இந்து நெறிமுறைகளைப் பின்பற்றாத 18 ஊழியர்கள் நீக்கம்: திருப்பதி தேவஸ்தானம்!
‘இந்து தேசியமும் காலிஸ்தானியமும்..!’ - லீக்கான சீக்ரெட் ரிப்போர்ட்; பிரிட்டன் அரசுக்கு அச்சுறுத்தலா?
‘இந்து தேசியமும் காலிஸ்தானியமும் இங்கிலாந்தின் புதிய அச்சுறுத்தல்’ என்ற மையத் தகவலுடன், பொதுவெளியில் லீக் ஆன பிரிட்டன் உள்துறை அலுவலக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுநாள் வரை பிரிட்டன் அரசாங்க கொள்கைகளில் இடம்பெறாத புதிய அம்சங்கள் அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
லீக் செய்யப்பட்ட, 30 பக்கம் கொண்ட அந்த அறிக்கையில் 9 வகையான தீவிரவாதங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இஸ்லாமிய தீவிரவாதம், தீவிர வலதுசாரி கொள்கை, தீவிர பெண் வெறுப்பு, காலிஸ்தான் ஆதரவு தீவிரவாதம், இந்து தேசியவாத தீவிரவாதம், சுற்றுச்சூழல் தீவிரவாதம், இடதுசாரி கொள்கை, அராஜகங்களில் ஈடுபடுவது, ஒற்றை பிரச்னை தீவிரவாதம், வன்முறை ஆர்வம் மற்றும் சதிக் கோட்பாடு ஆகியவை அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற கலவரங்களை கணக்கில் கொண்டு தீவிரவாதம் குறித்த அரசாங்கக் கொள்கையை தீர்மானிக்கும் ஓர் அறிக்கையை உருவாக்க உள்துறைச் செயலாளர் யெவெட் கூப்பர் உத்தரவிட்டிருந்தார்.
அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள தீவிரவாத பட்டியலில் இரண்டு அம்சங்கள் இந்தியர்களிடையே கவனம் பெற்றுள்ளன.
அவை: இந்து தேசியவாதம் மற்றும் காலிஸ்தான் ஆதரவு. இவற்றுக்காக இரண்டு பக்கங்கள் அந்த அறிக்கையில் ஒதுக்கப்பட்டுள்ளன. அதில் ‘இந்திய துணைகண்டத்தில் இருந்து தோன்றிய இரண்டு தீவிரவாதங்கள் - காலிஸ்தான் ஆதரவு தீவிரவாதம் மற்றும் இந்து தேசியவாதம் அல்லது இந்துத்வா’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2022 செப்டம்பரில் லெய்செஸ்டர் பகுதியில் இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியின்போது இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் நடந்த மோதலுக்குப் பிறகு இந்து தேசியவாத தீவிரவாதம் குறித்து பிரிட்டிஷ் அரசு கவனம் செலுத்தி வருவதாக பாலிசி எக்ஸ்சேஞ்ச் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் கடந்த 2023-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையிலேயே இந்து தேசியவாதத்தை சேர்க்காதது தவறு என்றும் பாலிசி எக்ஸ்சேஞ்ச் தெரிவித்துள்ளது.
லெய்செஸ்டரில் நடந்த கலவரங்களின் போது இஸ்லாமிய மற்றும் இந்து சமூகங்களுக்குள் எழுந்த முக்கிய குரல்கள், உள்ளூர் சமூகங்களிடையே ஏற்பட்ட பதற்றத்தை சந்தர்ப்பவாதமாகப் பயன்படுத்திக் கொள்வதிலும் வெறுப்பைத் தூண்டுவதிலும் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தன என்று பிரிட்டன் அரசின் அறிக்கை குறிப்பிடுகிறது.
மேலும், “இந்து தேசியவாத தீவிரவாதம் என்பது இந்து மேலாதிக்கத்தை ஆதரிக்கும் ஒரு தீவிரவாத சித்தாந்தமாகும். மேலும் இந்தியாவை ஒரு இந்து நாடாக மாற்ற முயல்கிறது. இந்துத்துவா என்பது இந்து மதத்திலிருந்து வேறுபட்ட ஒரு அரசியல் இயக்கமாகும். இது இந்திய இந்துக்களின் மேலாதிக்கத்தையும் இந்தியாவில் இந்து ராஷ்ட்ராவை நிறுவுவதையும் ஆதரிக்கிறது.
