Brothers & Sisters: "என் மனைவியே இந்த சீரிஸ் பார்க்கமாட்டேங்குறாங்க!" - போஸ் வெங...
'அமைச்சரின் கோபத்துக்கு காரணமான யூடியூபர்?; டயர்ட் ஆகும் எம்.எல்.ஏக்கள்! - சட்டமன்ற ஹைலைட்ஸ்!
சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் நான்காம் நாள் கூட்டம் நடந்து முடிந்திருக்கிறது. இன்றைய நாளின் ஹைலைட்ஸ் இங்கே.

அவையில் தமீமுன் அன்சாரி பேசுகையில், 'சட்டமன்றத்தை இங்கிருந்து தீவுத்திடலுக்கோ அல்லது எம்.எல்.ஏ ஹாஸ்டல் அருகேயோ மாற்ற வேண்டும்' என்றார். புதிய சட்டமன்றம் குறித்து பொதுவில் வீண் செலவு...வெட்டிச் செலவு என பேசினாலும் பல எம்.எல்.ஏக்களும் இந்த சட்டமன்ற வளாகம் பெரும் அசௌகரியத்தை கொடுத்திருக்கிறது. போதிய இடவசதி இல்லாததால் எம்.எல்.ஏக்களின் கார் வந்து நின்று அவர்களை இறக்கி விட்டு செல்வதற்குள் நெரிசலாகிவிடுகிறது.
அதேமாதிரி, அவை முடிந்து செல்கையிலும் எம்.எல்.ஏக்கள் அவர்களின் காருக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருக்கிறது. தலைமைச் செயலக ஊழியர்களுக்கும் பார்க்கிங் வசதி முறையாக இல்லை. அவர்களின் பைக் பார்க்கிங் அத்தனை நெருக்கடியாக இருக்கும். இதனால் தமீமுன் அன்சாரி பேசியது தலைமச் செயலக ஊழியர்கள் மத்தியிலேயே வரவேற்பை பெற்றிருக்கிறது.
பட்ஜெட் விவாதத்துக்காக காலையில் 9:30 மணிக்கு தொடங்கும் சட்டமன்றம் முடிவதற்கு மாலை 3:30 மணி ஆகிவிடுகிறது. ஒரே செஷனாக 6 மணி நேரம் அவை நடப்பதால் பல எம்.எல்.ஏக்களும் கடும் சோர்வடைந்து விடுகின்றனர். காலையில் பேசுவோர் தப்பித்து விடுகின்றனர்.

மதியம் 1:30 மணிக்கு மேல் பேசுவோர்தான் பாவம். அவையில் ஏற்கனவே பாதி பேர் இருப்பதில்லை. இருப்போரும் கடும் சோர்வடைந்து 'எப்போடா முடியும்...' என இருப்பதால் அவை களையிழந்து விடுகிறது. காலை ஒரு செஷன் மாலை ஒரு செஷன் என பிரித்து நடத்தலாம் என தமீமுன் அன்சாரி பேசியது பல எம்.எல்.ஏக்களின் மனக்குமுறல்தான்.
அவை நீண்ட நேரம் நடப்பதால் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமே கூட முழு நேரமும் அவையில் இருப்பதில்லை. மதிய உணவு இடைவேளையில் இருவருமே அவரவர் அறைக்கு கிளம்பிவிடுகின்றனர். எதாவது முக்கியமான விவாதம் என்றால் மட்டுமே மீண்டும் வரும் திட்டத்தில் இருக்கின்றனர். அவையின் இரு முக்கியஸ்தர்களும் இல்லாமல் இருப்பதால் மதியத்துக்கு மேல் பேசும் உறுப்பினர்கள் தங்களுக்கான முக்கியத்துவம் குறைவதாகவே நினைக்கின்றனர்.
திமுக சின்னத்தில் போட்டியிட்ட மதிமுக எம்.எல்.ஏ ராஜேந்திரன் பேசுகையில் நிதியமைச்சர் மரிய வில்சன் தமிழை தவிர்த்து ஆங்கிலத்தில் பேசுவதை ரொம்பவே பக்குவமாக மனம் கோணாமல் விமர்சித்திருந்தார். ஆனால், அதற்கு பதிலளித்த மரிய வில்சன் 'நான் எப்படி பேசுவேனோ அப்படித்தான் பேசுவேன். என்னைய கேலி பண்றீங்களா?' என மைக்கையெல்லாம் தள்ளிவிட்டு கொந்தளித்திருந்தார். தன்னை திமுகவின் ஐ.டி.விங் ட்ரோல் மெட்டீரியலாக மாற்ற முயற்சிப்பதாகவும், திமுகவின் தூண்டுதலின் பேரில் ஒரு யூடியூப் 'தம்பி' தன்னை தொடர்ந்து டார்கெட் செய்து அடிப்பதாகவும் அமைச்சர் கருதுகிறாராம். அமைச்சரின் கோவம் ராஜேந்திரனுக்கு எதிரானதல்ல. அது திமுக ஐ.டி.விங்குக்கும் அந்த யூடியூபருக்கும் எதிரான கோபம்தான் என்கின்றனர் அமைச்சருக்கு நெருக்கமானவர்கள்.

மனித - விலங்கு மோதல் குறித்த விவாதத்தின் போது வனத்துறை அமைச்சர் பக்குவமற்ற முறையில், 'மக்கள் சனி, ஞாயிறுகளில் எண்டர்டெய்ன்மெண்ட்க்காக காட்டுக்குள் செல்கின்றனர்' எனப் பேச சில எம்.எல்.ஏக்கள் அதை கேட்டு சிரிக்க, சில எம்.எல்.ஏக்கள் முகம் சுளித்தனர்.














