"பதவி ஆசையால் கூட்டணியைவிட்டு வெளியே வந்ததாக ஒரு தோற்றத்தை உருவாக்குகிறார்கள்" -...
"பதவி ஆசையால் கூட்டணியைவிட்டு வெளியே வந்ததாக ஒரு தோற்றத்தை உருவாக்குகிறார்கள்" - திருமா காட்டம்
விசிக தலைவர் திருமாவளவன் சென்னையில் இன்று (செப்.15) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.
"மின்வெட்டு இருக்கிறது என்பது உண்மைதான். அரசு இதில் கூடுதல் கவனம் செலுத்தி இதனைச் சீர் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகாரிகள் சொல்லும் தகவல்களை வைத்துதான் அமைச்சர்கள் பதில் சொல்கிறார்கள்.
அதிகாரிகள் சரியானத் தகவல்களை அமைச்சர்களுக்கு வழங்க வேண்டும். இன்றைக்கு தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவின் பல மாநிலங்களில் தேர்தல் நேரங்களில் குறிப்பாக இடைத்தேர்தல் நேரங்களில் பணத்தைக் கொட்டி இறைக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மை.
வாக்குகளை விலைக்கு வாங்குகிறார்கள் என்பதும் அண்மை காலமாக அதிகரித்திருக்கிறது. இது நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு நல்லது அல்ல. ஆகவே இந்த இடைத்தேர்தலில் இதுபோன்ற விஷயங்கள் நடக்கக்கூடாது. தேர்தல் ஆணையம் இதில் கவனம் செலுத்த வேண்டும்.
திமுகவுடன் நாங்கள் நீண்ட நாட்கள் பயணித்திருக்கிறோம். எப்படி அவர்களுடன் பயணித்தோம் என்பது முன்னணித் தலைவர்கள் மற்றும் அண்ணன் ஸ்டாலின் அவர்களுக்கும் தெரியும். ஆனால் திமுகவிற்கு ஆதரவாகப் பேசுகிறோம் என்ற பெயரில் சிலர் எங்கள் மீது தேவையில்லாத அவதூறுகளைப் பரப்புகிறார்கள்.

துரோகப் பட்டத்தைச் சுமத்துகிறார்கள். திமுக கூட்டணியில் இருந்து பதவிக்காக நாங்கள் விலகினோம் என்பது போன்ற தவறான தகவலைப் பரப்புவது சரியானது கிடையாது. இது எங்கள் தலைமைத்துவத்தின் மீது நடத்தும் தாக்குதலாகப் பார்க்கிறேன். பதவி ஆசை பிடித்து அந்தக் கூட்டணியைவிட்டு வெளியே வந்தாக ஒரு தோற்றதை உருவாக்குகிறார்கள்" என்று பேசியிருக்கிறார்.

















