதிகம்.
(புரட்டாசி அமாவாசையை ஒட்டிய பதினைந்து நாள்கள் இங்கே தங்குவார்கள் என்றும் தை அமாவாசைகாலத்தில் மீண்டும் பிதுர் லோகம் சென்று சேர்வார்கள் என்றும் சொல்லப்படுகிறது) எனவே இந்த நாளில் முன்னோர்களை நினைத்தாலே நமக்குப் புண்ணிய பலம் சேரும்.

பலருக்கும் சுபகாரியத் தடைகள், முன்னேற்றம் இன்மை, தொழில் வியாபார விருத்தியின்மை, குடும்பத்தில் அமைதியின்மை ஆகிய சிக்கல்களுக்குக் காரணம் பித்ரு தோஷமே என்கிறது ஜோதிட சாஸ்திரம்.
நமக்கு உயிரையும் உடலையும் தந்த பெற்றோர்களை அவர்கள் வாழும்போது உரிய மரியாதையோடு நடத்தி அவர்களின் விருப்பங்களைப் பூர்த்தி செய்ய வேண்டியது ஒவ்வொரு பிள்ளையின் கடமை.
அவர்கள் மறைந்த பிறகு அவர்களுக்கு உரிய ஆராதனைகள் செய்து வழிபட வேண்டியதும் அவசியம். இவற்றைச் செய்யாமல் விட்டுவிடும்போது முன்னோர்களின் வருத்தத்துக்கு ஆளாவோம். அவர்களின் மனக்குறையே பித்ரு தோஷமாக நம்மைப் பீடிக்கும்.
ஒருவரின் ஜாதகத்தில் சூரியன் அல்லது சந்திரன், ராகு - கேதுக்களோடு எந்த ஸ்தானத்தில் சேர்ந்திருந்தாலும் அது பித்ரு தோஷத்தைக் குறிக்கும். இப்படிப்பட்ட ஜாதகக்காரர்கள் பித்ரு வழிபாட்டை மிகுந்த கவனத்துடன் செய்துவருவது அவசியம். அவர்கள் மட்டுமல்ல தந்தையை இழந்த அனைவரும் அமாவாசை நாளில் தர்ப்பணம் செய்து வழிபாடு செய்வது அவசியம்.
தர்ப்பணம் செய்யும் முறை
தர்ப்பணம் செய்ய மொத்தம் 16 தர்ப்பைகளைப் பயன்படுத்த வேண்டும். அவற்றில் 8 தர்ப்பைகளைக் கொண்டு செவ்வக வடிவில் கட்டம் அமையுங்கள். பிறகு, 5 தர்ப்பைகளைக் கூர்ச்சமாகச் செய்துகொள்ள வேண்டும்.
நடுவில் முடிச்சுடன் கூடியது. மூன்று நுனி தர்ப்பைகளைப் பயன்படுத்தி பவித்ரம் (மோதிரம் போன்று) செய்துகொள்ள வேண்டும். இவை போக இன்னும் இரண்டு குட்டையான தர்ப்பைகளைக் கையில் இடுக்கிக்கொண்டு பவித்ரத்தையும் அணிந்துகொண்டு தர்ப்பணத்துக்குத் தயாராக வேண்டும்.
இவை தவிர, காலுக்குக் கீழே ஆசனம் என்ற பெயருக்கு உதிரி தர்ப்பைகளைப் போட்டுக்கொள்வது விதி.
இன்றைக்குக் கடைகளில் இவற்றை ஒரு செட்டாகவே விற்கிறார்கள். அதை அப்படியே வாங்கிப் பயன்படுத்தலாம். இவை வாங்கிச் செய்து பழக்கம் இல்லை என்பவர்கள் குறைந்த பட்சம் எள் தண்ணீரும் இறைத்து தர்ப்பணம் செய்தாலே போதுமானது.

ஆடி அமாவாசை, தை அமாவாசை, மஹாளய அமாவாசை முதலான காலங்களில், பெரும்பாலும் சூரியன் உதிக்கும் கிழக்கு திசை நோக்கி அமர்ந்து தர்ப்பணம் செய்வதே வழக்கம். எனினும் தெற்கு நோக்கி அமர்வது சிறப்பு.
பிறகு தர்ப்பணத்துக்குரிய சங்கல்பம் செய்ய வேண்டும். மந்திரங்கள் தெரிந்தவர்கள் சங்கல்ப மந்திரங்களைச் சொல்லிச் செய்யலாம். தெரியாதவர்கள் முன்னோர்களின் பெயர்கள் அதாவது, அப்பா - அப்பாவுக்கு அப்பா- அப்பாவின் தாத்தா ஆகியோரின் பெயரைச் சொல்லி சொல்லி எள்ளும் நீரும் விட வேண்டும்.
அதேபோல் அம்மா வழிக்கும் தர்ப்பணம் இட வேண்டும். இதில் அம்மா, தந்தையின் அம்மா, தாத்தாவின் அம்மா ஆகியோரது பெயர்களைக் குறிப்பிட்டுத் தர்ப்பணம் இட வேண்டும்.
இப்படிச் செய்யும்போது 'இந்தத் தர்ப்பணத்தின் மூலம் என் தாய் - தகப்பன், உறவினர்கள், கோத்திர வழி வந்த அனைவரும்... நான் விடும் எள் நீரால் பரம திருப்தியடைந்து என்னை ஆசீர்வதிக்கட்டும்' என்று மனதாரப் பிராத்தனை செய்துகொள்ள வேண்டும். இதுவே சங்கல்பமாகும்.
இப்படிப்பட்ட தர்ப்பணத்த கடற்கரை, நதிதீரங்களில் செய்வது விசேஷம். காலை 8.30. மணிக்குப் பின் மதியப் பொழுதுக்குள் தர்ப்பணம் செய்துமுடித்துவிட வேண்டும். படையல் போடும் வழக்கம் இருந்தால் உச்சைப்பொழுது 11.30 மணிக்கு மேல் போடலாம்.
இந்த ஆடி அமாவாசை வழிபாட்டைச் செய்வதன் மூலம் நமக்குக் கிடைக்கும் பலன்கள் ஏராளம். அதுவும் இந்த ஆண்டு சூரியனும் சந்திரனும் உச்சம்பெற்ற குருவோடு இணைந்து இருக்கிறார்கள்.
இந்த நாளில் நாம் செய்யும் வழிபாடு, தானம் மற்றும் நற்செயல்கள் ஆகியன அனைத்தும் பன்மடங்கு நன்மைகளைக் கொடுக்கும். தீராத பிரச்னைகளுக்குக்கூட தீர்வு கிடைக்கும். பித்ருக்களின் ஆசி கிடைக்கும்.
அதன்மூலம் வீட்டில் சுபகாரியங்கள் கூடிவரும். திருமணத் தடைகள் விலகும். ஆரோக்கியக் குறைபாடுகள் படிப்படியாக நீங்கும். பொன்பொருள் சேரும் என்பது நம்பிக்கை. மேலும் விட்டுப்போன குலதெய்வ வழிபாட்டை மீண்டும் தொடங்கவும் இந்த நாள் ஏற்ற நாள். இப்படி ஓர் அமாவாசை தினம் இனி 12 வருடங்கள் கழித்துதான் வரும்.
இப்படிப்பட்ட சிறப்புடைய ஆடி அமாவாசை நாளை (ஆகஸ்ட் 12) அன்று வருகிறது. எனவே அனைவரும் தவறவிடாமல் வழிபட்டுப் பயனடையுங்கள்.
















