அன்பில் மகேஸ் வீடுகளில் சோதனை; கைப்பற்றப்பட்டவை என்னென்ன? - அறிக்கை வெளியீடு
கர்நாடகா: அரசு மருத்துவராக ஊதியம் பெற்றுக்கொண்டே PG படித்த பெண்; காங்கிரஸ் MLA உறவினருக்கு நோட்டீஸ்
கர்நாடக மாநிலம் பாகல்கோட்டையில் உள்ள வாம்பே காலனியில் இயங்கி வருகிறது கர்நாடக அரசின் 'நம்ம கிளினிக்' மருத்துவமனை. இந்தக் கிளினிக்கில் மருத்துவராக அங்கிதா யாராகல் என்ற பெண் பணியாற்றியிருக்கிறார்.
இவர் பாகல்கோட் தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் உமேஷ் மேட்டியின் உறவினர். இந்த நிலையில்தான் அவர் ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் முதுகலை (PG) மருத்துவப் படிப்பு படித்துக்கொண்டே, அரசுப் பணியில் மாதம் ரூ. 70,000-க்கும் அதிகமாக ஊதியம் பெற்று வந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
இது தொடர்பாக வெளியான செய்தியில், மார்ச் 3-ம் தேதி முதல் செப்டம்பர் மாதம் வரை பணிக்கு வராமல் தொடர்ந்து விடுப்பு எடுத்திருக்கிறார். இதனால் அந்தக் கிளினிக்கிற்கு வரும் ஏழை எளிய பொதுமக்கள் மருத்துவரின்றி மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
அதே நேரத்தில், பணியைப் புறக்கணித்துவிட்டு தனியார் மருத்துவக் கல்லூரியில் படிப்பைத் தொடர்ந்துகொண்டே அரசு ஊதியத்தையும் அவர் தவறாமல் பெற்று வந்துள்ளார். பொது சுகாதார நிறுவனங்களில் பணியாற்றும் அரசு மருத்துவ விதிகளையும், தேசிய மருத்துவ ஆணையத்தின் (NMC) தொழில்முறை நெறிமுறைகளையும் மீறியதற்காக இந்த விவகாரம் தீவிரமாக விசாரிக்கப்படுகிறது.
இது தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி, பாகல்கோட் ஜில்லா பஞ்சாயத்து தலைமை நிர்வாக அதிகாரி கஜானன் பாலே அறிவுறுத்தியிருக்கிறார். ஆனால், அங்கிதா யாராகல் ஆஜராகவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், `செப்டம்பர் 18-ம் தேதி காலை 10 மணிக்கு ஜில்லா பஞ்சாயத்து அலுவலகத்தில் நடைபெறும் விசாரணைக்குக் கட்டாயம் ஆஜராக வேண்டும். விசாரணைக்கு ஆஜராகத் தவறினால் கர்நாடக மருத்துவ கவுன்சில் மூலம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். அனுமதியின்றி இரட்டைப் பணியில் ஈடுபட்ட காலத்தில் பெற்ற முழு ஊதியமும் திரும்பப் பெறப்படும்' என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து பேசிய மாவட்ட சுகாதார அதிகாரி ராஜ்குமார் யாராகல், ``டாக்டர் அங்கிதாவைத் தற்போது பணியில் இருந்து நீக்கியிருக்கிறோம். மருத்துவக் கல்லூரியின் முதல்வர் அனுமதி அளித்த போதிலும் இவர் `நம்ம கிளினிக்' பணியைப் புறக்கணித்துள்ளார். எனவே, அடுத்தக்கட்ட விசாரணைக்கு அவர் ஆஜராகாவிட்டால் ஒருதலைப்பட்சமாக நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்திருக்கிறார்.

