இந்து மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கு இடையிலான பதற்றங்கள் வெளிப்படையாக தெரிகின்றன. லெய்செஸ்டரில் நடந்த நிகழ்வுகள், தவறான தகவல்கள் ஆஃப்லைன் செயல்பாடுகளில் எவ்வாறு பங்கு வகிக்கக்கூடும் என்பதைக் காட்டுகின்றன” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
காலிஸ்தான் ஆதரவு குறித்து குறிப்பிடும்போது, சீக்கியர்களுக்கென தனி நிலம் கோருவதற்கு ஆதரவளிப்பது தீவிரவாதம் அல்ல. ஆனால் அந்த ஆதரவு வன்முறைக்கு வழிவகுக்கும்போதுதான் பிரச்னை உருவாகிறது என்று அந்த அறிக்கை கூறுகிறது.
மேலும், காலிஸ்தான் இயக்கங்களுக்குள் தீவிரவாத அமைப்புகள் அதிகரிப்பு, குறிப்பாக குழந்தை பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக முஸ்லிம் சமூகங்களை மோசமான சித்தரித்தல், பிரிட்டிஷ் மற்றும் இந்திய அரசுகள் இணைந்து கூட்டுச் சதியில் ஈடுபடுவதாக கூறும் சதி கோட்பாடுகள், கனடா மற்றும் அமெரிக்காவில் சீக்கியர்களுக்கு எதிராக நடந்த வன்முறையில் இந்திய அரசின் பங்கு ஆகிய குற்றச்சாட்டுகள் ஆகியவற்றில் காலிஸ்தான் ஆதரவு இயக்கங்கள் பங்களிப்பதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
இன்னொரு பக்கம் இந்த அறிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள பாலிசி எக்ஸ்சேஞ்ச் தரப்பு, இந்த அறிக்கை தேசிய பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் இஸ்லாமிய தீவிரவாதத்துக்கு குறைந்த அளவே முக்கியத்துவம் கொடுத்திருப்பதாக குற்றம்சாட்டுகிறது. அதாவது அறிக்கையில் இதற்காக வெறும் ஒரு பக்கம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது என்பது அவர்களின் வாதம்.
கடந்த 2018 முதல் இங்கிலாந்தில் நடந்த தாக்குதல் சம்பவங்களில் இஸ்லாமிய அமைப்புகள் 64 சதவீத சம்பவங்களுக்கு காரணம் என்று பிரிட்டிஷ் அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன. பிரிட்டனின் மிகவும் ஆபத்தான தீவிரவாத அச்சுறுத்தலாக இஸ்லாமிய தீவிரவாதம் இருப்பதற்கான மற்றொரு காரணம், வேறு எந்த வகையான தீவிரவாதத்தையும் விட இது கணிசமாக அதிக நிறுவன இருப்பைக் கொண்டுள்ளது, மசூதிகள், தனியார் பள்ளிகள், ஊடகங்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் குழுக்களை கட்டுப்படுத்துகிறது என பாலிசி எக்ஸ்சேஞ்ச் கூறுகிறது.
இந்த அறிக்கை லீக் ஆனது குறித்து உள்துறை அலுவலம் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறும்போது, “நாடு எதிர்கொள்ளும் சவாலை விரிவாக மதிப்பிடுவதற்கும், தீவிரவாதத்தை எதிர்கொள்வதற்கான ஒரு புதிய அணுகுமுறைக்கு அடித்தளம் அமைப்பதுமே இந்த அறிக்கையின் நோக்கம். இதன் மூலம் மக்கள் வெறுப்பு சித்தாந்தங்களை நோக்கி ஈர்க்கப்படுவதை தடுக்க முடியும். இதில் பிரதானமாக இருப்பது இஸ்லாமிய தீவிரவாதமும் தீவிர வலதுசாரி சித்தாந்தங்களும் ஆகும். இந்த அறிக்கை இன்னும் அரசாங்கத்தால் முறையாக அங்கீகரிக்கப்படவில்லை. இது தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகளை நாங்கள் பரிசீலித்து வருகிறோம்” என்றார்.
எனினும் அறிக்கையின் எந்தப் பதிப்பு வெளியே கசிந்தது என்பது முழுமையாகத் தெரியவில்லை என்றும், அதன் கூற்றுக்கள் அரசாங்கக் கொள்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்றும் இங்கிலாந்து உள்துறை அலுவலகப் பாதுகாப்பு அமைச்சர் டான் ஜார்விஸ் தெரிவித்துள்ளார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs