சேறும் சகதியுமான சாலை: ``மழைக்காலத்தில் அப்படித்தான் இருக்கும்'' - மக்களிடம் எகி...
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயில்: பஞ்சபூதத்தலங்களில் மண் தலம்; 3,500 ஆண்டுகள் பழைமையான மாமரம்!
புண்ணியம் தரும் ஏழு நகரங்களில் காஞ்சிபுரமும் உண்டு. கோயில் நகரம் என்று போற்றப்படும் காஞ்சி நகரத்தில் திரும்பிய திசை எங்கும் கோயில்களைக் காணலாம்.
தராசில் உலகத்தின் புண்ணிய க்ஷேத்ரங்களை எல்லாம் ஒரு தட்டில் வைத்து, காஞ்சியை மறு தட்டில் வைத்தால் காஞ்சியே சிறந்து விளங்கும் என்பதும் ஞானியர் வாக்கு.
அப்படிபப்ட்ட காஞ்சிபுரத்தில் மையமாகத் திகழ்கிறது அருள்மிகு ஏலவார்குழலி அம்மை சமேத ஏகாம்பரேஸ்வரர் கோயில். காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் ஒன்றரை கி.மீ தூரத்தில், கச்சபேஸ்வரர் கோயிலுக்கு எதிரே அமைந்திருக்கிறது ஸ்ரீஏகாம்பரநாதர் ஆலயம்.

பஞ்சபூதத் தலங்களுள் இது மண்ணுக்குரிய (ப்ருத்வி) தலம். அன்னை பார்வதி மண்ணுலகுக்கு வந்து ஈசனை அடையும் வழியை பூமியில் உள்ள உயிர்களுக்கு உணர்த்தத் தவம் செய்தாள்.
அன்னையின் தவத்துக்கு மகிழ்ந்த ஈசன், அவரைப் பல்வேறு தலங்களுக்கு வரச்சொல்லிக் காட்சி கொடுத்து அருள்பாலித்தாள். அவ்வாறு அன்னை தவம் செய்த இடங்களில் ஒன்று காஞ்சிபுரம்.
கம்பா நதிக்கரையில் ஒற்றை மாமரத்தின் கீழ் மணலால் லிங்கம் அமைத்து வழிபட்டாள். ஒருநாள் கம்பா நதி வெள்ளம் திரண்டு வந்து மணல் லிங்கத்தை அழிக்க வந்தது. இதனால் அஞ்சிய அன்னை மணல் லிங்கத்தைத் தழுவிக்கொண்டார். இதனால் மகிழ்ந்த ஈசன் அன்னையை ஏற்றுக்கொண்டார்.
இங்கு ஈசனுக்கு, 'கச்சி ஏகம்பன்' என்றே திருநாமம். ஏகாம்பரநாதர், திருவேகம்பர், தழுவக்குழைந்த நாதர் ஆகிய திருப்பெயர்களும் சுவாமிக்கு உண்டு. இங்குதான் காமாட்சி அன்னை 32 அறங்கள் செய்தார்.
கச்சியன், ஏலவார்குழலி, காமாட்சி என்பது அன்னையின் திருநாமம். கம்பா நதி, சிவகங்கை மற்றும் சர்வ தீர்த்தம் போன்றவை இத்தலத்தின் தீர்த்தங்கள் ஆகும்.
சக்தி, பிரம்மா, திருமால், திருமகள், கலைமகள், ருத்திரர்கள், அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர், பட்டினத்துப் பிள்ளையார், ஐயடிகள் காடவர்கோன், பரணதேவர், நம்பியாண்டார் நம்பி, சேக்கிழார் போன்றவர்களால் வணங்கப்பட்டவர் கச்சி ஏகம்பன்.
'திருவொற்றியூரை விட்டு நீங்க மாட்டேன்' என்று சத்தியம் செய்து திருமணம் செய்த சுந்தரர், திருவொற்றியூர் எல்லையைத் தாண்டியதும் தனது கண்ணை இழந்தார். இதனால் தன் தவற்றுக்கு வருந்திய சுந்தரர், இங்கு வந்து ஏகாம்பரேஸ்வரரை வணங்கி, ‘ஆலம்தான் உகந்து அமுது செய்தானை’ என்ற பதிகத்தைப் பாடினார்.
அதன் பயனாக, ஒரு கண் பெற்றார். எனவே, இங்கு வந்து வணங்கினால் கண் சம்பந்தமான அனைத்துக் குறைபாடுகளும் நீங்கும் என்பதும் ஐதிகம்.

