'சொத்தைக் கொடுக்காதே' என்ற அறிவுரைகளும், இன்றைய பிள்ளைகளின் நிஜப் பாசமும்
தேனி: ஆக்கிரமிப்பு பட்டியலில் பழங்குடி மக்கள்; நீதிமன்றத்தை ஏமாற்றியதாக வனத்துறை மீது குற்றச்சாட்டு?
மேகமலை வருஷநாடு பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென உச்சநீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது. ஆக்கிரமிப்புப் பட்டியலில் வருஷநாடு, கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை ஆகிய 98 கிராமங்களைச் சேர்ந்த மக்களின் குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்கள் வருவதால் அவர்களும் வெளியேற்றபடலாம் என்கிற அச்சம் நிலவி வருகிறது.
இதற்கிடையில் மேகமலை ஊராட்சியில் உள்ள நொச்சி ஓடை பகுதியில் உள்ள பளியர் பழங்குடி மக்களின் பெயர்களும் ஆக்கிரமிப்புப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பேசிய பழங்குடியினர் செயற்பாட்டாளர் தன்ராஜ் , “ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகத்தில் தேனி மாவட்டம் மேகமலை ஊராட்சியில் உள்ளது வனக்கிராமம் நொச்சிஓடை. தென்னிந்தியாவிலேயே உணவு சேகரித்து வாழும் பழங்குடி இன வகையைச் சார்ந்த பளியர் பழங்குடியின மக்கள் தொன்றுதொட்டு இந்த வனக்கிராமத்தில் வாழ்ந்து வருகிறார்கள்.
இவர்கள் வனத்திற்கும், இயற்கைக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தாமல் இயற்கையோடு இயைந்த எளிமையான குடிசைகளில் வாழ்பவர்கள். இவர்கள் காடுகளை நம்பியே வாழ்பவர்கள். காடுகளில் சிறுவன மகசூல் சேகரித்தும், தங்களுடைய கிராமங்களில் விவசாயம் செய்து வாழந்து வருகிறார்கள்.

வறுமையின் பிடியில் உள்ள இம்மக்கள் வாழ்வாதாரத்திற்காக மதுரை, விருதுநகர் மற்றும் கேரள வனப்பகுதிகள் வரை காடுகளுக்குள்ளேயே பயணிப்பவர்கள். நொச்சி ஓடையில் 29 குடும்பங்கள் வாழ்ந்து வந்த நிலையில், வனத்துறையின் கெடுபிடிகளால தற்போது 22 குடும்பங்கள் மட்டுமே வாழ்ந்து வருகின்றனர்.
வன உரிமைச் சட்டம் 2006-ன் கீழ் ஏற்கனவே சட்டப்பூர்வமாக வன உரிமைப் பட்டா பெற்ற கர்ணன், முருகன் உள்ளிட்ட 12-க்கும் மேற்பட்ட பழங்குடிகளின் பெயர்களும் அவர்களின் உறவினர்களும் இந்த ஆக்கிரமிப்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள நிலையில்தான் வனத்துறையினரின் மனசாட்சியற்ற சட்ட விரோத செயல்கள் தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றன.
மேலும் மீதமுள்ள 11 குடும்பங்களின் நில உரிமைக்கோரல் விண்ணப்பங்கள், உபகோட்டக் குழுவின் (SDLC) பரிசீலனையில் நிராகரிக்கப்படாமல் நிலுவையில் உள்ளன. மரம் வெட்டுவது வேட்டையாடுவதைத் தவிர்த்த அனைத்துப் பாரம்பர்யமான வன உரிமைகளையும் சமுதாய உரிமைகளும் அரசால் இந்த மக்களுக்கு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
மேகமலை புலிகள் சரணாலய வன ஆக்கிரமிப்பு அகற்றம் குறித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வெளியாவதற்கு முன்பிருந்தே, கடந்த 5 ஆண்டுகளாகவே நொச்சி ஓடை பழங்குடியினரை அங்கிருந்து வெளியேற்ற மேகமலை புலிகள் காப்பக வனத்துறையினர் தீவிரமாக முயன்று வந்தனர். இக்கிராமத்திற்கு வெளி நபர்களோ அரசு அலுவலர்களோ தன்னார்வ நிறுவனங்களோ செல்ல வனத்துறையினர் அனுமதிப்பதில்லை. அரசின் திட்டங்களும் முழுமையாக இந்தக் கிராம மக்களுக்குச் சென்றடைவதில்லை.

தற்போதைய உச்ச நீதிமன்ற உத்தரவைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு, நீதிமன்றத்தைத் தவறாக வழிநடத்தும் நோக்கோடும் உள்நோக்கத்தோடும் பளியர் பழங்குடிகளை ’ஆக்கிரமிப்பாளர்கள்’ பட்டியலில் முதல் நிலை ஆக்கிரமிப்பாளர்களாக வனத்துறையினர் சேர்த்துள்ளனர். இதில் 12க்கும் மேற்பட்ட குடும்பங்களை வனத்துறையினர் இணைத்துள்ளது.
இந்த நாட்டில் வனங்களை வனத்துறையினருக்குக் கையளித்தவர்கள் பழங்குடியினர். ஆனால் அவர்களைத்தான் திட்டமிட்டு ஏமாற்றி ஆக்கிரமிப்பாளர்கள் என முத்திரை குத்தி சட்டத்திற்கு விரோதமாக வெளியேற்ற துடிக்கினறனர் புலிகள் காப்பக வனத்துறையினர். வனத்துறையினர் தயாரித்துள்ள ஆக்கிரமிப்பாளர் பட்டியலும் முழுக்க முழுக்க முறைகேடானது மற்றும் தன்னிச்சையானது.
இது பழங்குடி மக்களின் கண்ணியத்தையும் மாண்பையும் குலைக்கும் செயல். இதற்காக எஸ்சி/எஸ்டி வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கே தொடுக்கலாம். தமிழக அரசு தலையிட்டு வனத்துறையின் இத்தகைய முறையற்ற மற்றும் சட்டவிரோதச் செயல்களை உச்ச நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி, பளியர் பழங்குடியின மக்களையும் தகுதி வாய்ந்த பிற வனம் சார் சமுதாய மக்களின் வாழ்வுரிமையையும், கண்ணியத்தையும் பாதுகாத்திட வேண்டும்” என்றார்

















