மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு: திரளான பக்தர்கள் பங்கேற்பு; விழாக் கோலம் பூண்...
குருமூலிகை கல்லாலம்: இந்த இலை உங்கள் வீட்டுப் பூஜையறையில் இருந்தால், பணவரவுக்குக் குறையே இருக்காது!
சில விருட்சங்களை வீட்டுத் தோட்டத்தில் வளர்த்தால், தெய்வ அருளும் பொன் - பொருளும் நிறைந்திருக்கும் என்பது விருட்ச சாஸ்திரம் தரும் அறிவுரை. வீட்டில் கருநெல்லி மரம் வளர்த்தால் செல்வகடாட்சம் அதிகரிக்கும்; வேம்பு நிற்கும் வீட்டில் வினைகள் இருக்காது; அகண்ட வில்வம் வளர்த்தால் செல்வம் சேரும் என்பார்கள். இந்த வரிசையில் கல்லால இலையும் உண்டு. இதன் மகிமைகளை, வழிபடும் முறைகளை விவரிக்கிறார் கே.குமார சிவாச்சார்யார்:

விருட்சங்கள் வளர்க்க இயலாத சூழலில் - வீட்டில் இருப்போர் என்ன செய்வது? அப்படியானவர்கள் கல்லால இலை போன்ற வற்றை பூஜையறையில் வைத்து பூஜிக்கலாம். குரு பகவானின் அருள் நிரம்பப் பெற்றது இந்த இலை.
‘குறையாத செல்வம் தரும் கல்லாலம்...’, ‘கல்லாலம் இருக்கும் இடத்தில் பிள்ளைச் செல்வத்துக்குக் குறையேது...’ என மூலிகை சக்தி ரகசியங்கள் குறிப்பிடும் விளக்கங்களால் கல்லால இலையின் மகத்துவத்தை அறியலாம். இந்த ‘கல்லாலம்’ குறித்து தெய்வக் கதை ஒன்று சொல்லப்படுவது உண்டு.

தெய்வக்கதை சொல்லும் மகத்துவம்!
உலக நன்மையின் பொருட்டு ஆலமரத்தடியில் தென்முகமாக தியானத்தில் அமர்ந்திருந்த ஸ்ரீதட்சிணாமூர்த்தி பகவான், ஒரு தருணத்தில், வேறு இடத்துக்கு நகர திருவுளம்கொண்டார். அதன்படி, மலைப்பாங்கான பகுதிக்குச் சென்று ஒரு பாறையில் அமர்ந்தார். இந்த நிலையில்... ஏற்கெனவே அவர் ஆலமரத்தடியில் அமர்ந்திருந்த போது, தினமும் அவரை வழிபட்டுவந்த அன்னப் பறவை ஒன்று, அந்த மரத்திலிருந்து எடுத்துவந்த ஆலம் விதையை, பகவான் அமர்ந்திருந்த பாறையில் போட்டுவிட்டுச் சென்றது.
இயற்கை தந்த நீரால் அந்த விதை துளிர்விட்டு, கல்லின் மீது வளர்ந்த கல்லால மரமாகக் கிளைபரப்பி, பகவானுக்கு நிழல் கொடுத்தது. ஶ்ரீலட்சுமிதேவியின் அம்சம் அன்னப்பறவை. அதன் மூலம் வந்து வளர்ந்ததால், இந்த விருட்சமும் செல்வகடாட்சம் அருளும் தெய்வத்தன்மையைப் பெற்றது... என நீள்கிறது அந்தக் கதை.

கல்லால இலை வைத்து வழிபடுவது எப்படி?
குரு ஸ்தலங்களில் வழிபாடு, குலத்தின் பரம்பரை குரு பூஜை, சித்தர்களை குருவாக எண்ணி யோக வழிபாடு செய்வது, குரு தொடர்பான விருட்ச வழிபாடு ஆகியவற்றால் குருவருள் கைகூடும் என்பார்கள். இவற்றில், கல்லால இலை வழிபாடு 4-வது வகை.
வியாழக்கிழமையுடன் இணைந்து வரும் சுபமுகூர்த்த தினத்திலோ, பஞ்சாங்க சுத்தியுள்ள நாளிலோ விஷய ஞானம் நிறைந்த குருமார்களிடம் இருந்து பெண்வகையைச் சேர்ந்த கல்லால இலையைப் பெற்று வரவேண்டும்.
சில இடங்களில், சப்போட்டா மர இலைகளை லக்ஷ்மி மூலிகை என்று கொண்டு வந்து வைக்கிறார்கள் சிலர். அதன் இலையும் பெண் வகை கல்லாலம் போன்றே இருக்கும்; கவனம் தேவை. ஆகவே குருமார்களின் வழிகாட்டலுடன் இந்த இலையைப் பெற்று வருவது சிறப்பு.
வீட்டுக்குக் கொண்டு வந்ததும் பால் மற்றும் சந்தனத்தால் கழுவி சுத்தம் செய்து, சந்தனம் குங்குமம் வைக்க வேண்டும். தொடர்ந்து, மஞ்சள் மற்றும் சிவப்பு மலர்களைச் சமர்ப்பித்து, அன்றைய திதி- வாரம்- நட்சத்திரம் சொல்லி, ‘மம சீக்கிர தனதான்ய விருத்தியர்த்தம் குடும்ப க்ஷேமார்த்தம்’ என்று வேண்டிக்கொள்ளவேண்டும்.
தொடர்ந்து விநாயகரை வழிபடவேண்டும். பின்னர், மணைப் பலகை ஒன்றில் குருபகவானின் யந்திர எண் கட்டத்தை வரைந்து வைக்க வேண்டும் (மேலே படத்தில் உள்ளது).
அடுத்ததாக...
‘அநர்க்க ரத்ந சம்பூர்ணோ மல்லிகா குஸுமப்ரியா:
தப்தசாமி கராகாரோ ஜிததாவா நலாக்ருதி:
என மூன்று முறை சொல்லி வணங்கிவிட்டு, பின்வரும் பாடலைப் பாடித் துதிக்கவேண்டும்.
கல்லாலின் புடையமர்ந்து நான்மறை
ஆறங்க முதல் கற்ற கேள்வி
வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த
பூரணமாய் மறைக்கு அப்பாலாய்
எல்லாமாய் அல்லதுமாய் இருந்ததனை
இருந்தபடி இருந்து காட்டிச்
சொல்லாமல் சொன்னவரை நினையாமல்
நினைந்து பவத் தொடக்கை வெல்வாம்
இந்தத் துதியையும் மூன்று முறை சொல்லி வணங்கவேண்டும்.

அடுத்ததாக கீழ்க்காணும் ஸ்ரீஐஸ்வரிய லட்சுமி துதியை 108 முறை சொல்லி வணங்க வேண்டும்.
‘ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஞானாய கமலதாரிண்யை
சக்தியை சிம்ம வாஹின்யை பலாயை,
விருட்ச ரூபிண்யை மம ஐஸ்வர்யம் தன குருதே நம:
குபேர காலம் என்று சொல்லக்கூடிய வியாழன் மாலை 5 முதல் 8 மணிக்குள் வழிபடுவது சிறப்பு.
பூஜை முடிந்ததும், சிறிய புத்தகம் ஒன்றில் இலையை வைத்துப் பாதுகாக்கலாம். வாரம் ஒருமுறை வழிபட்டுவர, அபரிமிதமான பலனை அடையலாம். பூஜையறை மட்டுமின்றி பீரோ, பர்ஸ், பணப்பெட்டி ஆகியவற்றிலும் வைத்து வணங்கி வரலாம்!














