'முதல்வர் விஜய்யின் 'மெகா' ப்ளான்; பாராட்டிய வைகோ; முன்வைக்கப்பட்ட கோரிக்கை! - த...
'அணுக்கனிமக் கொள்ளை; அனுமதி நீட்டிப்பு ஆணையைத் தவெக அரசு திரும்பப் பெற வேண்டும்'- சீமான் எச்சரிகை
கதிரியக்கத் திட்டத்திற்குத் துணைபோகும் அனுமதி நீட்டிப்பு ஆணையைத் த.வெ.க அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
கடும் கண்டனம்
இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் வட்டத்திற்கு உட்பட்ட 1144 ஹெக்டேர் பரப்பளவில் கதிரியக்கத் தாக்கம் ஏற்படுத்தும் கனிமங்களைப் பிரித்தெடுக்கும் இந்திய அருமணல் நிறுவனத்தின் (IREL) அழிவுத் திட்டத்திற்கு, மேலும் ஓராண்டு கால நீட்டிப்பு வழங்கி அரசாணை (G.O. Ms No. 12) வெளியிட்டிருக்கும் தமிழக வெற்றிக் கழக அரசின் செயல் கடும் கண்டனத்திற்குரியதாகும்.

துணைபோயிருக்கிறது த.வெ.க அரசு.
அதிகாரத்திற்கு வருவதற்கு முன்பு, கடந்த 03.11.2024 அன்று நடந்த த.வெ.க-வின் செயற்குழுக் கூட்டத்தில், "தென் தமிழகத்தைப் பாழ்படுத்தும் அபாயம் விளைவிக்கும் நாசகர, நச்சுத் திட்டம்" என இந்த அணுக்கனிம அகழ்வுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றினார்கள். ஆனால், இன்று அதே திட்டம் 10.06.2026 அன்றுடன் முழுமையாகக் காலாவதியாக இருந்த நிலையில், சரியாக இறுதி நாளில் அத்திட்டத்தை மீண்டும் உயிர்ப்பித்து, ஒட்டுமொத்தத் தென் தமிழக மக்களையும் கதிரியக்கப் பாதிப்பிற்குள்ளாக்கும் செயலுக்கு துணைபோயிருக்கிறது த.வெ.க அரசு.
வாழ்வாதாரம் சீரழிக்கப்படும்
கீழ்மிடாலம், மிடாலம், இனயம்புத்தன்துறை, ஏழுதேசம், கொல்லங்கோடு ஆகிய கிராமங்களில் தாது மணலில் இருந்து மோனசைட் (Monazite), சிர்கான் (Zircon) உள்ளிட்ட கதிரியக்கக் கனிமங்களைப் பிரித்தெடுப்பது ஈடுசெய்ய முடியாத சூழலியல் பேரழிவை ஏற்படுத்தும். இந்த அகழ்வினால் ஏற்படக்கூடிய கதிரியக்கம் சுற்றுப்புறக் கிராமங்களில் பரவிப் பொதுமக்களைப் புற்றுநோய்க்கு ஆளாக்கும் ஆபத்து உள்ளது. கடலோர மணலில் இருந்து தாதுப் பொருட்களைப் பிரித்து எடுத்த பிறகு கழிவு நீரையும் மணலையும் கொட்டுவதால் கடல் நீரின் தன்மை மாறுவதோடு, மீன் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் அழிந்து மீனவர்களின் வாழ்வாதாரம் நிரந்தரமாகச் சீரழிக்கப்படும்.

இயற்கை வளப் பாதுகாவலர்
சென்ற மாதம் தான் தமிழ்நாட்டின் குவாரிகளுக்கு புகைப்படக் கலைஞர் குழு புடைசூழ பார்வையிட்டு ‘இயற்கை வளப் பாதுகாவலர்’ என்று சமூக ஊடகங்களில் தன் ரசிகர் பட்டாளத்தை வைத்துப் பாராட்டுப் பத்திரம் வாசித்துக் கொண்டிருந்தார் மாண்புமிகு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டி.கே. பிரபு அவர்கள். ஆனால், அந்த விளம்பரங்களின் சாயம் வெளுக்க ஒரு மாதம் கூட ஆகவில்லை. அதே அமைச்சகத்தின் கீழ் இருக்கும் இயற்கை வளங்கள் துறைதான், கன்னியாகுமரியின் 1144 ஹெக்டேர் பரப்பளவை அணுக்கனிமக் கொள்ளைக்குத் தாரைவார்க்கும் அரசாணையில் கையெழுத்திட்டுள்ளது.
‘அதிரடி’ நிர்வாகமா?
குவாரிகளை சீரமைப்பது போல் பாவனை செய்துவிட்டு, ஒட்டுமொத்தக் கடலோரத்தையே கதிரியக்கப் பாதிப்பிற்குள்ளாக்கும் ஒன்றிய அரசின் IREL நிறுவனத்திற்கு சிகப்பு மின்கம்பளம் விரிப்பதுதான் அமைச்சர் பிரபு அவர்களின் ‘அதிரடி’ நிர்வாகமா? விளம்பரத்திற்கு ஒரு முகம், ஒன்றிய அரசுக்கு ஒரு முகம் காட்டும் இந்த இரட்டை வேடத்தைத்தான் மக்கள் கடந்த மாதம் கொண்டாடித் தீர்த்தார்களா?
மக்களின் எதிர்ப்பைக் கண்டு அஞ்சிய ஒன்றிய பாஜக அரசு, 08.09.2025 அன்று அறிவித்திருந்த மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தையே நடத்தாமல் திரும்பபெற்று, எப்படியாவது இத்திட்டத்தை செயல்படுத்திவிட முடியாதா என்று முயற்சிக்கும் நேரத்தில் மாநில அரசோ, IREL நிறுவனத்திற்குத் தேவையான கடலோர ஒழுங்குமுறை மண்டல (CRZ) அனுமதியைப் பெற வசதியாகக் கால நீட்டிப்பை வழங்கியுள்ளது. ஒன்றிய அரசின் கனிமவளக் கொள்ளைக்குத் தலையாட்டி பொம்மையாகச் செயல்படுவதைத் தவெக அரசு கைவிட வேண்டும்.

எச்சரிக்கின்றேன்
தமிழ்நாடு அரசு உடனடியாகத் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி, IREL நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட கால நீட்டிப்பு அரசாணையை திரும்பப்பெற வேண்டும். கன்னியாகுமரி மண்ணையும் மக்களையும் பாதுகாக்கும் இந்த சட்டப்போராட்டத்திலும், களப்போராட்டத்திலும், இத்திட்டத்தை முழுமையாகக் கைவிடும் வரை மக்களுடன் இணைந்து மாபெரும் எதிர்ப்பினை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் என எச்சரிக்கின்றேன்" என்று தெரிவித்திருக்கிறார்.











