`நான் பாட்டியைக் கொன்னுட்டேன்' - குடிபோதையில் ரத்தம் சொட்டும் கத்தியுடன் கூச்சலி...
`என் மகனை உண்மையிலேயே காதலிக்கிறாய் எனில் தூக்கில் தொங்கு' - விபரீத முடிவெடுத்த மாணவி; பெண் கைது
குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்த 17 வயது மாணவர், தான் படிக்கும் பள்ளியில் 12வது வகுப்பு படிக்கும் மாணவியை காதலித்து வந்தார். இருவரும் அடிக்கடி போன் மற்றும் மெசேஜ் மூலம் தங்களது காதலை வளர்த்து வந்தனர். இருவருமே மைனர்கள் ஆவர். அவர்களின் இந்த காதல் விவகாரம், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மாணவியின் வீட்டிற்கு தெரிய வந்தது. உடனே மாணவியின் பெற்றோர் மாணவன் வீட்டிற்கு சென்று படிப்பில் கவனம் செலுத்தும் படி கூறிவிட்டு வந்தனர். அப்படி இருந்தும் இருவரும் தொடர்ந்து தொடர்பில் இருந்தனர். இந்நிலையில் பள்ளி வளாகத்தில் இருவரும் சேர்ந்து இருப்பதை பள்ளி முதல்வர் பார்த்தார்.
உடனே இருவரது பெற்றோரையும் அழைத்து இது தொடர்பாக தெரிவித்தார். இதனால் மாணவனின் தாய் நேஹா கோபமடைந்து தனது மகனை அழைத்துக்கொண்டு மாணவியின் வீட்டிற்கு சென்றார். வீட்டில் மாணவியின் பெற்றோர் இல்லை. மாணவி மட்டுமே இருந்தார்.

உண்மையாக காதலித்தால் தூக்கிலிட்டுக்கொள்
மாணவியுடன் மாணவனின் தாயார் நேஹா கடுமையாக வாக்குவாதம் செய்தார். அவர்கள் 30 நிமிடம் தகராறு செய்தனர். நேஹா மாணவியிடம், `எனது மகனை உண்மையிலேயே காதலித்தால் இறந்துவிடு' என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மாணவியின் தந்தை போலீஸில் கொடுத்துள்ள புகாரில், நேஹா மாணவியிடம், "நீ எனது மகனை உண்மையாகவே காதலித்தால் தூக்கு போட்டுக் கொள்" என்றும், "வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டுக் கொள்" என்று கூறியதாக தெரிவித்துள்ளார். அதோடு உன் பெற்றோரை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று அந்தப் நேஹா கூறியதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் நேஹா விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வேன் என்றும், தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வேன் என்றும், கூரையில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டியதாக புகாரில் கூறப்பட்டுள்ளது.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி மாணவி வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக சிறுமியின் குடும்பத்தினர் போலீஸாரிடம் தெரிவித்தனர். மாணவியும், நேஹாவும் வாக்குவாதம் செய்தது அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அவரது மரணத்திற்குப் பிறகு, மாணவியின் குடும்பத்தினர் போலீஸாரை அணுகி, சிறுமிக்கும் குற்றம் சாட்டப்பட்ட நேஹாவுக்கும் இடையே நடந்ததாகக் கூறப்படும் உரையாடலின் ஆடியோ பதிவை சமர்ப்பித்தனர்.
அந்த பெண் தங்கள் வீட்டிற்கு சென்றதாக கூறப்படும் சிசிடிவி காட்சிகளையும் அவர்கள் ஒப்படைத்தனர். அந்தப் பெண் மீது தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்வதற்கு முன், போலீஸார் ஆடியோ பதிவுகள், சிசிடிவி காட்சிகள் மற்றும் பிற ஆதாரங்களை ஆய்வு செய்தனர். வழக்கு பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து நேஹா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.!


















