Stephen: "ஒரு Shortfilm-ல ஆரம்பிச்ச கதை தான் Stephen" - Gomathi Shankar & Mithun...
"அரசியல் புயல்கள் வந்தாலும், அதை எதிர்கொள்ள திமுக தயார்" - தங்கம் தென்னரசு
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள மல்லாக்கிணறு தனியார் மண்டபத்தில் திமுக வடக்கு மாவட்டச் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
இதில் விருதுநகர் வடக்கு மாவட்டச் செயலாளரும் தமிழ்நாடு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சருமான தங்கம் தென்னரசு கலந்து கொண்டு கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.
வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு, டிசம்பர் 4ஆம் தேதி விருதுநகர் மாவட்டத்திற்கு வருகை தரும் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை உற்சாகமாக வரவேற்கும் ஏற்பாடுகள் மற்றும் வாக்காளர் சீரமைப்புப் பணிகள் தொடர்பாக ஆலோசனைகள் நடைபெற்றன. இதில் தி.மு.க மாநில, மாவட்ட, ஒன்றிய மற்றும் நகர நிர்வாகிகள் பங்கேற்றனர்.

அதில் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, “தமிழ்நாட்டின் அரசியல் சூழ்நிலைகள் தேர்தலை முன்னிட்டு மாற்றமடைந்து வருகிறது. எந்தக் கூட்டணி யாருடன் சேருகிறது என்பது குறித்து பல ஊகங்கள் பேசப்பட்டாலும், தி.மு.கவிற்குக் கவலையில்லை" என்று அவர் தெரிவித்தார்.
“எந்தக் கூட்டணி யாருடன் சென்றாலும் எங்களுக்குக் கவலையில்லை. நரி வலம் வந்தாலும், இடம் சென்றாலும் நமக்குத் தொடர்பில்லை. முதலமைச்சர் மற்றும் கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் அமைக்கும் கூட்டணியே எப்போதும் வெற்றிக் கூட்டணியாக இருந்து வந்துள்ளது; இனியும் அதுவே வெற்றிக் கூட்டணியாக இருக்கும்” என்று அவர் உறுதியாக கூறினார்.
“புயல் வந்தாலும் இறுதியில் வலுவிழந்து காற்றழுத்தத் தாழ்வு நிலையாக மாறி தமிழகத்தைத் தாண்டி பிற மாநிலங்களில் கரையைக் கடக்கும்.

தமிழ்நாட்டில் எந்தப் புயலும் பெரிய சவாலாக மாறாது. அரசியல் புயல்கள் வந்தாலும், அதை எதிர்கொள்ள திமுக தயாராக உள்ளது” என்றார்.
முதலமைச்சர் ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி, எதிர்காலத்தில் உருவாகும் அரசியல் மற்றும் தேர்தல் சூழ்நிலைகளைக் கவனத்துடன் எதிர்கொண்டு செயல்பட வேண்டும் என்றும், மதச்சார்பற்ற முற்போக்கு இந்தியா கூட்டணி வலுவாகத் தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இவ்வாறு ஒருங்கிணைந்த உழைப்பின் மூலம் வரவிருக்கும் தேர்தலில் தி.மு.க வலுவான வெற்றியைப் பெற அனைவரும் செயல்பட வேண்டுமென அவர் அழைப்பு விடுத்தார்.


















