``பாஜக-வின் துரோகத்தைத் தட்டிக்கேட்க முடியாத நயினார் நாகேந்திரன்" - சாடும் மாணிக...
``ஆர்.எஸ்.பாரதிக்கு இது அழகல்ல..." - கடிந்துகொண்ட அமைச்சர் விஸ்வநாதன்
இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு, முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் உத்தரவின்பேரில், தமிழ்நாடு அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் அனைவரும் மாநிலத்தின் பழமை வாய்ந்த மற்றும் பிரசித்தி பெற்ற திருக்கோயில்களுக்குச் சென்று சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர். இதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள குருங்காலீஸ்வரர் திருக்கோயிலுக்கு சென்று சிறப்பு வழிபாடு செய்தார்.

அதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் ஊடகவியலாளர்கள், `காங்கிரஸ் கட்சிக்கான ஒரிஜினல் ஓனர் நாங்கதான் என்றும், காங்கிரஸ் தற்போது தவெக-விடம் லீஸுக்கு சென்றிருக்கிறது. எத்தனை மாதம் லீஸ் என்பதுமட்டும்தான் தெரியவில்லை' என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி விமர்சித்திருந்ததைக் குறிப்பிட்டு கேட்டனர். இது குறித்து பதிலளித்த அமைச்சர், ``தி.மு.க கடந்த காலங்களில் பல தொகுதிகளில் வெற்றி பெற்றதற்கு கூட்டணிக் கட்சிகளின் ஒற்றுமையே முக்கியக் காரணம். ஆறு அமைச்சர்கள், எட்டு அமைச்சர்கள், 22 நாடாளுமன்ற உறுப்பினர்கள் என ஆகாயத்திலிருந்து தி.மு.க நேரடியாக வந்து வெற்றி பெறவில்லை.
கூட்டணியின் பலத்தால்தான் அந்த வெற்றிகள் சாத்தியமாயின. 60 ஆயிரம் முதல் ஒன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலேயே நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற முடிந்தது என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது. தேவையில்லாமல் எங்களைச் சீண்டுவது ஆர்.எஸ். பாரதி போன்ற மூத்த தலைவர்களுக்கு அழகல்ல. இது ஒரு தவறான அணுகுமுறை. இந்த விவகாரம் குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் பலமுறை தெளிவுபடுத்திவிட்டார்.
இனிமேலும் இத்தகைய கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அதேபோல, காட்டுமன்னார்குடி விசிக சட்டமன்ற உறுப்பினர் `எம்.எல்.ஏ-க்களுக்கு ஒரு காரும் உதவியாளரும் வழங்க வேண்டும்' என பேரவையில் கோரிக்கை வைத்திருந்தார். அந்தக் கோரிக்கை முதலமைச்சரின் கவனத்திற்குச் சென்றுள்ளதை நேரலையில் பார்த்தேன். முதலமைச்சர் விரைவில் இது குறித்து ஒரு நல்ல முடிவை எடுத்துச் சட்டமன்றப் பேரவையில் அறிவிப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது." என்றார்.









