திருப்பரங்குன்றம்: ``நீதிமன்ற உத்தரவை இந்து விரோத திமுக அரசு செயல்படுத்த வேண்டும...
திருப்பரங்குன்றம்: ``இன்றே மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும்" - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு
ஆண்டுதோறும் கார்த்திகை தீபம் தினத்தன்று திருப்பரங்குன்றம் மலையில் உச்சிப் பிள்ளையார் கோயிலின் தீபத் தூணில் தீபம் ஏற்றப்படும்.
ஆனால், இந்த ஆண்டு கார்த்திகை தீபம் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் ஏற்ற அனுமதிக்குமாறு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இந்து தமிழர் கட்சியின் ராம ரவிக்குமார் என்பவர் மனு தாக்கல் செய்தார்.
இதனை விசாரித்த நீதிமன்றம், கார்த்திகை தீபம் தினத்தன்று திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டது.

ஆனால், கார்த்திகை தீபம் தினமான நேற்று (டிசம்பர் 3) வழக்கமாக ஏற்றப்படும் உச்சிப் பிள்ளையார் கோயிலின் தீபத் தூணில் தீபம் ஏற்றப்பட்டது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த வலதுசாரி அமைப்பினர் அப்பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இவ்வாறான சூழலில் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், ``CISF வீரர்களின் பாதுகாப்புடன் மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட வேண்டும்" என்று நேற்று மாலை உத்தரவிட்டார்.
அதன்படி CISF வீரர்களுடன் மனுதாரர் தரப்பினர் மலை உச்சியில் தீபம் ஏற்ற ஆயத்தமாகினர். அதேவேளையில் திருப்பரங்குன்றம் மலைப்பகுதி போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
பா.ஜ.க மற்றும் இந்து முன்னணியினர் உள்ளிட்ட வலதுசாரி அமைப்பினரின் ஆர்ப்பாட்டம் அதிகரிக்கவே போலீஸாருக்கும் அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இது கலவரமாக மாறுவதைத் தடுக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் உடனடியாக அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பித்தார். மறு உத்தரவு வரும் வரையில் 144 தடை தொடரும் வகையில் இது அமல்படுத்தப்பட்டது.

மறுபக்கம், தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நிர்வாக நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞர் வீரா கதிரவன் முறையிட்டார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் முடிவில் நீதிமன்ற அமர்வு, ``ஏதோவொரு உள்நோக்கத்துடன் மாநில அரசு வழக்கு தொடர்ந்திருக்கிறது. மாநில அரசு தனது கடமையைச் செய்யத் தவறியதால் CISF பாதுகாப்புக்கு செல்ல உத்தரவிடப்பட்டது" என்று குறிப்பிட்டு மாநில அரசின் மனுவைத் தள்ளுபடி செய்தது. மேலும், இந்த வழக்கை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனே விசாரிப்பார் என்றும் நீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்தது.
அதன்படி, உடனடியாக இன்று மாலை விசாரணையைத் தொடங்கிய நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ``மதுரை காவல் ஆணையர், கோயில் செயல் அலுவலர் ஆகியோர் உடனடியாக காணொளி மூலம் ஆஜராக வேண்டும்" என்று அரசுத் தரப்புக்கு உத்தரவிட்டார்.
அதோடு, ``ஆஜராகவில்லையென்றால் கடுமையான உத்தரவைப் பிறப்பிக்கவும் தயங்க மாட்டேன்" எனவும் எச்சரித்தார்.
அதன்படி விசாரணையில் ஆஜரான காவல் ஆணையர் லோகநாதனிடம், ``நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்தீர்களா?" என்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கேள்வியெழுப்பினார்.

அதற்கு, ``பேரிகார்டுகளை அமைத்து பிற்பகல் 3:30 மணி முதல் நடவடிக்கை எடுத்தோம். ஆனால், கூட்டம் அதிகமாகி பிரச்னை ஏற்பட்டதால் மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவைப் பிறப்பித்தார்" என்று காவல் ஆணையர் பதிலளித்தார்.
விசாரணை முடிவில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ``இன்றே மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும்" என்று உத்தரவு பிறப்பித்தார்.
மேலும், ``தீபம் ஏற்றுவதற்கு காவல்துறை ஆணையர் முழு பாதுகாப்பு வழங்க வேண்டும். உத்தரவு நிறைவேற்றப்பட்டது தொடர்பாக நாளை அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்.
உத்தரவை நிறைவேற்றத் தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கவும் தயங்க மாட்டேன்" என்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் எச்சரிக்கும் தொனியில் தெரிவித்தார்.
















