விக் அணிந்து ஆள்மாறாட்டம்; போலி பெயர்களில் ரூ.30 கோடி மோசடி செய்தவர் கைது; வெளிய...
விக் அணிந்து ஆள்மாறாட்டம்; போலி பெயர்களில் ரூ.30 கோடி மோசடி செய்தவர் கைது; வெளியான பகீர் தகவல்கள்
மும்பை காந்திவலியைச் சேர்ந்த சஞ்சய் ஹிராலால் ஷா (60) என்பவர் தனது குடும்பத்திடம் பங்குச்சந்தையைப் பயன்படுத்தி ரூ.10.81 கோடி மோசடி செய்யப்பட்டுவிட்டதாகக் கூறி மும்பை போலீஸ் கமிஷனர் தேவன் பார்தியிடம் கடந்த ஏப்ரல் மாதம் புகார் செய்தார்.
அதன் அடிப்படையில் போலீஸார் நடத்திய விசாரணையில், 'இன்வெஸ்டாக்' என்ற வர்த்தக செயலியை உருவாக்குவதாகக் கூறி, 2020 ஆம் ஆண்டில் ஷாவின் சாப்ட்வேர் இன்ஜினியர் மகனுடன் குற்றம் சாட்டப்பட்ட ரோஷன் பூஷன் சேத் நட்பாகப் பழகியது விசாரணையில் தெரிய வந்தது.
அந்த நட்பைப் பயன்படுத்தி சஞ்சய் குடும்பத்தை அதிக அளவில் பங்குச்சந்தையில் முதலீடு செய்யும்படி வற்புறுத்தினார். மேலும் மற்ற முதலீட்டாளர்களைக் கவரும் வகையில் பங்குச்சந்தையில் அதிக லாபம் கிடைத்து இருப்பது போன்ற புள்ளி விபரங்களைக் காட்டி நம்ப வைத்துள்ளார்.

இதற்காக அவர் மும்பை சயான் மற்றும் மாட்டுங்காவில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பில் முதலீட்டாளர்களைச் சந்தித்துள்ளார். ஷாவின் குடும்பத்தை நம்ப வைக்க, கடந்த டிசம்பர் மாதம் லாபம் என்று கூறி 3.8 கோடி ரூபாய் கொடுத்துள்ளார்.
அதன் பிறகு ஏப்ரல் மாதத்தில் ரோஷன் காணாமல் போனார். அவரை போலீஸார் தீவிரமாகத் தேட ஆரம்பித்தனர். தொழில்நுட்பக் கண்காணிப்பைத் தொடர்ந்து, அவர் குஜராத் மாநிலம் வல்சாட்டில் இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து அங்குள்ள ஒரு குடியிருப்புக் கட்டிடத்தை போலீஸார் தீவிரமாகக் கண்காணித்து வந்தனர். துப்புரவுத் தொழிலாளி போன்று மாறுவேடமிட்டு அவரது அடுக்குமாடிக் குடியிருப்பில் நுழைந்த அதிகாரிகள் மூன்று நாள் துப்புரவுத் தொழிலாளியாக வேலை செய்து அவரைக் கைது செய்தனர்.
ஒவ்வொரு நகரிலும் ஒரு பெயர்
ரோஷன் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு அடையாளத்துடன் வாழ்ந்து வந்தது தெரியவந்தது. தனது இளமை பருவத்தில் ஜெயேஷ் ஹஸ்முக்பாய் ஷா என்ற பெயரிலும், டெல்லியில் இருந்தபோது ராகுல் அதுல்பாய் பரேக் என்ற பெயரிலும் மற்றும் மும்பையில் ரோஷன் பூஷன் ஷேத் என்ற பெயரிலும் அடையாளத்தை மாற்றி வாழ்ந்து மோசடி செய்துள்ளார்.
அவரிடமிருந்து பிஎம்டபிள்யூ, மெர்சிடிஸ், மஹிந்திரா தார், 14 சொகுசு கைக்கடிகாரங்கள், ரூ.1.67 கோடி மதிப்புள்ள தங்க ஆபரணங்கள், ரூ.17 லட்சம் ரொக்கம், மூன்று குடியிருப்பு சொத்துகளையும் பறிமுதல் செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
போலீஸார் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில், ரோஷன் விக் மூலம் தனது அடையாளத்தை அதிக அளவில் மாற்றி இருக்கிறார். அவருக்கு விக் ஏற்பாடு செய்து கொடுத்த சலூன் ஊழியர்கள் உட்பட 37 சாட்சிகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. தனது அடையாளத்தை மறைக்க விக் அணிந்து, மூன்று வெவ்வேறு மாற்றுப்பெயர்களில் வாழ்ந்து, பங்குச் சந்தை மோசடி மூலம் முதலீட்டாளர்களை ரூ.30 கோடிக்கு மேல் ரோஷன் மோசடி செய்தது தெரிய வந்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட ரோஷன் பூஷன் சேத், சொகுசு குடியிருப்புகள், உயர்தர கார்கள் மற்றும் விலையுயர்ந்த கைக்கடிகாரங்கள் போன்றவற்றின் மூலம் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்துள்ளார். மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தில் பாதிக்கப்பட்ட 42 பேரிடம் பங்குச்சந்தை முதலீடுகளில் 5 சதவீத மாதாந்திர வருமானம் தருவதாக உறுதியளித்து இந்த மோசடியைச் செய்துள்ளார்.
முதலீட்டாளர்களை நம்ப வைக்க பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்யப்பட்டதன் மூலம் அதிக லாபம் கிடைத்தது போன்று ஜோடிக்கப்பட்ட லாப அறிக்கைகளைக் காட்டியுள்ளார். பெண் உட்பட முதலீட்டாளர்களிடம் ரூ.30 கோடி அளவுக்கு மோசடி செய்துள்ளதாக போலீஸார் தங்களது குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளனர்.


















