`ஓ.பன்னீர்செல்வத்துக்கு கட்சிக்குள் இடமில்லை!' - மறைமுகமாக உணர்த்திய எடப்பாடி பழ...
`ஓ.பன்னீர்செல்வத்துக்கு கட்சிக்குள் இடமில்லை!' - மறைமுகமாக உணர்த்திய எடப்பாடி பழனிசாமி?
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களே இருக்கும் நிலையில், வானகரத்தில் நடைபெற்ற அதிமுகவின் செயற்குழு - பொதுக்குழுக் கூட்டம் கூடுதல் கவனத்தைப் பெற்றிருந்தது.
அதிமுகவில் தங்களை இணைக்க ஓ.பி.எஸ் டிசம்பர் 15 ஆம் தேதி வரை கெடு விதித்திருந்தார். அதுசம்பந்தமாக இந்தப் பொதுக்குழுவில் எதுவும் பேசப்படுமா என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மிகத் தெளிவாக ஓ.பி.எஸ் உள்ளிட்ட அதிருப்தியாளர்களை கட்சிக்குள் இணைக்க வாய்ப்பில்லை என்பதை குறிப்பால் உணர்த்தியிருக்கிறார்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு அதிமுக தொண்டர் உரிமை மீட்புக் குழுவின் நிர்வாகிகளுடன் ஓ.பி.எஸ் ஆலோசனை நடத்தியிருந்தார்.
ஆலோசனையின் முடிவில் வைத்தியலிங்கம், 'பிரிந்து சென்றவர்களை அதிமுகவில் இணைக்க டிசம்பர் 15 ஆம் தேதி வரை மட்டுமே கெடு. இல்லையேல் புதிய கட்சி ஆரம்பிப்போம்' என அறிவித்தார்.

இதே சமயத்தில்தான் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனும் தவெகவில் இணைந்தார். கடந்த வாரத்தில் ஓ.பி.எஸ் டெல்லிக்கு பயணித்து அமித்ஷாவையும் சந்தித்து வந்திருந்தார்.
இன்று பொதுக்குழு நடந்து கொண்டிருக்கும் சமயத்திலும், 'அதிமுக ஒருங்கிணைவதையே அனைவரும் விரும்புகின்றனர்' என பேட்டி கொடுத்துச் சென்றார்.
இவற்றால்தான் அதிமுகவின் ஒருங்கிணைவு குறித்து பொதுக்குழுவில் நேரடியாகவோ மறைமுகமாகவோ எதாவது பேசப்படுமா என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், எடப்பாடி புள்ளிவிவரங்களுடன் அடுக்கிய அவரின் உரையின் மூலம் ஓ.பி.எஸ் நோக்கி இன்னமும் க்ரீன் சிக்னலை கொடுக்க தயாராக இல்லை என்பதை புரிந்துகொள்ள முடிந்தது.
உரையின் தொடக்கத்திலேயே 2016 முதல் அதிமுக என்னென்ன இன்னல்களை சந்தித்து என பட்டியலிட்டு எடப்பாடி பேசியிருந்தார்.
அப்போது, 'எம்.ஜி.ஆருக்கும் ஜெயலலிதாவுக்கும் வாரிசு இல்லை. நாம்தான் அவர்களின் வாரிசுகள். நமக்கு எவ்வளவு தொல்லை கொடுத்தார்கள்?
2017 -ல் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க தீர்மானம் கொண்டு வந்த போது நம்முடன் இருந்த சிலரே எதிர்க்கட்சியுடன் இணைந்து கைகோர்த்து சோதனைகளை ஏற்படுத்தினார்கள். எண்ணிப்பாருங்கள். அதையெல்லாம் தாண்டிதான் நாம் வந்தோம்' என்றார்.

2017 -ல் ஓ.பி.எஸ் தர்மயுத்தம் மேற்கொண்டு அவர் பக்கம் சில எம்.எல்.ஏக்கள் நின்ற சம்பவத்தைதான் எடப்பாடி பெயர் கூறாமல் குறிப்பிட்டிருந்தார்.
கட்சிக்குள் சேர்க்க ஓ.பி.எஸ் விடுத்த கெடுவுக்கு எடப்பாடியின் மறைமுக பதிலாகவே இதை பார்க்க முடிகிறது. ஆட்சியை கவிழ்க்க நினைத்தவரை கட்சிக்குள் எப்படி சேர்க்க முடியும் என நிர்வாகிகளுக்கு எடப்பாடி கொடுத்த மெசேஜாகவும் புரிந்துகொள்ளலாம்.
அதேமாதிரி இன்னொரு இடத்தில், '2021 சட்டமன்றத் தேர்தலில் 43 தொகுதிகளை மொத்தமாக சேர்த்து 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில்தான் இழந்தோம். அது யாருடைய சூழ்ச்சியால் நடந்தது எனத் தெரியும்' என்றார்.
இதையும் இரண்டு விதமாக புரிந்துகொள்ளலாம். முன்னதாக பேசிய எஸ்.பி.வேலுமணி S.I.R குறித்துப் பேசியிருந்தார். அப்போது திமுக தில்லுமுல்லுகளை செய்யும். அதனால் அதிமுக நிர்வாகிகள் கவனமாக செயல்பட வேண்டும்' எனக் கூறியிருந்தார்.
எடப்பாடி இதை மேற்கோள்க்காட்டியிருக்கவும் வாய்ப்பிருக்கிறது. அதேமாதிரி, 2021 தேர்தலில் தினகரன் தென் மாவட்டங்களில் அதிமுகவுக்கு பெருத்த சேதாரத்தை ஏற்படுத்தியிருந்தார். அதை மனதில் வைத்து கூட எடப்பாடி பேசியிருக்கலாம்.
'நீங்கள் எதிர்பார்க்கிற கூட்டணியை அண்ணன் எடப்பாடி ஏற்படுத்துவார்' என வேலுமணி பேசியிருந்தார்.
மேடையில் பேசிய அதிமுக நிர்வாகிகள் பலரும் இந்த லைனை தொட்டுச் சென்றனர்.
பாமக, தேமுதிக போன்ற NDA வில் முன்பிருந்த கட்சிகளை மனதில் வைத்து இப்படி பேசியிருக்கலாம். ஆனால், 'ரெண்டே ரெண்டு பேருக்குதான் போட்டியே ஒன்னு திமுக இன்னொன்னு தவெக' எனப் பேசி வரும் விஜய் குறித்தும் யாரும் எதுவும் பேசவில்லை.
தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் வலுவான கூட்டணி அமைப்போம் என எடப்பாடி பேசியிருக்கிறார். ஆக, பிரசார பயணத்தின் போது எடப்பாடி போட்ட பிள்ளையார் சுழியை இன்னும் அழிக்க விரும்பவில்லை என்றே தோன்றுகிறது.