பிரம்மா, திருமால், ருத்திரர்களால் பூசிக்கப்பட்ட ஈசனுக்கு இங்கே தனித்தனி சந்நிதிகள் உள்ளன. அவர்கள், முறையே வெள்ளக் கம்பம், கள்ளக் கம்பம், நல்ல கம்பம் என்று தனிச் சந்நிதிகளில் வணங்கப்படுகிறார்கள்.
இந்த ஆலய தலவிநாயகர், 'விகடசக்கர விநாயகர்.' இவர் ஆயிரங்கால் மண்டபத்தில் எழிலாக வீற்றிருக்கிறார். பெருமாளின் சக்கரத்தை விழுங்கி லீலை புரிந்து விகடக் கூத்தாடியவர்.
பெருமாள் வணங்கிக் கேட்டுக்கொள்ள அந்த சக்கரத்தை அருளியவர். ஒன்பது நிலைகள் கொண்ட ராஜகோபுரம் விஜயநகர மன்னரான கிருஷ்ணதேவராயரால் கி.பி.1509-ம் ஆண்டு கட்டப்பட்டது.
கருவறையில் லிங்க வடிவில் காட்சி தரும் ஈசன் மணலால் ஆனவர். சுயம்புமூர்த்தி. எனவே இவருக்கு அபிஷேகம் கிடையாது. பதிலாகப் புனுகுச் சட்டமே சாத்தப்படுகிறது. இங்கு ஈசன் மீது ரதசப்தமி நாளில் சூரியனின் ஒளிக்கதிர்கள்பட்டு அவை வணங்கி வழிபடும் அதிசயம் நடைபெறும். எனவே இது சூரிய பரிகாரத்தலமாகவும் விளங்குகிறது.
இத்தலத்தின் தலவிருட்சம் மாமரம். இந்த மாமரம் சுமார் 3500 ஆண்டுகள் பழைமையானது என்கிறார்கள். இந்த மாமரம் நான்கு கிளைகளாகப் பிரிந்திருக்கின்றன. இந்த நான்கு கிளைகளும் நான்கு வேதங்கள் என்கிறார்கள்.
இந்த மாமரத்தில் நான்கு விதமான சுவைகளில் கனிகள் வளர்கின்றன. இதை உண்டால் பிள்ளைப் பேறு வாய்க்கும் என்பது நம்பிக்கை. வருடம்தோறும் நடைபெறும் பிரம்மோற்சவத்தின் ஒன்பதாவது நாள், `மாவடி சேவை’ வைபவம் இங்கு சிறப்பாக நடைபெறும். இதை தரிசனம் செய்தால் இல்லறம் செழிக்கும். பிரிந்த தம்பதி ஒன்று சேர்வர் என்பதும் நம்பிக்கை.

ஐயடிகள் காடவர்கோன், திருகுறிப்புத் தொண்டர், கழற்சிங்க நாயனார், சாக்கிய நாயனார் ஆகியோரோடு தொடர்பு கொண்ட ஆலயமிது.
இங்கு பல்வேறு காலத்தைய கல்வெட்டுகள் கண்டறியப்பட்டு அவை படியெடுக்கப்பட்டுள்ளன. உத்தமச் சோழன், ராஜராஜன் தொடங்கி முதலாம் குலோத்துங்கன், விஜயகண்ட கோபாலன், விஜயநகர சதாசிவன் ஆகியோர்களின் கல்வெட்டுகள் வரை இருக்கின்றன. அதில் சொல்லப்பட்டு இருக்கும் தகவல்களும் சுவாரஸ்யமானவை. பல்லவர்கள் காலத்துக் கோயில் இது எனப்படுகிறது.




















