`நான் பாட்டியைக் கொன்னுட்டேன்' - குடிபோதையில் ரத்தம் சொட்டும் கத்தியுடன் கூச்சலி...
`அன்பில் மகேஸ் மீது ரெய்டு அஸ்திரம்; விரக்தியில் இலாயக்கற்ற அரசு...' - மு.க.ஸ்டாலின் கண்டனம்!
தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்க லஞ்சம் பெற்றதாக அன்பில் மகேஸ் மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
இந்த வழக்கின் தொடர்ச்சியாகவே அன்பில் மகேஸ் வீடுகளில் இன்று காலை முதல் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருச்சி, சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அன்பில் மகேஸின் வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் அன்பில் மகேஸ் வீட்டில் நடத்தப்படும் சோதனைக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், " அன்பில் மகேஸ் பொய்யாமொழி மீது ரெய்டு: மற்றுமொரு திசைதிருப்பும், அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை
தமிழ்நாடு முழுவதும் மின்வெட்டினால் பாதிக்கப்படும் மக்களின் போராட்டங்கள்,பட்டினப்பாக்கம் மீனவர்கள் போராட்டம், நேபாளத்தில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் உரிய பதில் கிடைக்காமல் தலைமைச் செயலகம் முன் போராட்டம், ஆவின் பால் தட்டுப்பாட்டால் மக்கள் பரிதவிப்பு, இராமநாதபுரம் இரட்டைக் கொலை, சென்னையில் பிள்ளையார் சதுர்த்தி ஊர்வலத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநர் அடித்துக் கொலை, அயனாவரத்தில் பெண் காவலரிடம் த.வெ.க. நிர்வாகி சீண்டல் என மாநிலத்தை உலுக்கி வரும் எதையும் கண்டுகொள்ளாமல் இலண்டனில் ஷூட்டிங் நடத்திக்கொண்டிருக்கிறார் முதலமைச்சர்.
இந்தப் பிரச்சினைகளைச் சரிசெய்ய முடியாத விரக்தியில், மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் அவர்கள் மீது ரெய்டு அஸ்திரத்தை ஏவியுள்ளது எதற்கும் இலாயக்கற்ற த.வெ.க. அரசு.

இந்த அப்பட்டமான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையைச் சட்டரீதியாக நாங்கள் எதிர்கொள்வோம். எதிர்க்கட்சி மீது ரெய்டு நடத்துவதால் மக்கள் கோபத்தைத் தணிக்க முடியாது. பொய்யான குற்றச்சாட்டுகளும் சட்டத்தின் முன் நிலைக்காது என்பதை இந்த அரசு விரைவில் உணரும்!" என்று பதிவிட்டிருக்கிறார்.













